Friday, December 23, 2011

அன்பால் கூடி ஒன்றாய் வாழ்வோம்..!

உன்னுள் இருக்கும் திறமைகள் தம்மை
        உணர்ந்து பெருக்க வேண்டும்!
உன்னை மட்டும் உயர்த்த எண்ணி
       உழைத்தல் தவிர்க்க வேண்டும்!
தன்னை மட்டும் வளர்ப்பதை நல்ல
       தகப்பன் விரும்ப மாட்டார்!
தன்னோடு உலகைத் தாங்கும் செயலைத்
       தலைவன் வெறுக்க மாட்டார்!                                    01

கள்ளமும் கபடும் உழைப்பிற் காட்டிக்
         கைத்திறன் அழிக்காதே!
பள்ளமும் மேடும் பார்த்திட மாறும்,
         படைத்தவன் விளையாட்டே!
உள்ளதைப் பெருக்கி உலகுக்குக் கொடுக்க
         உண்மையில் மறவாதே!
தள்ளியும் சேர்த்தும் வைப்பவன் கைகளில்
         தண்டனை தப்பாதே!                                                    02

உலகுக் காக வாழ்வதை விரும்பு!
          உனக்கென வாழாதே!
கலகக் காரக் கைகளில் உன்னைக்
           கருவியென் றாக்காதே!
பலவகைத் தாலந் துகளின் நல்ல
            பலன்களை மறுக்காதே!
பலனைக் கேட்டு வருவார் கர்த்தர்;
            பயம்,உனைக் காவாதே!                                          03

பின்னால் எல்லாம் விட்டே போவோம்
            பிறருக்கு ஈயாப் போதும்!
உன்பால் ஏதும் ஒட்டாது ஓடும்!
            உறவும் கைவிட்டு ஓடும்!
தன்னால் ஏதும் வந்த தில்லை!
            தந்தவை கர்த்தர் ஈவே!
ஆன்பால் கூடி ஒன்றாய் வாழ்வோம்!
            அவருள் உண்டும் வாழ்வே!                                  04
                                   <0>     

மீண்டும் வருவார் கர்த்தர்..!

கட்டை மீறிக் கனியை உண்ணக்
                 கண்டனம் செய்தார் என்றாலும்
கட்டிக் கொள்ள உடையைத் தந்து
                 கருணை செய்தவர் கர்த்தரே!

வெட்டிக் கொன்றான் ‘கேயீன்’ தன்னை,
                  வெளியில் அலைய விடுமுன்னர்;
பொட்டில் குறியைப் போட்டுத் தந்தே
                  பாது காத்தவர் கர்த்தரே!

ஏனிம் மனிதரைப் படைத்தோம் என்றே
                 எண்ணி நீரால் உலகழிக்கத்
தானே நினைத்தும் ‘நோவா’ மூலம்
                 தந்தார் தோணி கர்த்தரே!

வானை நிலனைப் பாலவாம் உயிரை
                 வஞ்சித்து அழிக்கும் மானிடரைத்
தானே மீண்டும் தட்டிக் கேட்கத்
                தரணியில் வருவார் கர்த்தரே!
                                      <0>

முன்னிலும் புதிய ஆண்டு தாரும்..!

காலங்கள் தோறும் கனமழை வந்து
          களிப்புக் கூட வேண்டும்               -இறைவா
          கனிவு சேர்க்க வேண்டும்.
ஓலங்கள் மறி ஒற்றுமை தேறி
          உதவி வாழ வேண்டும்                  -இறைவா
          உந்தன் ஆசி வேண்டும்!

ஒப்பனை இல்லா உணர்வுகள் ஒன்றி
          உயிர்கள் களிக்க வேண்டும்       -இறைவா
          உலகு செழிக்க வேண்டும்!
சொப்பன மில்லா  சுவர்க்கமும் இங்கே
          சுயத்தில் தொடங்க வேண்டும்  -இறைவா
          சுற்றிப் பெருக வேண்டும்!

நாடி ஓடியே நல்ல செல்வமே
           நாளும் சேர்க்க வேண்டும்          -இறைவா
           நலிவு போக்க வேண்டும்!
பாடி ஆடியே பரமன் உன்முனே
           படையல் போட வேண்டும்!       -இறைவா
           பகிர்ந்து உண்ண வேண்டும்!

தன்னை உணார்ந்து தவறுகள் போக்கத்
           தயவு செய்ய வேண்டும்!               -இறைவா
           தடைகள் நீக்க வேண்டும்!
முன்னிலும் புதிய ஆண்டினை எங்கள்
            முன்பு கூட்ட வேண்டும்!               -இறைவா
            முழுமை யூட்ட வேண்டும்!

