Thursday, October 27, 2011

01/ ’65 தியாக நிலை !



வசந்த காலம் தனில்மலரும்
  வண்ணப் பூக்கள் பலவெனினும்,
ஒசந்த மரத்தை அவைவிட்டே
  உதிரத் தவறி வாழ்வதில்லை;
நிசமென் றறிவாய் இவ்வாழ்வும்
  நீர்மேல் எழுத்தாம் என்பதுவும்!
கசந்து வீணே பயனில்லை!
  காலம் அறிந்து செயலாற்று!                                                 01

நீயே யன்றி இவ்வுலகில்
நித்தம் தோன்றும் எல்லோரும்
போயோர் முடிவை எய்துவதால்
போதும் வெறும்வாழ்வு எனல்வேண்டாம்!
காயாய்ப் பழமாய்ப் பலமலர்கள்
கனிந்து மாயும் நிலையெண்ணு!
தாயாய் மனிதர் பலர்வாழத்
தன்னால் ஆகும் செயல்பண்ணு!                                          02

ஆரும் இங்கே நிலைப்பதிலை;
அகிலம் அறிந்தது இந்தநிலை!
சேரும் பொருட்கள் தொடர்வதிலை!
சேர்ந்தோர் பிரிவும் இயற்கைநிலை!
ஊரும் நாடும் உயரநினை!
உலகம் ஒன்றாய் வாழமுனை!
ஊறும் அன்பில் உதவநினை!
ஊட்டும் அதுவே தியாகநிலை!                                             03
                                    †

’65 நல்லைநீ இல்லை நெஞ்சே..!

உட்பகை புறப்ப கையால்
உறுதுயர் கொண்ட நாடு
நட்புகை வாரா நின்று
நலிவுறும் இந்த வேளை
உட்புகும் துயர்க ளைந்தே
உவப்புநா டேற்க ஏதும்
பெட்பொடு செய்தல் எண்ணாய்
பெண்ணினுக் கழிவாய் நெஞ்சே!                         01

கொல்லுமோர் சிந்தை கொண்டு
  கூற்றெனப் பகைவர் வந்தார்!
புல்லிடும் வெங்க ளத்தில்
  புண்படப் புண்ப டத்தம்
சல்லடை மேனி சாய்த்துச்
  சத்தியங் காகும் வீரர்
அல்லலை எண்ணாய்! அன்பின்
  அழகியை எண்ணல் ஏனோ?                                 02

எல்லையில் பகைவர் கூட்டும்
  இன்னலை ஏற்று வீரர்
அல்லலுற் றலையும் சேதி
  அறிந்தும்,உன் காதற் பெண்ணின்
முல்லைவெண் முறுவல் எண்ணி
  முன்வராள் என்று மாய்ந்து
நெல்லுமி யாவாய் நெஞ்சே!
  நல்லையோ நீயே சொல்லு!                                03

சத்தியம் முன்னே தள்ளச்
  சாவுமுன் நின்றே கொள்ளத்
தத்தமாய் உயிரைப் போக்கித்
  தாயர்நா டிதனைக் காக்க
நித்தமும் அழிவார் தங்கள்
  நினவுகள் மறந்தே உந்தன்
சித்திரைப் பெண்ணைச் சிந்தை
  செய்வதும் சிறப்போ நெஞ்சே!                            04

                                    †







’64. பகுத்தறிவால் ஆகும் பயன்..!

தன்னலம் வாழ்வு! பேசித்
தருக்கலே தொழிலாம்! சூழ்ச்சிப்
பின்னலே உள்ளம்! பேணும்
பெட்டியே தெய்வம்! வாழ்க்கை
நன்னெறி மடமை! நாவில்
மறைபொருள் திறமை! என்ற
இந்நிலை கொண்டு வாழும்
இவனொரு மனிதன் ஆமோ? 01

சுகமெனில் வரவு; சூழும்
துயரெனில் செலவு! வெற்றி
இகமதில் தானே வாழ்தல்!
இகழ்ச்சிகள் காற்றில்! நிற்கும்
புகழொடும் இகல்! அப் பாதை
போவதோ நட்டம்! என்றிச்
செகமெலாம் மாறு மானால்
சேருமோ இன்பம் தானே?! 02

[ இகல் –பகை; போர் ]

தனக்கென மரந்தான் வாழும்!
தன்னினம் மிருகம் கொல்லும்!
இனப்பற்று அவைகட் கில்லை!
இருப்பதோ அறிவில் ஐந்து!
மனப்பொருள் அவைகட் கேது?
மனிதனுக் கதுவொன் றுண்டே!
நினைத்ததும் ‘அவைகள்’ செய்யும்!
நிறுத்தபின் செய்வார் ‘மக்கள்’!

