Sunday, October 30, 2011

இன்னுமொரு மொட்டை..!


கூடி அணிசேர்த்துக் கொள்ளையிட்ட நாட்களிலே
நாடி எமையணுகி, நல்லபல கிடைக்காமல்
வாடி மனஞ்சலித்து வாரறுந்த செருப்புடனே
ஓடி ஒதுங்கியவாக் காளர்களே! ஒருசெய்தி:


“இந்தியத் திருப்பதியில் இன்னுமொரு மொட்டையிட
வந்துளது தேர்தலுமே! வாக்குறுதி இலவசமே!


                                                    †

மின்வெட்டு..ஒரு போர்க்காலம்..! (06/2010)



01. அந்திமகள் மல்லிகையின் மணத்தை வீசி
                       ஆதவனைக் கீழ்சாய்த்துத் தானெ ழுந்தாள்!
      பந்துநிலா முகங்குன்றிப் பாதி யானாள்!
                      பறக்குமொரு முகில்பிடித்து முகம்ம றைத்தாள்!
     சந்தடிசெய் யாதுகொசுப் படைம றைந்து
                      சார்ந்திருந்த இலைக்கூடம் விட்டெ ழும்பும்!
     முந்துவிமா னப்படைபோல் முனைந்து தாக்கும்!
                       மூடியவீட் டுள்மனிதர் பதுங்கிக் கொள்வர்!
     அந்தவொரு வேளையினை ஆமோ தித்தே
                       அரசெங்கள் விளக்குகளை அணைத்துப் போடும்!
     வந்துதித்த மின்வெட்டால் போராட் டம்தான்!
                       வாய்த்தயிந்த நேரமொரு போர்க்கா லம்தான்!
                                   †




அந்தி சாயும் நேரம் ..! [1986]


01. அந்தி சாயும் நேரம் -எந்தன்
                 ஆவி போகும் தூரம்!
      வந்து நின்று நீயும் -காதல்
                 வார்த்தை சொல்லப் போமோ?

02. கூடி வாழ்ந்த நாட்கள்; -அன்பைக்
                கொடுத்து மகிழ்ந்த நாட்கள்;
     வாடி நின்ற நாட்கள் -தேவை
               வளர்ந்து நின்ற நாட்கள்
     ஓடிச் சென்ற போதும் -அந்நாள்
               உணர்வி ழந்த நாட்கள்;
     தேடி வந்து நீயும் -இன்றுத்
                திரும்பக் கூட்டு வாயோ?

03. இளமை தந்த மோகம் -புதிய
                  இணக்கம் தந்த வேகம்
      கழியும் போது கூடக் -கண்கள்
                  காண மறுத்த நாட்கள்
     அழகுப் பிள்ளை ராகம் -பின்னர்
                அதுந டந்த வேகம்
     பழகிக் கண்ட இன்பம் -மீண்டும்
               படித்துக் காட்டு வாயோ?

04. பள்ளி சென்ற பிள்ளை -வந்து
              படித்த வற்றைச் சொல்லி
     அள்ளி அள்ளித் தந்த -கேள்வி
             அணைக டந்தும் ஓட
     எள்ளி, வியர்த்துத் தள்ளி -மீண்டும்
            இரவில் நமக்குள் பேசித்
    துள்ளி மகிழ்ந்த நாட்கள் -இன்னும்
            தொடரச் சொல்லு வாயோ?

05. துள்ளி வளர்ந்த பிள்ளை -தன்னுள்
              துடுக்கும் அடங்கி நின்றாள்;
     தள்ளி ஒதுங்கிச் செல்வாள்; -வானைத்

            தரையைப் பார்த்துப் பாடி
     உள்ளுக் குள்ளே மகிழ -நாமும்
            ஒளிந்து மறைந்து கண்டோம்!
     புள்ளி வைத்த நிலையில் -இன்று
            புறத்தில் கிடக்கின் றேனே!


                             அந்தி சாயும் நேரம் -எந்தன்
                                   ஆவி போகும் தூரம்!
                             வந்து நின்று நீயும் -காதல்
                                    வார்த்தை சொல்லப் போமோ?
                                                       
                                                     †

காமமும் காதலும்..!


