செந்நாக் கொண்டு பாடாமல்,
செம்மை வழியில் நடவாமல்,
நன்னாள் வந்தது அறியாமல்,
நாட்கள் வீணே கழிப்பீரோ?
எந்நாள் மட்டும் பொய்களின்பின்
ஏவல் செய்தே மாய்வீரோ?
‘மன்னா’ இயேசு முன்நின்று
மகிமை பெறவே வாரீரோ? 1
சுத்த மனத்தால் உமையுள்ளே
சோதித்து அறிந்து வேண்டீரோ?
நித்தம் எமது குறைதீர்ப்பார்,
நிழலின் கீழே வாரீரோ?
சித்தம் அவரின் முகம்நோக்கிச்
செலுத்தி, நம்பிக் கேளீரோ?
புத்தம் புதிய ஒளிகூட்டிப்
பொலியச் செய்யும் அவர்முகமே! 2
எவருக்கு அவரை எதிர்க்கவரும்?
எல்லாம் அவரே கொடுக்கவரும்!
தவறே துன்பம் கொண்டுதரும்!
தம்முள் திருந்தும்! கருணைவரும்!
சுவராய்க் கரையாய்ச் சமுத்திரமும்
சுவடுகள் காட்டும்! வழிநடத்தும்!
உவராய், உப்பின் சாரமதாய்
உலகில் நடந்து நலம்சேர்ப்பீர்! 3
‘வாழ்வின் பொருளை’த் தேடிடுவீர்!
வளங்கள் கூட்டிப் பெருக்கிடுவீர்!
தாழ்வின் கதவை மூடிடுவீர்!
தங்கும் மகிழ்வு கோடிவரும்!
ஆழ்மனத் துள்ளே அமைதிவரும்!
அதனால் படுக்க உறக்கம்வரும்!
கேள்மனம் கொண்ட கர்த்தரினால்
கேடுகள் நீங்கும்! சுகம்தங்கும்! 4
சகிப்பவர் கண்டு கொளவாரும்!
சாரமற் றவைபின் செலல்தீரும்!
மகிமையின் நேரம் அறிந்திடுமே!
மனத்துள் திருந்திச் செயல்படுமே!
நகச்சுற் றைப்போல் பாவமுமே!
நலமுற இறைவன் முன்விழுமே!
அகத்தைச் சுத்தி அவர்செய்வார்!
அழுது திருந்தி வழிபடுமே! 5