                                        <0>

Thursday, December 22, 2011

ஏசுவைப் பாடெம்பாவாய்..!

1செங்கழுநீர் தான்மலரச் 2சிற்றாம்பல் வாய்மூடச்
செங்கற் பொடி,உடையார் செவ்வாய் துதிபாடப்
3பங்கமிலா நன்னெறியான் பாதம் பணிகின்றோம்!
அங்கமெலாம் மூடி அணியிழையே தூங்குதியோ?
வங்கம் கதிர்தாண்டி வந்துனையும் தானெழுப்ப
4இங்கிதமோ? எம்பெருமான் யேசுநம் பாவமறச்
5செங்குந்தம் உவாங்கிச் சிந்தியநீர் வான்சிவக்கும்!
இங்கெழுந்து வந்தவ் 6இரங்கலைப்பா டெம்பாவாய்!                  01

(1-சிவந்த குவளை மலர்; 2-சிறிய குமுத மலர்; 3-பாவமிலா;
 4-இனிமையோ; 5-இரத்தத்தால் சிவந்த ஈட்டி; 6-அருளுதலை;)

வேதப் பொருள்பாடி விண்ணிறங்கி வந்திங்குப்
பாதம் பதித்துற்ற பாடுகளை யாம்பாடி
7ஓதும் பொருள்கேளா உன்செவியும் வன்செவியோ?
போதும் உறக்கமிது! 8போதே  எழுந்திலையோ?
9வாதங் கடந்தவனின் 10வாட்டத்தில் நம்பாவத்
தீதும் கரைந்ததுபோல் 11தேய்மீன்கள் தாம்மறையும்!
சோதி அவரெழல்போல் சூரியனும் தானெழுவான்!
12பேதாய் அவர்புகழைப் பேசிப்ப டெம்பாவாய்!                              02

(7-சொல்லும்; 8-பொழுதே; 9-தர்க்கம்; 10-துன்பத்தில்
11-மறையும்விண்மீன்கள்;12-சிறுபெண்ணே! )

ஆதியில் தேவனாய், 13ஆர்த்தெழுந்த வார்த்தையாய்,
வேதமாய்ச் சோதியாய் விண்ணிறாங்கி வந்திங்கே
14ஏதமே போக்கும்,எம் ஏசுபிரான் பொற்கமலப்
பாதமே சேரநம் பாவங்கள் தீருமெனக்
கீதமே பாடினோம் 15கீர்த்திபல பேசினோம்!
பூதமே போற்துயிலும் 16பெற்றிதனை விட்டெழவே
பாதமே 17நோகுமோ? பஞ்சாணையுன் காதலோ?
18சீதமே நீக்கி,எமைச் சேர்ந்தேபா டெம்பாவாய்!                               03


(13-ஒலித்த;14-கேடுகள்;15-புகழ்ச்சிகள்;16-குணத்தை;
 17-வலிக்குமோ;18-உயிர்வேதனை;)

19பாசம் பழத்தின்மேற் பாவையவள் வைத்திறைவன்
20நேசம் இழந்தகதை நீயறிவாய்! என்னேஉன்
வேசமோ? 21பாம்பின்வாய் வீழவும் எண்ணினையோ?
ஈசன் இறைவனெம் ஏசுவின் பேர்பாடி
வாசலிடை வந்துள்ளோம் வந்துன் கடைதிறவாய்!
22தேசன் 23பரதீசில் தேர்ந்துனக்கும் ஓரிடத்தைப்
பாசமுடன் கேட்டுப் பரமனிடம் 24பெற்றசீர்
25 பூசை பலசெய்து புகழ்ந்தேபா டெம்பாவாய்!                                    04

(19-அன்பு; 20-நட்பு(ஆர்வம்);21-அரவமெனும் சாத்தான்;
22-ஒளிமயமானவன்;23-விண்ணுலகில்; 24-பெற்ற சிறப்பு;
25-ஆராதனை; போற்றிகள்;)

தன்னை நினைத்தும் தனக்காக வேவாழ்ந்தும்
என்ன கிடைத்தும் எதற்குமே நன்றிசொலார்
என்னே பிறவி எடுத்திட்டோம்? ஏன்வாழ்வோம்?
என்றே சலிப்பில் இயலாமல் கைகூப்பி,
முன்வந் தழுது முகம்பார்க்க எங்கேயோ
மின்ன வருமொளியின் மேலாய் விரைந்துவந்து
அன்னை தனிற்பரிந்து அன்பால் உதவிடுவான்
என்னேசு வின்கருணை ஏத்திடப்பா டெம்பாவாய்!                               05