மின்னிருக்கும் எண்ணுகையில்! மிகுந்திருக்கும் தனிமைதனில்!
            மெல்ல வந்து,
முன்னிருக்க விட்டாலோ மூவுலகும் மறைத்துவிடும்!
            முளைத்து விட்டால்
பின்னிருக்கும் விளைவெண்ணிப் பேசுகின்ற அறிவினையும்
            பிழைசெய் விக்கும்!
தன்னிருப்பில் களைபோலத் தான்தோன்றித் துளிர்க்கின்ற
            தன்மைக்  காமம்!                                                          01

கண்பார்க்கக் கைசாடை காட்ட, நெஞ்சில்
          கனலாகத் தனிமைநிலை காண, அஞ்சி
மண்பார்க்க, மற்றெவரும் உண்டோ? என்ற
          மருள்பார்க்கக், கண்ணொடுகண் மீண்டும் நோக்க,
விண்பார்க்க அதிசயிக்கும் மனித ரைப்போல்
          விருந்தாக நிற்பவர்க்கும் விருந்தாய் நின்றே
எண்பார்க்க முடியாத கற்ப னையில்
          இருவரையும் மாட்டிவிடும் காதல் தன்மை!! 02

                                              †

பொங்கல் !

திங்கள்தன் முகமும் நாணித்
     தென்பட மறுத்து, மேலைக்
கங்குலுள் புகுந்து கொள்ளக்
     கறவைகள் கறங்கப் புட்கள்
அங்குமிங் காக ஓடி
    ஆர்ப்பர வங்கள் செய்யத்
தங்களில் பொங்கல் காணத்
     தடபுடல் செய்வர் பெண்டிர்!                                                        01

அஞ்ஞான இருளை நீக்கி
     அவனிமேல் தொன்று கின்ற
மெஞ்ஞான உருவே போன்று,
     மெல்லோலி புட்கள் வேதம்
செய்ஞான உருவோர் போலச்
     செய்திடும் அந்த வேளைத்
தைஞ்ஞான மகளோடு இந்தத்
     தரணிமேல் கதிரும் தோன்றும்!                                                02

மீனன அரிசி வெந்து
    மேல்வரு கின்ற தான
பால்நிற நுறைபோல் வந்து
    பரிதியும் தொன்றி நிற்பான்!
வானிடை ஓடி யாடி
    வருத்தமில் லாது புட்கள்
தானியப் பொங்கல் இட்ட
    தன்மைபோல் உள்ள தம்மா!                                                      03


அப்பொழுது


நன்கலத் தரிசி பொங்க,
     நகை,முகத் தட்டில் பொங்க,
மென்னொளி வானில் பொங்க,
     மேதினி இன்பம் பொங்க,
இன்மொழி நெஞ்சுள் பொங்க,
     இன்தமிழ் காதில் பொங்க
நன்மைகள் மலிந்து பொங்க
      நாட்டுளே பொங்கும் பொங்கல்!                                             04


அந்நியர் படைகள் பொங்க
     ஆத்திரம் நெஞ்சுள் பொங்கத்
தன்னுளே பொங்கு வார்போல்
     தணலதும் அடுப்பில் பொங்க
மின்னிடும் பானக் குள்ளே
     மேல்வரும் அரிசி பொங்கும்!
அந்நிலை அடங்கத் தானே
     அமைதியின் சுவையும் பொங்கும்!                                        05


இன்பமும் அறனும் பொங்க
     ஏதுவாம் கல்வி பொங்க
வன்பருள் அறிவு பொங்க,
     வரிப்பணம் போல இன்றி
அன்பருள் அருளும் பொங்க
     அமைதியும் வளனும் பொங்க
முன்பொரு நாளும் காணா
     முறையினில் பொங்கும் பொங்கல்!                                     06

                           [வேறு]


செந்நெல் வளம்பொங்கச் செல்வத் திரள்பொங்கக்
கன்னல் தமிழ்போல் களிபொங்க -நன்மை
எழில்பொங்க, இன்ப இசைபொங்க எங்கும்
தொழில்பொங்கப் பொங்கலே பொங்கு!                                  07


ஏறிப் பருத்தும் எழிலார்ந்தும் மேல்வந்து
சீறும் நுரையடங்கச் செய்வளைபோல் -ஊரில்
விலையேற்றம் போக்கி விளைவேற்றம் கூட்டி
நிலையேற்றப் பொங்கலே பொங்கு!                                        08


‘எம்பால் எமர்பால் இடரறுக’ என்பதுபோல்
என்பால் எழுகின்ற எண்ணங்கள் -உன்பால்
வழிவதுபோல் நீங்கி வளரட்டும் பாரில்
பழியேதும் இல்லாத பண்பு!.                                                         09


                                                †

[மொழிபெயர்ப்புக் கவிதை..]BEYOND THE REACH OF TIME அழியாப்பெயர்


மூலம்     
I wrote my name upon the sand
And trusted it would stand for aye ;
But soon the refluent sea
Had washed my feeble lines away.
I carved my name upon the wood,
And after years returned again;
I missed the shadow of the tree
That stretched of old upon the plain.