பகுத்தறிவு என்றொண் றுண்டு!
படைப்பினில் உயர்ந்தது அஃதே!
வகுத்தறி செயல்கள் உண்டு!
வாழ்க்கையின் பயனைக் கண்டு
தொகுத்தவர் மூடர் ஆமோ?
துணிந்திடு! அவரே தெய்வம்!
மிகுத்த,இவ் வறிவால் என்னாம்,
மிருகமாய்த் திரியப் போனால்?

                                  †

03/64 அம்மா ! அம்மா ..!


கனிகொண்ட விதையைப்போல் உன்னுள் என்னைக்
கனிவோடும் பஞ்சுடலால் மூடிக் காத்தாய்!
நினைவுள்ளே மாதத்தை எண்ணி எண்ணி
நிறைமேகம் கொடுமிடியுள் துளிர்த்தார் போல
இனைத்தென்று சொலவொண்ணாத் துயரில் பெற்றாய்!
எழுகதிர்முன் தாமரைபோல் இன்பங் கொண்டாய்!
சினந்தென்னைக் கடிகில்லாய்! சீரும் செய்வாய்!
சிறப்பான மகனென்றும் சொல்லிக் கொள்வாய்!

பெற்றெடுத்த குறையென்றும் எண்ண மாட்டாய்!
பேணியெனைப் பலவாறாய்ப் புகழ்ந்து கொள்வாய்!
நற்றவத்தின் மகனென்றும் சொல்லிக் கொள்வாய்!
நாட்டமெலாம் என்மேலாய்த் தூக்கம் விட்டாய்!
கற்றறிந்த புலவனுமே கருத்தைக் கூட்டிக்
காவியத்தை முடிக்குமுனர் படும்பா டெல்லாம்
உற்றவளாய் மனஞ்சலியாது எனைவ ளர்த்தாய்!
உலகில்யான் உயிர்வாழ ஓடாய்த் தேய்வாய்!

உன்னுளமும் யார்க்குவரும்! உன்போன் றோர்கள்
உள்ளதனா லன்றொஇம் மனிதர் வாழ்வும்!
தன்னுடலைப் பேணுதலைத் தானேன் விட்டாய்?
தன்னுயிரும் என்னுள்ளே ஒலிக்கக் கேட்டோ?
என்னுடலை நோய்பற்ற இருப்புங் கொள்ளாய்!
ஏதுக்கோ அறிகில்லேல் மருந்தும் உண்பாய்!
இன்னவையோ தாயேநீ எனக்காய்ச் செய்தாய்!
எங்கினியோ நான்காணல் இவைபோல் எல்லாம்!

பிறப்பாலும் துன்பத்தைத் தந்தேன்! அந்தப்
பிறப்பாலே இன்பத்தைக் கண்டாய்! எந்தன்
மறப்பாலும் மனத்தாலும் தந்தேன் துன்பம்!
மழலை,படு சுட்டியென மகிழ்ந்தாய் உன்னுள்!
சிறப்பாலும் பலவிட்டுத் தாய்மை கொண்டாய்!
சிந்திக்காப் பொறுமையிலோ நிலத்தை வென்றாய்!
இறப்பில்லாப் பெருங்குலமும் உனதே அம்மா!
இறப்பில்லாப் பெருமையெலாம் உனக்கே அம்மா!

                                                    †

12/64 விடைதந்தேன் ஆண்டே..!

காலத்தில் ஏவலைநீ தாங்கி வந்தாய்!
கண்ணாடி போலுன்னைக் காட்டி நின்றாய்!
ஞாலத்தின் சுழற்சியிலே நடனம் செய்தாய்!
நானிலமும் வாழ்ந்திட,உன் பாடு பட்டாய்!
மூலத்தின் கட்டளையை முடித்து விட்டாய்!
முன்னோர்க்கும் பின்னோர்க்கும் தொடர்பாய் நின்றாய்!
கோலத்தை அழகுசெய்யும் மாந்தர் இன்று
கூறாத விடைதருவேன் செல்வாய் ஆண்டே!

