Thursday, December 6, 2012

தலைவியின் துயரம் [தோழியிடம் தலைவி ஆற்றாது கூறுவது]


மேலோர் உரைசெயும் மேன்மையனை, மானிடருள் 
நூலோர் நுவல்பொருளை, நித்தியத்தைக் -காலாறச்
சென்று துதிசெய்வார் சீரெய்த, எய்தாரே 
ஒன்றைத் துதிசெய்யா தோர்! 

வருந்தி உழன்றேன்முன் வாரானாய்த் தான்அன்று 
இருந்த மகனாம்கோல்! ஈதென்று -அரும்பவிழும் 
கூந்தல் மடமகளும் கேட்டிடுவாள்! நான்கண்டு 
நீந்தும் திறன்,அறியாப் போது ! 

வாரும் உடனென்ன வாராராய்ப் போ,எனவே 
கூறி இருந்தவரோ கூறிடுவாய்! -நாரியருள் 
மேன்மை பலகொண்ட மெல்லியலாய்! என்,அன்பர்
பான்மை தனைநீயும் பார்த்து! 

ஆசை விழிவழியே அன்பின் பொருள்தன்னை 
ஊசல் மனத்தோடும் ஒண் தொடியே! -நேசரவர் 
காணக் களிகொண்டு கட்டுரைத்தேன்! காணார்போல் 
மாணக் கிடந்தார்கொல்! மெய்! 

உந்தும் மனத்தசை ஓரானோ? ஊர்அறியச் 
சொந்தம் எனக்கையும் சேரானோ? -சந்ததமும் 
உள்ளத்து இருந்தே ஒறுப்பதேன்? பல்பொருளைக் 
கொள்ளத் தலஞ்சென்ற கோ! 

கோன்சொலச் சென்ற கொற்றவர் முல்லையில் 
தான்வரு வேன்,எனல் தப்பாச்சே! -வான்வரு 
தண்மதி போன்ற,என் தையலே! என்னுளம் 
கண்ணுறங் காதது காண்!.. 
-
-
[1963-இல் எழுதியது-உரை கேட்க வேண்டாம்]

பைத்தியந்தான்..


முட்டும் துயர்மறந்து, முன்னூறு நாள்சுமந்து, 
துட்டன் எனைஈன்றாள் துன்பமுற - முட்டமுட்ட 
வைத்தியம்,இல் லாது,உன் வழிவந்தேன், ஆதலினால் 
பைத்தியமே சாலும், பகர்! 

செல்லக் குழந்தை,எனச் சீராட்டிப் பாராட்டிக் 
கல்வி அறிவு,எனக்குக் காட்டியவர் -அல்லல்,உற 
வைத்துனைஎன் நெஞ்சில் வழிபாடு செய்தேனால் 
பைத்தியமே நன்றாய்ப் பகர்! 

எழுபிறப்பும் நின்றுதவி இம்மைக்கு,என் றில்லா 
முழுமைதரு கல்வி முழுதும் - பழுதாக 
வைத்தபடி இன்றெதுவும் வாய்த்திலனாய் நிற்பதால் 
பைத்தியமே நன்றாய்ப் பகர்! 

சின்,நடைகண்டு அன்று சிரித்தாளும், என்சிறிய 
இன்னகைகண்டு உள்ளம் இழந்தாளும் - வன்னடையால் 
கைத்த,மனம் கொண்டு கலக்கமுறச் செய்தேனால் 
பைத்தியமே இன்னும் பகர்! 

நல்லமகன் இல்லையென நற்றாயும், கல்விவழிச் 
செல்லும்.மகம் இல்லையெனச் சேர்ந்தோரும் -எல்லோரும் 
கைத்து,வைத்துச் சொன்னபொருள் காணேன்;பின் வந்ததனால் 
பைத்தியமே என்று பகர்! 

உறவினர்தம் உள்ளமும், இவ் வூரினர்தம் வாயும் 
கரைதுடைக்கும் எம்நண்பர் கண்ணும் -உற,வருத்தம் 
வைத்தவன்,என் நெஞ்சம் வருத்தம்,அறி தல்வேண்டிப் 
பைத்தியம்,என் றாய்,நீயே பார்த்து ! 

