Sunday, October 30, 2011

’65 தொல்லைகள் மறப்போம்..!

அகிலம் முழுதும் ஒன்றாய் வாழ
            ஆவன செய்வோமே! -அதற்காம்
            ஆவணம் செய்வோமே! -நல்
முகிலும் வானும் போலே இணையும்
           முயற்சிகள் செய்வோமே! -நமது
           முனைப்பினில் உய்வோமே!                                             01

பகையும் வறுமைப் பிணியும் தீரப்
            பணிகள் எடுப்போமே! -இன்னும்
            பலமைல் நடப்போமே!
நகையும், நட்பும், அன்பும் நெஞ்சில்
            நட்டதை வளர்ப்போமே! -நிலைத்த
            நாட்டமும் வளர்ப்போமே!                                                   02

சொல்லும் செயலும் சிந்தனை அழகும்
     சோம்பிடப் பண்ணோமே! -நாமதை
      ஓம்பிடக் கண்ணாமே! -தர்மம்
வெல்லும் வெல்லும் வெல்லும் என்பது
     விளங்கிடும் பண்ணாமே! -ஞாலம்
     துலங்கிடும் பண்ணாமே!                                                         03

கல்லும் முள்ளும் கிடக்கும் நிலத்தில்
     கழனிகள் காண்போமே! -எதிலும்
     விழலினிக் காணோமே!
புல்லும் பூண்டும் பாரதப் புகழைப்
     பேசிடக் காண்போமே! -பலர்
     பேசிடும் மாண்பாமே!                                                                 04

நல்லோர் வாயில் நல்லன கேட்டு
     நன்மைகள் கொள்ளுவமே!-பலவாம்
     நலிவுகள் தள்ளுவமே! -ஒன்றாய்ப்
பல்லோர் கூடிப் பகுத்துணும் நிலையே
     பண்பெனல் அறிவோமெ! -உலகே
     பயனுறச் செய்வோமே!                                                              05

எல்லா நாட்டின் மக்களும் இங்கே
     எம்முடன் பிறந்தோரே! -இங்கே
     எம்முடன் பிறந்தோரே! -நம்
எல்லாக் கைகளும் சேர்ந்தே செயல்பட
     எல்லைகள் கடப்போமே! -இன்ப
     எல்லைகள் கடப்போமே!                                                            06

                                   †

No comments:

Post a Comment