புத்தாண்டின் வரவெண்ணிப் பாடு வார்கள்!
புதிதான வாழ்க்கைதனை நாடு வார்கள்!
மத்தாப்பின் ஒளிபோல வானில் உள்ள
மங்காத மீன்களென எங்கள் வாழ்வில்
எத்தனையோ இன்பநிலை எல்லாம் தந்தாய்!
இருளதுவும் தோற்றாத நிலையில் வந்தாய்!
சத்தான நிகழ்வுகளே எம்முள் தங்கும்!
சற்றுமுளம் வருந்தாது செல்வாய் ஆண்டே!

                                           †



வாசல் கவியரங்குக் கவிதை – நாள்: 06-11-2011.



நேசக் கரங்கள் நீட்டியவர்
நிற்கும் சிலுவை தனைநோக்கிப்
பாசக் கைகள் தமக்காணி
பரிசாய்க் கொடுத்த நினைவேந்தி
வேசக் குறிகள் விலக்கி,உளம்
வெதும்பி, வருந்தித் திருந்தி,அவர்
வாசல் நின்று குழந்தையென
வரும்நாள் எண்ணிப் பணிகின்றேன்!

பூசல் மனங்கள் மாறிடவேப்
புதிதாம் கவிகள் பாடிவரும்
ஆசைக் கவிகாள்! அனைவர்க்கும்
அன்பன் வணக்கம் செய்கின்றேன்!

வாச மலராய்க் குடும்பத்தில்
வருமாம் குழந்தை ஒவ்வொன்றும்
ஈசன் மனத்தில் எமக்காக
இருக்கும் நம்பிக் கைதானே!

அதுபோல் தோன்றி மனங்கவர
அழகு மழலை இவள்,மலருள்
மதுசேர்க் கின்ற வண்டாக
மயங்கித் தூங்கி வருகின்றாள்!
புதுமை யின்றிச் சொன்னாலும்
பொறுத்துக் கொள்வீர்! அவளழகை
மெதுவாய்ச் சொல்வேன் கேட்டிடுவீர்!
மெலிந்த குரலும் எழுப்பாதீர் ! இனித்

தங்கை அழகு..!

காற்றில் அசையும் மாந்தளிரைக்
கையால் தொட்டுப் பெறுஞ்சுகம்போல்
தோற்றம் அழகின் நின்முகத்தைத்
தொட்டுப் பெறலும் ஒருசுகமோ!
நாற்றங் காலின் நீர்மூட்டில்
நனைந்து குனிந்த நெல்முளைபோல்
தோற்றம் அழகாம் தலைமுடியின்
துவளும் அழகும் ஓரழகோ!                                                   01

கொட்டும் இமைகள் சுருங்காமல்,
கொவ்வை இதழும் மூடாமல்
பட்டுக் கரங்கள் ஆடிடநீ
பண்ணும் அழகும் ஓரழகோ!
குட்டிக் கால்கள் மடங்கிடநீ
குதித்தே எழுந்து வருவதுபோல்
நெட்டித் துயிர்த்து நிகழ்த்துவன
நினைக்க நினைக்க ஓரழகே!                                               02

தாய்ப்பால் அருந்தி அதில்பெற்ற
தணியா மகிழ்வில் இமைமூடி
வாய்ப்பாம் தவங்கள் இயற்றிடுவார்
வடிவை ஒத்த அமைதியுடன்
நோய்ப்பா டில்லா உலகெண்ணி
நோற்கும் தவமோ உன்தூக்கம்?
தோய்ந்து புருவம் மேலோடித்
துலங்குங் குறிகள் எதன்தாக்கோ?                                    03

நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்
நிகழ்த்த வுள்ள செயல்களினைத்
தூண்டும் விதியாய்த், தொல்பொருளாய்த்
துலங்கும் இறைவன் சொல்லிடவே
வேண்டிக் கேட்கும் பாவனையோ!,
விளங்கிக் கொண்ட சொற்களினால்
மூண்ட தாமோ உன்முகத்தில்
முறுவல் நெளிவு போன்றவையே!                                    04