To solid marble next my name
I gave as a perprtual trust;
An earthquake rent it to its base
And now it lies overlaid with dust;

All these have failed; in wiser mood
I turn and ask myself what then?
If I would have my name endure
I will write it on the hearts of men;
In charecters of living light
From kindly words and actions wrought
And these beyond the reach of time
shall live immortal as my thought!.

[பைபிள் புத்தகங்களில் ஒன்றான II கொரிந்தியரில் 2-ஆம்,3-ஆம் வசனங்கள்
இவ்வாறு கூறுகின்றன : “ எங்கள் இதயங்களில் எழுதப்பட்டும், சகல மனிதர்களாலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம்(கடிதம்-மடல்) நீங்கள்தானே! ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறித்துவின் நிருபமாய் இருக்கிறீர்கள் என்று வெளியரங்கமாய் இருக்கிறது. அது மையினால் அன்று, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளில் அன்று, இருதயங்களாகிய சதையினாலான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது..”


இதை அறிவதற்கு முன்பாகவே மேற்கண்ட பாடல், பின்வரும்
மொழிபெயர்ப்பு [தழுவல்] கவிதையை எழுதுவதற்கு உந்துதலாய் இருந்தது. அதற்காக திருமதி அவர்களுக்கு எனது நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.


                                  இனி மொழிபெயர்ப்பு :         02/65 அழியாப் பெயர்..!


காலம் கடந்து வாழும் நினைவைக்
     கருதித் துணிந்த கருமத்தேன்
நீலம் கரைத்த நெஞ்சம் இரைக்க
     நிமிரும் படியும் கடலின் எழில்
சாலும் குறுமண் சார்ந்தென் பெயரைச்
     சடிதில் எழுதிக் களிப்புறுமுன்,
ஓலம் உடைத்தாய் ஓடி நடந்தே
     உழலும் அலைகள் அழித்தனவே!

ஆற்றும் வலிமை இல்லாப் பெயரும்
     அழியக் களியேன், அதைவிட்டு,
மாற்றும் அதற்கு மண்மேல் உளதாம்
     மரத்தில் அதனைப் பொறிப்பதெனத்
தேற்றி மனமும், தேவை முடித்துத்
     திரும்பி நடந்தேன் பிறிதொருநாள்..
காற்றில் விழுந்து கரையான் அரித்துக்
     காழ்ப்பம் இழந்த கதைகண்டேன்..!

ஏற்றும் சலவைக் கற்கள் இருக்க
     எதற்குக் கவலை, அதில்தீட்டக்
காற்றும், கடலும், காலப் புனலும்
     கரைத்தல் இயலா தெனச்செய்தேன்!
போற்றும் குணமில் பூமிக் கதன்மேல
     பொறாமை வரவே, பிளந்தது வாய்!
தோற்றம் இலதாய்த் தூசுக் கிடையே
     தொலைபா தளமது புகுந்ததுவே!

எல்லாம் மறந்த எண்ணம் தகிக்க
     எதிலே பொறிப்ப தெனவருந்த,
நல்லாம் வழியும், நம்பும் வகையும்
     நமதிப் பெயரை நிறுவுதலும்
எல்லாம் இனிமேல் எய்தும், மனிதர்
     இதயத் தெழுதும் பொழுதிலெனெத்
கல்லா மதியேன் காதல் மிகவே
     கருத்தை வருத்திக் கண்டனனே:

தண்மை அழகால், தாழ்வில் உரையால்
     தகவாம் செயலால் நடைகொண்ட
உண்மை ஒளியால் ஓங்கும் குணங்கள்
     உணர்ந்து மகிழ்ந்து மனந்தேறிப்
பெண்மைக் குயர்வும், பேதம் இலவும்
     பெரியோர் புகழும் நினந்து,ஆற்றி
வண்மைக்கு உருவாய் வாழின் பெயரும்
     வளரும் அழியாது எனக்கண்டேன்!

இன்னும் இவைபோல் என்றும் பெயரை
     எதிலும் அழியா வழிகாத்து
மன்னும் படிக்கு மற்றிவ் வுலகில்
     மறையா திருக்க உதவிடுமால்,
தன்னுள் நினைத்துத் தம்முள் உணர்ந்து
     தயங்காது எடுத்துச் செயல்செய்யும்!
என்றும் நிலைக்கும் என்சிந் தனைபோல்
     இங்குஉம் பெயர்,இது சத்தியமே!

