Wednesday, February 1, 2012

இயற்கையுடன் கூடி இருப்போம்..!



{கும்மிடிப்பூண்டியில் ஒரு புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்க ரூ,330 கோடி அனுமதி-செய்தி}

நீர்வருமப் பாதைகளைத் தூர்வாரி,
          நிலம்பிடித்த பேதைகளை உடன்வாரிப்
பேரளவில் வீணாகும் மழைநீரைப்
          பிடிப்பதற்கு நீர்த்தேக்கம் உருவாக்கி
ஊர்பிழைக்க வழிசெய்தால் உதவிடுவீர்!
          ஒழுங்காக அதைக்காக்க முன்வருவீர்!
தேரிழுக்க வருபவர்போல் திட்டமுடன்
          தேர்நிலைக்கு வருவதற்கே உதவிடுவீர்!

சீருடன்நாம் வாழ்வதற்கு நீர்வேண்டும்;
          சீறிவரும் மழைநீர்க்கும் புகல்வேண்டும்!
தூரெடுக்கும் பணியினையே இலவசமாய்த்
          தொடங்கிடவா யாருமுமை அழைக்கிறர்கள்!
ஏரிகளைக் காப்பதற்கே எழுந்திடுவீர்!
          ஏரிகளில் வீடெடுக்க மறுத்திடுவீர்!
மாறிவருங் காலத்தை உணர்ந்திடுவீர்!
          மக்களது நலமெண்ணி மாறிடுவீர்!

                                 (வேறு)
 சாக்கடைநீர் சுத்தமாக்கப் பட்ட பின்பே
    சார்ந்துள்ள ஏரிகளில் கலக்க வேண்டும்!
ஊர்க்கடையில் இச்சுத்தம் செய்தல் வேண்டி
   ஒழுங்கான நிலையங்கள் அமை வேண்டும்!
போர்க்கொடிகொண் டேரிகளைப்  புதுக்க வேண்டும்!
   பொன்னான நீர்தேக்கிப் பொலிய வேண்டும்!
நீர்க்குறையால் அண்டைமா நிலங்கள் பக்கம்
       நின்றுகை ஏந்தாதே நிமிர வேண்டும்!

                   (வேறு)
குப்பைகொட்டும் இடமல்ல ஏரி!
          குடிவாழும் ஆதாரம் ஏரி!
கப்படிக்கும் சாக்கடையா ஏரி!
          கழிவுகளின் சேரிடமா ஏரி!
துப்புரவின் அடையாளம் ஏரி!
          தூரெடுக்க உதவுவதும் நீதி!
இப்பொழுதே இயற்கையுடன் கூடி
          இருப்பதற்குத் தொடங்கிடுவோம், நாடி!
                            <0>

நூற்பொருள்




பயிற்சி செய்!
அயற்சி தவிர்!
முயற்சி 
திருவினை!
உயர்ச்சி 
தருபொருள்!
நுகர்ச்சி 
பிறர்க்களி!
நூற்பொருள் 
இவையே!


28-1-12 பொங்கல் புத்தாண்டு.!



உழைத்துச் சேர்த்த நெல்லைக் கூட்டி
உறவு மார்கள் முகத்தைப் பார்த்தே
          உண்ணும் நாளிது!
உழைப்பில் வந்த களைப்பைப் போக்கி
உறவில் கிட்டும் சுகத்தை நம்பி
          உயிர்க்கும் நாளிது!
இழைத்த செயலில் உதவி யாக
இருந்த மாடு கன்றைக் கூட்டி
          இனிக்கும் நாளிது!
பிழைத்து வாழ்வ தற்கு நன்றி
பிறந்த பூமி பரிதி முன்பு
           படைக்கும் நாளிது!
              
பழைய நாட்கள் எண்ணிப் பார்த்துப்
பதுக்கி வைத்த பகைமை போக்கப்
        பழகும் நாளிது!
விளைவு நல்ல தாக வேண்டி
விரும்பு நல்ல செயல்கள் செய்ய
        விழையும் நாளிது!
உழவு மாட்டை முன்,நி றுத்தி
உயிர்கள் யாவும் வாழ வேண்டி
        உதவும் நாளிது!
பொழுது விடிந்த தைப்போல் நன்மை
பொங்கும் என்ற உணர்வு நெஞ்சில்
        புரளும் நாளிது!
              
எழுது பொருட்கள் எடுத்து வைத்தே
இறைவ னாக அவற்றை எண்ணி
          இறைஞ்சி நின்றதும்
பழுது நீக்கும் பொருள்து லக்கிப்
படைய லிட்டு மகிழ்ந்து நின்று
          பார்த்த நாட்களும்
உழுது கூட வாழ்ப வற்றை
உணர்வி னோடும் நெகிழ்ந்து போற்றி
          உணரும் நாட்களும்
முழுது மாக இயற்கை யோடு
முரண்ப டாத தமிழர் வாழ்வை
           முரலும் நாட்களே!

எழுக இங்கு புதிய நாட்கள்!
எழுக நாளும் புதிய எண்ணம்!
          எழும்,அந் நேமிபோல்!
எழுக இங்கு புதிய பூமி!
எழுக உயிர்கள் வாழும் நீதி!
         எழுக! சாமியே
எழுக என்ற எண்ண மாகும்!
எழுக இன்பம் என்ப தாகும்
         எவ்வு யிர்க்குமே!
கழிக இதனின் மாற்று நோக்கும்!
கரங்கு பூமி புதிய ஆண்டு
          காணப் போகுமே!