Friday, November 18, 2011

குறும்பாக்கள்..

ஏறும் விலைவாசிக்கு

ஏணி வைத்திடுவோம்..
வறுமைக் கோட்டின்
வரம்பை உயர்த்துவோம்..
              ======

மக்கள்(சன) நாயகம்..

   மக்களுக்காக
   மக்களை வைத்தே
   மக்களைக்
   கொள்ளையடிப்பது

                 ========

இந்திரனுக்கு இருக்கட்டும்
உடம்பெல்லாம் கண்கள்..
எனக்கு வேண்டியது
இருப்பைச் சுற்றி
ஏராளமான கைகளே..
இலவசங்கள் வாங்க..

                ==========

கருப்பினை அன்று
காகிதம் மணந்தது..
கைகளில் அன்று
கவிதை பிறந்தது..
வெறுப்பினை இயேசுவின்
பொறுமையும் வென்றது..
விடியலைச் சிலுவையில்
உலகமும் கண்டது..

                        †

சேருவீர்..! பாடுவீர்..!




கற்றவர் களிக்கும் சோதி!
     கயவரே கலங்கும் நீதி!
உற்றவர்க்கு உதவும் ஆதி!
     உணர்ந்தவர்க்கு உயிரின் பாதி!
குற்றமே உணர்ந்து, நெஞ்சம்
     குழைந்துவந் தோர்க்கு வாதி!
அற்றமே காத்துத் தன்னோடு
      அணைத்திட வரும்,நம் நாதி!

பற்றினுக்கு உரிய சாதி!
     பகைமையை அழிக்கும் தாதி!
முற்றிலும் மன்னிக் கின்ற
     முரண்தொடை கூட்டும் வீதி!
சொற்றிறம் என,இ ருந்து
     சுந்தர மனித னாகி
நற்றிறம் வாழ்ந்து காட்டி
     நமையெலாம் காக்கும் வேதி!

அய்யனை உணர்ந்து பாடு!
     அருந்தவ வாழ்வு நாடு!
மெய்யென வருவோர் கூடு!
     மேதினம் அதுவென்று ஆடு!
கைவரும் நலங்கள் சேரு!
     கவலைகள் விட்டு வாழு!
செய்யரும் செயல்கள் தேரு!
     சேர்ந்துவாழ்ந்து உயர்ந்து மீளு!

                                    †

வரையில்லா வாழ்வு வந்தது, எம் மீட்சி கொண்டு!


வெய்யோனொளி, குருசேறினன் விரிகைகளில் மறைய,

மெய்யேஇவர் மகனேஒரு தேவர்க்கெனச் சிலரும்,

அய்யோஇது தகுமோதுயர் அடுமோஎனச் சிலரும்,

மெய்சோர்ந்தனர்! மிடிசேர்ந்தனர்! மிகவேதனில் அழிந்தே!


விரிந்தன கைகள், எங்கள்

     விலங்குகள் உடைய என்று;

சரிந்தது தலையும் உந்தன்

     சனமெமைக் கண்டு கொள்ள;

சொரிந்தது குருதி, நாங்கள்

     சுனையதில் மூழ்கி மீள;

மரித்ததும் உடலே! எம்மை

     மறுபடி எழுப்பிக் காட்ட!


நீள்வரை குலுங்கிற்று அன்று,

     நின்னுளெம் சுமைகள் கண்டு!

கோள்களும் மறைந்த உம்மேல்

     கொடுமைகள் இழைக்கப் பார்த்து!

தாழ்திரை மேல்கீ ழாகத்

     தன்னுளே கிழிந்தது அன்று!

வாழ்,வரை யில்லா வாழ்வு

      வந்தது,எம் மீட்சி கொண்டு!

                              < † >

குரோம்பேட்டைத் திருக்குறள் பேரவைக்கு ஒரு பாராட்டு..



சுற்றுப் புறத்தினை முற்றும் கெடுத்தது

பற்றிச் சினந்திடல் மாணடி! -மேகம்

சுற்றி முகத்திலே நெற்றி மறைத்துநீ

ஒற்றி நடப்பது வீணடி! -நிலவே

முற்றிக் குறைவது நாணடி!


கல்வி நிறைந்தவர் வெல்லும் மொழியினர்

சொல்ல மறுப்பதுன் சோகமோ? -நெஞ்சம்

கல்லென் றிருத்திநீ புல்லென் றுனக்குளே

மெல்லக் கறுவுதல் ஆகுமோ? -நிலவே

சில்லென் றிருப்பதும் போகுமோ?


நல்ல நினைப்பினர் வெல்லும் முனைப்பினர்

மெல்ல இணைந்தனர் பாரடி -தங்கள்

வெல்லத் தமிழினில் சொல்லும் வகையினில்

ஒல்கும் பகையிது தேரடி! நிலவே!

அல்கும் முகக்குறை தீரடி!


                         (வேறு)

எழுத்தில் உயர்ந்த வள்ளுவனை

     எண்ணம் சிறந்த பலர்கூடி

வழுத்திப் பேசிக் கேட்போர்க்கு

     வழிகள் காட்ட வந்தனரே!

அழுத்திப் பேசி அவர்சொன்ன

     அத்தனை பேச்சும் மணியன்றோ!

தழைத்து வாழ்க இவர்முயற்சி!

      தரணி பெறட்டும் பலயெழுச்சி!

                               (வேறு)

தென்பொதிகை இளங்காற்றைத் தேன்வழியும் மதிக்கீற்றைத்

தெம்மாங்கின் பொலிவேற்றுத் தெறித்துவிழும் அன்பூற்றை,

எம்மோர்க்குத் தமிழூட்டை, எதிர்ப்புகளின் வாய்ப்பூட்டை,

செம்மாந்த திறங்கண்டு சிறப்பூட்டும் கற்கண்டை

அம்மானை! இளங்கோவை! அடிபணிந்தே ஏத்துவனே!

                                                 < + >

நிலவே முகக்குறை தீரடி..!



சுற்றுப் புறத்தினை முற்றுங் கெடுத்தது

பற்றிச் சினந்திடல் மாணடி! மேகம்

சுற்றி முகத்திலே நெற்றி மறைத்துநீ

ஒற்றி நடப்பது வீணடி -நிலவே!

முற்றிக் குறைவது நாணடி!                                                 01


கல்வி சிறந்தவர் வெல்லும் மொழியினர்

சொல்ல மறுப்பதுன் சோகமோ?-நெஞ்சம்

கல்லென் றிருத்திநீ புல்லென் றுனக்குளே

மெல்லக் கறுவுதல் ஆகுமோ? -நிலவே

சில்லென் றிருப்பதும் போகுமோ?                                       02


ஏரி மடக்கியே கூரை போடுவார்

சேரி உயர்த்திடப் பாடுவார் -நாங்கள்

‘லாரி’ நிரப்பியே சேரும் வாக்குகள்

வாரி இறைத்திடல் குமுறியோ -நிலவே

‘காரி’ பனியென உமிழ்வையோ?                                          03


நல்ல நினைப்பினர் வெல்லும் முனைப்பினர்

மெல்ல இணைந்தனர் பாரடி -நாளை

சொல்லும் வகையினில் சூழும் தேர்தலில்

செல்லும் பதில்தரு வாரடி! -நிலவே

அல்கும் முகக்குறை தீரடி!                                                         04

                                              < 0 >