Thursday, December 6, 2012

பைத்தியந்தான்..


முட்டும் துயர்மறந்து, முன்னூறு நாள்சுமந்து, 
துட்டன் எனைஈன்றாள் துன்பமுற - முட்டமுட்ட 
வைத்தியம்,இல் லாது,உன் வழிவந்தேன், ஆதலினால் 
பைத்தியமே சாலும், பகர்! 

செல்லக் குழந்தை,எனச் சீராட்டிப் பாராட்டிக் 
கல்வி அறிவு,எனக்குக் காட்டியவர் -அல்லல்,உற 
வைத்துனைஎன் நெஞ்சில் வழிபாடு செய்தேனால் 
பைத்தியமே நன்றாய்ப் பகர்! 

எழுபிறப்பும் நின்றுதவி இம்மைக்கு,என் றில்லா 
முழுமைதரு கல்வி முழுதும் - பழுதாக 
வைத்தபடி இன்றெதுவும் வாய்த்திலனாய் நிற்பதால் 
பைத்தியமே நன்றாய்ப் பகர்! 

சின்,நடைகண்டு அன்று சிரித்தாளும், என்சிறிய 
இன்னகைகண்டு உள்ளம் இழந்தாளும் - வன்னடையால் 
கைத்த,மனம் கொண்டு கலக்கமுறச் செய்தேனால் 
பைத்தியமே இன்னும் பகர்! 

நல்லமகன் இல்லையென நற்றாயும், கல்விவழிச் 
செல்லும்.மகம் இல்லையெனச் சேர்ந்தோரும் -எல்லோரும் 
கைத்து,வைத்துச் சொன்னபொருள் காணேன்;பின் வந்ததனால் 
பைத்தியமே என்று பகர்! 

உறவினர்தம் உள்ளமும், இவ் வூரினர்தம் வாயும் 
கரைதுடைக்கும் எம்நண்பர் கண்ணும் -உற,வருத்தம் 
வைத்தவன்,என் நெஞ்சம் வருத்தம்,அறி தல்வேண்டிப் 
பைத்தியம்,என் றாய்,நீயே பார்த்து ! 

நாடாதே! என்றன்று நன்முறையில் தாய்சொல்லத் 
தேடாதே நான்வந்து தேடினன்பார்! -வாடாமல் 
புத்திசுவா தீனமிலான் போல்,ஆம்,என் செய்கைஎனப் 
பைத்தியம்,என் றாய்,அறிவாய்ப் பார்த்தது! 

கைத்திறலோன் ஆற்றிக் கடைந்தெடுத்த சிற்பமே, 
பொய்த்திறலோன் என்றவனைப் பொய்த்திடுமேல்- பைத்தியமே! 
போற்றும்,அவன் சிற்பம் புகழுக் குரித்தாமோ? 
ஏற்றம்அவ னோடதற்கு மே! 

பைத்தியமென் றாலும்,உன் பைத்தியமே நான்!எனது 
பைத்தியமே! நீ,உனதன் பைத்திருத்தி -வைத்தியரால் 
வேறாகச் சென்று விலகுதலும் வேண்டாம்,பூ 
நாறாக வாழ்வோம்,வா நாம்! 

-
-                                      [1965-இல் எழுதியது]            -0-

No comments:

Post a Comment