                            • • • •

’65 தொல்லைகள் மறப்போம்..!

அகிலம் முழுதும் ஒன்றாய் வாழ
            ஆவன செய்வோமே! -அதற்காம்
            ஆவணம் செய்வோமே! -நல்
முகிலும் வானும் போலே இணையும்
           முயற்சிகள் செய்வோமே! -நமது
           முனைப்பினில் உய்வோமே!                                             01

பகையும் வறுமைப் பிணியும் தீரப்
            பணிகள் எடுப்போமே! -இன்னும்
            பலமைல் நடப்போமே!
நகையும், நட்பும், அன்பும் நெஞ்சில்
            நட்டதை வளர்ப்போமே! -நிலைத்த
            நாட்டமும் வளர்ப்போமே!                                                   02

சொல்லும் செயலும் சிந்தனை அழகும்
     சோம்பிடப் பண்ணோமே! -நாமதை
      ஓம்பிடக் கண்ணாமே! -தர்மம்
வெல்லும் வெல்லும் வெல்லும் என்பது
     விளங்கிடும் பண்ணாமே! -ஞாலம்
     துலங்கிடும் பண்ணாமே!                                                         03

கல்லும் முள்ளும் கிடக்கும் நிலத்தில்
     கழனிகள் காண்போமே! -எதிலும்
     விழலினிக் காணோமே!
புல்லும் பூண்டும் பாரதப் புகழைப்
     பேசிடக் காண்போமே! -பலர்
     பேசிடும் மாண்பாமே!                                                                 04

நல்லோர் வாயில் நல்லன கேட்டு
     நன்மைகள் கொள்ளுவமே!-பலவாம்
     நலிவுகள் தள்ளுவமே! -ஒன்றாய்ப்
பல்லோர் கூடிப் பகுத்துணும் நிலையே
     பண்பெனல் அறிவோமெ! -உலகே
     பயனுறச் செய்வோமே!                                                              05

எல்லா நாட்டின் மக்களும் இங்கே
     எம்முடன் பிறந்தோரே! -இங்கே
     எம்முடன் பிறந்தோரே! -நம்
எல்லாக் கைகளும் சேர்ந்தே செயல்பட
     எல்லைகள் கடப்போமே! -இன்ப
     எல்லைகள் கடப்போமே!                                                            06

                                   †

நன்மார்க்கம் மொழிகாக்கும் நமது மார்க்கம்!

ஒப்பில்லாத் தமிழ்காக்க ஊர்வ லத்தில்  
    உணர்ச்சியுடன் தமிழ்வாழ்க என்று கூவி
ஒப்புக்கோ செல்கின்றோம்! உணர்வைக் கட்டி
   உள்ளத்தே சிந்திப்பீர்! உரிமை கோரல்
தப்பில்லை! தவறியவர் தலையைச் சீவத்
   தாம்,முயற்சி செய்வதிலே தகவும் உண்டோ?
எப்பெரிய தவறெனினும் எதிரா ளிக்கு
   எடுத்தோதித் திருத்துவதில் இழிவும் உண்டோ?                    01

அந்நியரை மட்டுமல்ல அவர்கைக் கொண்ட
   அக்கிரம வழிகளையும் கூட இந்தப்
பொன்னிலத்தை விட்டகற்றப் பாடு பட்டுப்
   போராடி அகிம்சையினைப் புகுத்தி வாழ்ந்து,
தன்முறையை உலகேற்கச் செய்தார் காந்தி!
   தாமுமதைப் பின்பற்றி மார்ட்டின் லூதர்
என்னபலச் சான்றோரும் ஏற்று யர்ந்தார்!
   இதையறிந்த பின்னாலும் இம்சை நன்றோ?                              02

அந்நியரை மட்டுமல்ல அண்ணல் காந்தி
   அகிம்சையினால் தானிந்த அகிலம் வென்றார்!
அந்நிலையே பண்பாட்டின் சிகரம் என்றார்
   அகிலத்தின் பலநாட்டார்! அதையே காந்தி
பொன்னாட்டில் நாமின்று புறக்க ணித்தால்
   புகழுண்டோ? இழிச்சொல்லும் போமோ சொல்லும்!
முன்னிருந்த நிலைக்கேநாம் செல்வோம் என்றால்
   முன்னேற்றம் என்றிதனைச் சொல்லப் போமோ?                   03