நாடாதே! என்றன்று நன்முறையில் தாய்சொல்லத் 
தேடாதே நான்வந்து தேடினன்பார்! -வாடாமல் 
புத்திசுவா தீனமிலான் போல்,ஆம்,என் செய்கைஎனப் 
பைத்தியம்,என் றாய்,அறிவாய்ப் பார்த்தது! 

கைத்திறலோன் ஆற்றிக் கடைந்தெடுத்த சிற்பமே, 
பொய்த்திறலோன் என்றவனைப் பொய்த்திடுமேல்- பைத்தியமே! 
போற்றும்,அவன் சிற்பம் புகழுக் குரித்தாமோ? 
ஏற்றம்அவ னோடதற்கு மே! 

பைத்தியமென் றாலும்,உன் பைத்தியமே நான்!எனது 
பைத்தியமே! நீ,உனதன் பைத்திருத்தி -வைத்தியரால் 
வேறாகச் சென்று விலகுதலும் வேண்டாம்,பூ 
நாறாக வாழ்வோம்,வா நாம்! 

-
-                                      [1965-இல் எழுதியது]            -0-

குறுகுறுப் பாக்கள்-06

எண்ண மலைவிட்டு 
.....
இறங்கும் அருவிகள்! 
எட்டுத் திசையிலும் 
.....
பறக்கும் குருவிகள்! 
வண்ணத் தோகையில் 
.....
ஆடிடும் மயில்கள்! 
வாழ்க்கைப் பண்களைப் 
.....
பாடிடும் குயில்கள்! 
கண்ணில் மிதக்கும் 
.....
கனவின் நிறங்கள்! 
காலம் கடந்தும் 
.....
வாழும் நினைவுகள்!

குறுகுறுப் பாக்கள்-07


வெயிலும் பனியுமா 
விளைவித்தது 
இந்தச் சுருக்கங்களை! 
இல்லை இல்லை 
விழுந்த பள்ளங்களை 
விட்டெழுந்த 
முயற்சிகள் அவை! 
******************* *********************
 
ஓட்டைப் பாத்திரத்தில் 
ஊற்றுகிறாயே 
அமுதத்தை.. 
தமிழை.. 
ஒருவருக்கும் பயனின்றி 
ஒழுகிடவோ? 
****************** ***********************
 
சிவனே என்றிருப்பவனுக்கே 
விஷத்தைக் கொடுத்தது 
இந்த உலகம் .. 
சீறி எழுபவனுக்கு 
அமுதமா 
கொடுக்கப் போகிறது..? 
*************** ************************

குறுகுறுப் பாக்கள்-08


ஒரு குடியானவனின் புலம்பல்.. 

மடிமீது 
தலைவைத்து 
விடியும்வரை 
தூங்கினோம்... 
மறுநாள் 
எழுந்து பார்த்தோம் ... 
குடிசையைக் காணவில்லை..! 
*************************************************
 

ஒரு அரசியல்வாதியின் அங்கலாய்ப்பு.. 

மானியங்களைக் 
கொடுத்துதான் 
மக்களைக் 
காப்பாற்ற வேண்டுமா..? 
மக்களை 
நாடுகடத்துங்கள்.. 
மானியத்தைக் காப்பாற்றுங்கள் ..! 
****************************************************

குறுகுறுப் பாக்கள்-09


கோப்பு மதிலைத் 
தாண்டிக் 
குதித்தேன் தேர்தலில்.. 
காப்புப் பணத்தை 
'
கமிஷனாய்' வாங்கவே! 
********* ***************************
 
'
இளங்கவியே! 
காலம் 
தீர்ப்பெழுதட்டும்.. 
நீ 
கவி எழுது..' 
என்று சொன்னார் 
ஒரு பெருங் கவி! 
நாங்கள் 
எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம்.. 
காலம்தான் 
தீர்ப்பைத் 
தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறது.. 
************ *********************

குறு குறுப்பாக்கள்-10


காதல் சிறகை
காற்றினில்  விரித்து
வான வீதியில்
பறக்க வா!
கரியடுப் புக்கும்
மண்ணெண்ணைக்கும்
கண்ணீர் சிந்துதல்
மறக்க வா!
------
நீரைப் பின்னுக்குத் தள்ளி
முன்னே செல்லும் கப்பல்
காற்றைப் பின்னுக்குத் தள்ளி
முன்னே போகும் வானூர்தி!
இந்தப் பூமியைப்
பின்னுக்குத் தள்ளியா
நான் முன்னே போவேன்?
எந்த இடத்துக்கு..?