தரைமேல் பிறந்து முதற்கண்ட
தாயின் மலர்ந்த முகத்தழகோ?
வரையும் துகிலின் வசம்வந்த
வடிவம் போன்ற உருவங்கள்
நிறைந்து வந்து மனத்துள்ளே
நின்று காட்டும் மருட்கையதோ?
இறைவன் மேனி உருவழகோ?
எதற்கோ சிரிப்பாய், பயந்திடுவாய்!                                    05

என்ன கண்டோ இம்முறுவல்?
எதனால் இந்த நெளிவெல்லாம்!
சன்னம் போன்ற நகவிரலும்,
சண்ப கத்து மலரெழிலும்
தன்னுள் தங்க வந்தவளே!
தங்கை என்னும் தமிழுறவே!
உன்னை உயர்ந்து வாழ்கவென
உலகை எண்ணி வாழ்த்துகிறேன்!                                    06

                                        †

1965 – அகத்துறையில்.. ..!

தோழி வியப்பு:


       பேழ்வாய்ப் புலியும் பெருவலிச் சிம்மமும்
       தாழ்வின்றிச் செய்யும் தடையெலாம் –ஊழ்வந்தே
       ஊட்டிடத் தாண்டியோ உன்வசம் சேர்ந்தனன்
       தீட்டிய வேற்கரத் தான்!

       தலைவன்/தலைவி ஐயம் தெளிதல்:
       ‘வானின்று ஒளிசெய்யும் வெய்யோனோ? வன்தொண்டர்
       தானின் புறச்செய்யும் தண்முருகோ?’ – ‘மானினமோ?
       வெய்யயிக் கானில் விளங்கணங் காகுமோ?
       ஐயமில், மானுடமே ஆம்!

பிரிவுடற்றல்:


      ‘மஞ்சம் மலரெனினும் மன்னவரிங் கில்லாது
      நெஞ்சம் துயின்றிலதே! நற்றோழி! –பஞ்சும்
       படர்காற்றுத் தீயின்வாய்ப் பட்டாற்போ லந்தோ!
      அடர்காமத் தீயின்வாய் யான்!’


     ‘பூம்பழனத் தாமரையோ? தாமரைமேல் அல்லியோ?
     தேன்பிழியும் சந்திரனோ? தேர்கிலனே! –கூம்புபிறை
     நெற்றித் தலமுடையாள்! நேர்வந்து எதிர்நிற்கச்
     சுற்றிக் கிறுகிறுத்த நான்’!


வரைவு வேட்டல்:


     ‘உந்தும் மனத்தாசை ஓரானோ? ஊரறியச்
     சொந்தம் எனக்கையும் சேரானோ? –சாந்ததமும்
     கள்ளப் புணர்ச்சியிது கைவருமோ? ஊரறியின்
     எள்ளிப் பழிசொல்லு மே!’

பொருள்வயின் பிரிவு: [தோழி கூற்று]


     ‘வண்ணம் திரிந்ததுவே! வார்  குழலும் வாடியவே!
     எண்ணம் உறைந்தனளே! ஏங்கினளே! –கண்ணிங்கிக்
     காதல் பொருள்வயமாய்க் காதலர்நீர் தாம்பிரிந்து
     போதல் தனையுரைத்த போது!’


வரவு நோக்கல்:


     பொருளீட்ட வென்று புகன்றவர் கார்வந்து
     இருளீட்டு முன்னிங்கு இருக்க –அருள்கூட்டிப்
     போதித்த வார்த்தைகள் பொய்யாமோ? வாரா,இப்
     போதிற்கு நானோ புகல்!


பாங்கனுக்கு/ தேரோட்டிக்கு உரைத்தது:


     பூட்டிய தேரிதனைப் பார்க்கினும் பன்மடங்கு
     ஊட்டமாய் என்னுள்ளம் ஓடுமே! நாட்டிய
     வேல்விழி சோர்ந்தாங்கு வெந்நீர்க் குளமிடும்
     மால்விழி தன்னாள் மருங்கு!.

மணம்:


     சுற்றம் இசைந்துவரச் சோதிடர்செய் நன்னாளில்
     உற்றுப் பலர்கூடி ஒன்றாகப் – ‘பெற்றிடுக
     வாழ்பதி நாறு வகைநலனும்’ என்னவே
     யாழ்முரசு ஆர்க்கும் மணம்!
                                               †