மொழிநட்டப் படுமென்று மூளுங் கோபம்
   முழுநாட்டின் பொருள்நட்டம் ஏற்கப் போமோ?
‘வழிகெட்டுச் செல்வோர்க்கு வாய்ப்பு கள்தாம்
   வந்தெளிதிற் கிட்டு’மெனும் வார்த்தை மெய்யோ?
விழிகெட்டோர் போல்ச்சென்று வீழ்வோம் என்று
   விழிமூடிச் சென்றழிவை விரும்ப லாமோ?
மொழிப்பற்று பிறமொழியை வெறுப்ப தன்று;
   முயன்றுனது மொழிவளர உழைப்ப தன்றோ?                          04

செக்கிழுத்துச் சிறைசென்றார் செல்லா மார்க்கம்!
   சிந்தித்துப் பலநூற்கள் செய்தார் மார்க்கம்!
திக்கெதிர்த்தும் கப்பலினை விட்டுக் காட்டித்
   திருப்பணியைத் தமிழ்க்களித்தார் தேர்ந்த மார்க்கம்!
எக்கொடுமை நேர்ந்தாலும் எடுத்துச் சென்ற
   எம்நாட்டுக் கொடியைவிடேன் என்பார் மார்க்கம்!
அக்கறைநம் மொழிமேல நமக்கி ருக்க
   அடுத்தமொழி அதைவளர்க்க அடிமை செய்யும்!                     05

என்மார்க்கம் என்றிதனைச் சொல்ல வில்லை!
   எந்நாடும் மதிக்கின்ற வழியைச் சொல்வேன்!
‘துன்மார்க்கன், கருங்காலி, துணிவில் கோழை,
   துப்பில்லான்’ என்றெல்லாம் தூற்ற லாம்நீர்!
வன்மார்க்கம் விட்டகிம்சை வழியில் நிற்க
    வலிமிகவும் வேண்டுமுளத் துறுதி வேண்டும்!
நன்மார்க்கம் இதுநமது நாட்டின் மார்க்கம்!
   நாமிந்த வழிச்சென்று மொழியும் காப்போம்!                             06

                                                    †

’65. புத்தாண்டே வருக..!


புத்தாண்டே புத்தாண்டே வருக! -இன்பப்
பூமணமும் அமைதியுமே தருக!
கர்த்தாவின் ஏவலை அன்புருகத் -தந்து
கடமைதனை யாம் செய்ய வருக!


போலி,ஒளி கொண்டமது மறையப் =பூமி
போர்த்தியுள்ள இருட்போர்வை கிழிய,
நீலவொளி வானமதில் தெரிய -நேர்மை
நெஞ்செனவே சூரியனும் பொலிய..                            [புத்தாண்டே]


புன்மதியார் கூட்டம்போல் இருளில் -கூடிப்
பொய்,ஒளிசெய் விண்மீன்கள் நொடியில்
தன்னிலையும் கெட்டோடும் படியே -தோன்றும்
தன்னிகரில் ஆதவனின் வடிவில்..                                 [புத்தாண்டே]


சாதிமத பேதங்கள் கொண்டு -தம்முள்
சண்ண்டையிடும் மாக்களைநீ கண்டு
‘பேதமிலா வாழ்க்கைநெறி உண்டு,நிறை
பேரொளிபோல் நிலை’ எனும் சொற் கொண்டு       [புத்தாண்டே]


ஒருகோடி பேதங்கள் நீக்கி -உலகில்
உளகோடி மக்களைஒன் றாக்கி,
வருங்கோடி இன்பங்கள் கூட்டி -வறுமை
வலிந்தோடும் நிலைதன்னைக் காட்டி..                       [புத்தாண்டே]


வீட்டுக்கே வாழுநிலை வீழ -வயிற்றுப்
பாட்டுக்கே படிப்பதெனல் மாள
நாட்டுக்கே நாடுகை கோர்த்துப் -பல
நன்மையுடன் வாழக்கண் பார்த்து..                                [புத்தாண்டே]


‘உள்வீட்டுள் வேற்றுமையை நீக்கிப் -பின்
உள்நாட்டுள் ஒற்றுமையுண் டாக்கிப்
பன்னாட்டுள் கூட்டுறவைத் தேக்கி -நல்ல
பல,ஆண்டு நீ வாழ்’என் றூக்கிப்..                                    [புத்தாண்டே]


                                              >>> 0 <<