சீவனையே அப்பமாய் உண்ணக் கொடுத்தாரத்
தேவனையே பாடித் திருமுழுக் காடிவர
ஆவலுடன் வந்தோமுன் 26ஆடிக் கதவருகே!
பாவமெலாம் தீர்க்கும் பரமனவன் பேர்பாடிக்
கூவியழு வார்குரலும் கீர்த்தனையும் கேட்டிலையோ?
சேவித் தவர்பாதம் சேர்ந்தோர்க்கு அருளேசு
சாவையும் போக்கிடுவார்! சார்மகிச்சி எண்ணிலையோ?
பாவாய் எழுந்துடனே பாடேலோர் எம்பாவாய்!                                     06

 (26-கண்ணாடி பதித்த)

வையத்து வாழ்வீர்காள்!நாமும்நம் 27பாவைக்குச்
செய்யும் கிரியைகளைக் கேளீரோ மைவிலகும்
வைகறையே 28தோன்றி 29மடிபோக்க நீராடி
மெய்யடியார் கீர்த்தனையில் மெல்ல நனைந்தவராய்ப்
பொய்யுரையோம் வாயால்; பிறர்பொருளை இச்சியோம்!
மெய்விற்கோம்! யேசுவிற்கே மெய்யாய்ப் பணிசெய்வோம்!
அய்யனவன் பேரை அகிலமெலாம் கூறிநாம்
உய்யுமாறு எம்மோடு உகந்தேபா டெம்பாவாய்!                                     07

(27-நோன்பு;விரதம்; 28-வெளிப்பட்டு; 29-சோம்பல், சோர்வு;)

கன்னம் சிவக்கக் 30களிமயக்கிற் கட்டிலின்மேற்
31சின்னம்போல்த் தூங்கும் சிறுகிளியே! 32சேணாட்டை
முன்னம் விடுத்தே முழுதும் நமக்காகக்
கன்னி வயிற்றுதித்தும் கற்பாறை மேற்சிலுவை
தன்னில் உயிர்மரித்தும் தானெழுந்த அற்புதத்தைப்
பன்னுவார் கூடியே பாடிடுவார்! கேட்டிலையோ?
இன்னும் உறக்கம் இனிக்குமோ? எங்கள்,இக்
கன்னல்த் தமிழும்தா லாட்டோசொல் எம்பாவாய்!                               08

(30-இன்ப; 31-சிறுமை; 32-விண்ணுலகை;)  


33ஆவடையில்த் தோன்றி அகிலம் 34புரந்திட்ட
தேவன் திருச்சுதனைத் தேடக் கிடைப்பவனை,
ஏவுவதற் கில்லாமல் ஏவல் தலையேற்றுப்
பாவம் நமதழியப் பாடுகள் பட்டவனைக்
35காவு படமரித்துக் காக்கும் இறைவித்தைக்
கூவிப் பறைசாற்றிக் கொண்டாடிப் பாடுகின்றோம் !
ஓவியம்போற் பஞ்சணைமேல் உன்னுறக்கம் ஒப்புவதோ?
தாவிவா! நீராடு! தமிழேபா டெம்பாவாய்!                                                  09

(33-மாட்டுத் தொழுவம்; 34-காத்திட்ட; 35-பலியாக;)


தானே மனிதனாய்த் தாழ்ந்தும் வருந்தியும்
ஊனை உயிரை உலகுய்யத் தந்தவனை,
வானும் நிலனும் வழுத்துமெய்த் தேவனைக்
கானமும் படிக் கரைந்துருகி எம்முடனே
ஏனையோர்  ஏத்திவர ஏனின்னும் தூங்குதியோ?
மானே! மணிக்கட்டில் மாயம் பிடித்துளதோ?
தானுங் கிறித்தவளோ? தம்பிரான் ஏசுபுகழ்
ஏனோர்க்கும் கேட்கவந்து 36இன்னேபா டெம்பாவாய்!                       10

( 36-இப்பொழுதே)
===                ===           ===          ===           ===          ===              ===

Tuesday, December 6, 2011

உழைப்பவர் உயர்வு..அல்லது உழைப்பீர்! உயர்வீர்!




                வள்ளியம் எனுஞ்செ ருக்கு
    வாய்த்தவர் உழைக்கின் றோரே!
தள்ளினும் தள்ள வொண்ணா
      தகவவர் தகவே! அன்பின்
உள்ளமும் அவர்க்கே! செல்வ
      ஊற்றுமக் கைகள் தாமே!
அள்ளிநற் பூக்கள் தூவி
      அவரடி பணிவன் நானே!                                    