குறுகுறுப் பாக்கள்-11


படர்தாமரைக்குக் 
களிம்பு.. 
உடல்கிருமிக்குச் 
சோப்பு.. 
வாய் நாற்றத்துக்கு 
பற்பசை.. 
அரசியல் வியாதிக்கு 
ஆ இதமா ஒரு மருந்து 
சொல்லுங்களேன்! 
******************************************
 
இளைஞனே! 
படி! படி! 
எழுத மட்டுமாவது 
நீ படி! 
இறங்கிவந்து 
சரக்கடி! 
இருப்பவர்கள் 
அடிப் பிடி! 
இசைந்தவர்க்குக் 
கொடி பிடி! 
எதற்கு உனக்கு 
அடி தடி! 
எல்லாமே 
வாழ்கையின் படி! 
படி!படி! 
****************************************

வருத்தங்கள் கரைத்திடுவீர் ..!


ஆடிக் களித்த 
ஆனைமுகன் பக்தரெலாம் 
கூடிக் கரைத்தனர்! 
கொண்டாடி முடித்தனர்! 
நாடிக் கரைந்த 
நல்லுள்ளம் கொண்டவர்கள் 
பாடி நடந்தவராய்ப் 
பக்தியில் கரைந்தவராய், 
சோடித்த எல்லாமும் 
சொந்தமென நிலைக்காது, 
வேடிக்கை விளையாட்டாய் 
வினைமுடிந்து மறையும்எனப் 
பாடிக்கொண் டிருக்கின்ற 
பரந்தகடல் இயற்கைக்குள் 
தேடிச் சென்றே கொடுத்துத் 
திருப்தியுடன் திரும்பினரே! 
சொடிப்பில் மயங்காதீர்! 
சொந்தங்கள் மறுக்காதீர்! 
மூடிக்கொண் டிருக்கின்ற 
மோகங்கள் மூள்கடிப்பீர்! 
ஊடிக்கொண் டிருக்காதீர்! 
உள்ளம்கல் லாகாதீர்! 
வாடிக்கை இதுவாழ்க்கை! 
வருத்தங்கள் கரைத்திடுவீர்! 
கூடிச் சிறந்திடுவீர்! 
குறையின்றி வாழ்ந்திடுவீர்! 
-
-

தூங்கும் விவேகம்..


திட்டம் போட்டுத் 
திருடுற கூட்டம் 
திருடிக்கொண்டே 
இருக்குது....அவை 
கட்டும் கொடிகள் 
மட்டும் மாறுது 
காரியம் முன்போல் 
நடக்குது.. 

வெட்டிப் போட்டு 
அழித்த காட்டின் 
வேழக் கூட்டம் 
வீட்டிலேயே !...அவை 
விளைச்சலைத் தேடி 
வெறியாய்க் கிளம்பின 
விவேகம் உனக்குள் 
தூங்குது.. 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


குறுகுறுப் பாக்கள்:(14)

கொழுந்தாய் 
இலையாய்ப் 
பூவாய்ப் பிஞ்சாய்க் 
காயாய்க் 
கனியாய் 
விதையாய் 
வேராய் 
ஒவ்வொன்றாக 
அழித்தோம் உங்களை.. 
அதனால்தானோ 
நியாயத் தீர்ப்பாம் 
கடைசி நாட்களில் 
காலம் எங்களை 
உனது கைகளுக்குள் 
அடைக்க்கலாமாக்கி 
அனுப்பி வைக்கிறது...! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 


ஆனை முகனின் அருளுண்டு; 
...
ஆறு முகனின் துணையுண்டு; 
மோனைத் தமிழும் எனக்குண்டு! 
...
முன்னே நிற்க நீயுண்டு; 
வானை மறைக்கும் காருண்டு, 
...
வந்து கொட்டும் மழையுண்டு! 
பானைச் சோறு நிதமுண்டு ! 
...
படிக்கக் கேட்பாய் செவிகொண்டு! 
[
இது கவின் சாரலன் அவர்களின் பானைச் சோறு கவிதைக்குக் கருத்தாக எழுதியது..] 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!