 சாதனைகள் எதனாலே சம்ப விக்கும்?
      சாட்சிசொல நினைப்போரே முன்னே வாரும்!
வேதனைகள் படுவதிலா? விளையாட் டாக
      வெறு[ம்]முயற்சி செய்வதிலா? விரும்பிச் செய்தோம்
ஆதலினல் என்பதிலா? அதிநூ லோர்கள்
      அறிவினிலே செயல்பட்டா? அதிட்ட தேவி
சீதனமாய்க் கொடுத்ததிலா? சிரமந் தாங்கிச்
      செய்தபெரும் உழைப்பாலே தானே யன்றோ?           

ஆண்டவர் தன்னைப் போற்ற
      ஆளிலா திருந்த நாளில்,
மாண்டதோர் ஞாலம் செய்து
      மனிதனை அதனுள் வைத்தார்!
வேண்டிய செய்து தந்து
      விளக்கினார் உழைப்பின் மாண்பை!
வேண்டுமோ விளக்க?, வித்தாய்
      விளங்குவார், உழைப்போர் சாட்சி !                     

சத்தியைப் போற்றிப் பாடும்
      சந்ததி உழைப்போர் கூட்டம்!
புத்தியைப் போற்றி நாட்டில்
      புதுமைகள் படைக்கும் கூட்டம்!
சித்தியைக் கையிற் கொண்டு
      சிறப்பவர் இவர்கள் கூட்டம்!
நத்தியே இவர்பின் செல்ல
      நமக்கினி உயர்வே கூட்டம்!                                  

                அன்பினில் கனிந்த பேர்கள்!
                    ஆண்மையில் நிறைந்த பேர்கள்!
                துன்புகண் டொதுங்கி டார்கள்!
                   தூங்கிடாக் கையி னார்கள்!
                இன்பமே கூட்டு வோர்கள்!
                   இவர்க்கிணை இல்லாப் பேர்கள்!
                முன்பு,தம் உழைப்பை வைத்து
                    மூவுல கெழுப்பும் ஆட்கள்!                                                             

               வீழ்ந்தாலும், பிறர்வீழக் காண மாட்டார்!
                  வீணருக்கும், செல்வருக்கும் அடிமை யாகார்!
               தாழ்ந்தாலும் பிறருயரத் தாங்கும் மேலர்!
                  தரமிழந்து போகாநல் லுழைப்பின் சீலர்!
               வாழ்ந்தாலும், பின்னாலும், வளமே நல்கி
                   வழிநடத்திப் போகின்ற வள்ளல், தாளர்!
                சூழ்ந்தார்முன் னாலு[ம்]முகம் சுளிக்கா அன்பர்!
                   சுற்றியுள்ள உயர்வுகளுக் கிவரே மூலர்!                                     

                 எங்கிருந்து வருமிந்த உழைப்பின் கூட்டம்?
                    எவர்கொடுப்பர் இவர்கூலி? என்போ ரேநான்
                 உங்களுக்குச் சொல்கின்றேன் ஒன்று : நேற்றை
                     உழைப்பாளி இன்றுமுத லாளி !' என்றும்
                 சங்கமிக்கும் செல்வமெலாம் உழைப்பின் முன்னே!
                    சாட்சிசொலும் சரித்திரமே! சமூகத் துள்ளே
                 உங்களுக்கும் உழைப்பொன்றே உயர்வுக் கான
                     உண்மைமிகும் அழைப்பாகும்! உழைப்பீர்! வெல்வீர்!             

உழைப்பின் உயர்வு: (குறள் பாக்கள்)



01.   உண்டால் அம்ம! உலகம், உழைப்பவர்
        கொண்டாடு மட்டும் குறித்து!                                                                  

02.  ஆளும் அரசுக்கும் ஆணி உழைப்பவர்;
       வீழும் அவரின்றி வேந்து!                                                                                

03.   சூழும் நலங்களே சொல்லாவோ? வாழும்
        உழைப்பே உயர்வுக் கழைப்பு!                                                                       

04.   அம்ம! அரிவை முயக்கினும் நன்றுகொல்!
        தம்மை உயர்த்தும் உழைப்பு!                                               

05.   பாடுற்றார் உண்டு பலரே; உழைப்பினால்
        கேடுற்றர் உண்டோ?சொல் கேட்டு!                                          

06.   அன்பும் அறமும் அமைந்தோர்க்கே நல்லுழைப்பின்
        இன்பும் பயனும் இயல்பு!                                                   

07.   உழைப்பெனும் ஊட்டினால் 1ஓரைந்தும் காப்பான்
        அழைப்பிலா வானோர் விருந்து !                                           

08.   உழைப்பே உயர்வுக் கழைப்பாம்! உணர்ந்து
        களிப்போம் களைப்பைக் களைந்து!                                          

09.   கோளில் உழைப்பைக் கொடுப்பவர் தாளினை
        நாளும் வணங்குவோம் நாம்!                                                

      [1. தான், தன்குடும்பம், தன்தொழிலகம், சமூகம், நாடு -என்ற ஐந்து]

உழைப்பு உயர்வுக்கு அழைப்பு -அல்லது- உழைக்கும் வர்க்கம்!



 ( வாசல் கவியரங்கக் கவிதை- )

வீணரைச் செல்வரை வீழ்ந்திவர் வணங்கிலர்!
ஆணவக் காரருக்கு அடிதரத் தயங்கிலர்!
கோணலில் உதவிகள் கொடுப்பதில் சுணங்கிலர்!
காணலில் இவர்களின் கைபடா நலங்களே!

சோர்விலும் தோழரைச் சுறுசுறுப்பு ஊட்டுவர்!
பேர்பெறும் படைப்புகள் பின்வரச் செல்பவர்!
ஆர்வமும், உழைப்பும் அமைதியும் நாடுவர்!
தேர்வடம் இவர்பின், தேசமுன் னேற்றமே!

வேட்ட உரிமைகள் மறுக்கப் படினும்
கேட்ட சலுகைகள் கிடைக்காப் போதும்,
கோட்டம் உழைப்பில் குறுக்கிட விட்டிலர்
பாட்டில் இவரைப் பாடியே மகிழடி!

சத்தியைப் பாடும் சந்ததி இவரடி!
புத்தியால் படைப்பர் புதுமைகள் இவரடி!
சித்தியின் கைகளால் சிறப்பவர் இவரடி!
நத்தியே பின்செல நமக்கும் உயர்வடி!

அன்பில் கனிந்தவர்! ஆண்மையில் நிறைந்தவர்!
துன்புகண் டொதுங்கார்! தூங்காக் கையினர்!
முன்புவைத் துழைப்பை மூவுல கெழுப்புவர்!
இன்பமும் இவர்பின்! எழுந்திநீ செல்லடி!

சாதனை இவர்க்குச் சம்பவம் ஆமடி!
வேதனை இவர்க்கு விளையாட் டாமடி!
சோதனை இவர்க்குச் சொர்க்கப் படியடி!
சீதனம் நலங்களே சிரித்து,பின் செல்லடி!

வீழினும் பிறரது வீழ்ச்சியை எண்ணிலர்!
தாழினும் பிறர்துயர் தாங்கிடும் மேலவர்!
சூழினும் சூழ்பவர் சுகத்தையே நாடுவர்!
வாழினோ உழைக்கும் வர்க்கமாய் வாழடி!

உழைப்பே பூமியில் உரிமைக் கழைப்பு!
உழைப்பே மனிதருள் உறவுக் கழைப்பு!
உழைப்பே மனிதரின் உயர்வுக் கழைப்பு!

ஃஃஃஃஃ

வழிநடத்தும் அடுத்த ஆண்டும்!




பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றப்
       பிறர்க்குதவி இறைத்தொண்டாய் ஆற்ற,
அறிவின்கண் அகங்காரம் நீக்க,
       ‘அடுத்தவரின்' பிழைமறந்து தூக்கத்
தெரிந்தவர்பால் கோடாமை ஊக்கித்
       தெளிந்தமதி யுள்ளவனாய் ஆக்கி,
வறியனெனை உயர்த்திடுவார் ஏசு!
       வாயார அவர்புகழைப் பேசு!          

செறிந்தபொருள் கவிதையிலே வேண்டு மென்றால்
       சிந்தையிலே அதுமுதலில் பிறக்க வேண்டும்!
எறிந்தபொருள் கீழிறங்கும் இலகு போல
       எடுத்தோத, அதுகாதில் இறங்க வேண்டும்!
அறிந்தவர்கள் மட்டுமிலா தனைத்துப் பேரும்
       அனுபவிக்கும் திறன்வேண்டும், ஆர்வம் வேண்டும்,
அறிந்தவனே! ஏசப்பா! அன்பின் ஊற்றே!
       அடியேனை வழிநடத்தும்டுத்த ஆண்டும்!