Thursday, November 10, 2011

பொய்த்தூக்கம் போம் நாள் என்றோ?


நோய்களிலே அறியாமை நோயொ ழிந்து


       நூற்றுக்கு நூற்றுவரும் படித்து வந்து


தாயகத்துத் தமிழரினம் முதன்மை எய்தத்


       தனித்தலைவர், கருத்தமன மில்லா ‘ராசர்”


வாயார உணவிட்டு வழிசெய் தார்;பின்


       வந்தவர்கள் செய்ததென்ன? உழவர் கூட


வாயார உண்பதற்கு வழியுண் டோ?நம்


      ‘வயற்புரட்சி’ உழவரையே உரமாக் கிற்றோ?           01




கால்முளைத்து நடந்ததுமே, கல்விச் சாலை


      காட்டுகிறோம்; சரிதான்;இக் கல்வி கூட்டும்


‘சால்’களில்தான் களைநீக்கி உரமிட் டோமோ?


      சந்து,பொந்து நிறைந்தயிடம் வயலு மாமோ?


நூல்களையே இடம்மாற்றும் சுமையுந் தோ,நாம்?


      நோய்பரப்பும் இடம்,மருந்து மனையென் றாமோ?


சூல்பெருக்காப் பதர்விளைந்த பயன்தான் நம்மைச்


     சுற்றிலுமிக் கேடுகளை வளர்க்கு தம்மா!                    02



துறைதொறுமே புதுமைகளைத் தோற்று வித்துத்


     ‘தொழிற்புரட்சி’ வெடித்ததுவோ? மின்வெட் டின்று


பறைகொட்டிச் சிரிப்பதுவும் இதைப்பார்த் தாமோ?


     பாம்பொத்த வரிசையில்லா இடமொன் றுண்டோ?


பிறைக்கைகள் ஏந்துகின்ற பிறப்பாய்த் தானே


     பிறக்கின்றோம், இருக்கின்றோம், இறக்கின் றோநாம்!


சிறைச்சாலை நெரிசலையும் குறைக்கத் தானே,


     சீர்மிகுந்த கட்டிடங்கள் திறந்துள் ளோம்,நாம்!          03



மீன்குஞ்சே மக்களெலாம்! வாக்குச் சீட்டால்


     வெறிப்பாம்பின் வயிற்றுணவே! பதவி கொண்டே


தேனீக்க ளாம்மக்கள் வரிப்ப ணத்தைத்


     திட்டமிட்டுச் சொத்தாக்கும் திருடர் தம்மை


ஏனென்று பகுந்தறிவோர் கேட்ட துண்டோ?


     எம்மக்கள் நடுகல்லாய் இருக்கத் தானோ?


மான்குட்டி மக்களெலாம் வளரப் போமோ?


     வளர்ந்தாலும் புலிகளுக்கே இரைதா னாமோ?         04



தொட்டிலிலே குழந்தையழும் பாலுக் காக!


     தொடர்ந்ததற்குப் பின்னரழும் கல்விக் காக!


எட்டிவிட்டால் கல்லூரி இடங்கி டைக்க,


     இலட்சங்கள் வேண்டியழும்; அதுவும் கூடக்


கிட்டிவிடப் பட்டத்தின் பின்னால் வேலை


     கேட்டழுகை; தினக்கூலி கேட்டுப் பெற்றுக்


கட்டுபடி யாகிறதோ இலையோ வேண்டுங்


     கலியாணத் திற்கழுகை தொடரும் அன்றோ?           05



‘எதிர்கால விடியலே!எம் வரலாற் றேட்டில்


இணையவந்த புதுவரியே!’ என்ற பேர்க்குப்


புதிதாக என்செய்தோம்? மற்று மிங்கே


பொறுப்பான திட்டங்கள் என்ன கண்டோம்?


கதிர்தோன்றி , நிலாத்தொன்றி, விண்மீன் தோன்றிக்


கண்டங்கள் தோன்றிடுமுன் தோன்றி வந்த


மதியார்ந்த குலமெனவே பலவாய்ப் பேசி


மயக்கத்தை கொடுத்தோம்;நம் மதிய ழிந்தோம்!          06






சாதியெனும் உடும்பெறிந்தும் உணர்வென் கின்ற


சாளரத்தின் உள்நுழைந்தும் திருட னைப்போல்


போதைகளாம் இலவசங்கள் புகட்டித் தூங்கும்


பொதுசனத்தின் கைப்பொருளாம் வாக்குச் சீட்டைச்


சேதமிலாது எடுத்தோடிக் கோட்டை பற்றிச்


செய்வதெலாம் மக்களுக்கே என்று காட்டி


மோதிடுவார் உடன்கூட்டுச் சேர்ந்து கொண்டும்


முழுக்கொள்ளை யிடுவார்தம் மூளை என்னே!           07






மனிதகுலக் குளத்துள்ளே தேளி மீன்கள்


மறையாமல் பெருகியதால் குளங்கள் ஏரி


இனியில்லை யெனும்படிக்கே வீடாய்ப் போச்சு!


எழுந்தமலை முடிகளுமே கொட்டிப் போச்சு!


இனிக்கின்ற சேதிகளோ, நாளி தழ்கள்


எகிறிவிழும் சத்தத்தில் பதறும் நெஞ்சம்!


புனிதரென ஆனோமோ? இலஞ்ச மின்றும்


பொய்த்ததுவோ? பொய்த்தூக்கம் போம்நாள் என்றோ?  08






இனியுமொரு விதிசெய்ய எழுவோம் நாமே!


இந்தவொரு தேர்தலிலே முயல்வோம் நாமே!


தனிமனித ஒழுக்கத்தில் விழுந்தோர் தம்மைத்


தவிர்த்திடுவோம்! ஒதுக்கிடுவோம்! கட்சி பாரோம்!


மனிதரெலாம் மனிதருக்கு மனித ராலே


மாண்புதரும் ஆட்சிதர வாக்க ளிப்போம்!


வனிதையரே! இளைஞரேநீர் விழித்து வாரும்!


வருங்காலம் புதுச்சரிதம் படைக்க நேரும்!                    09


                                           ஃ 0 ஃ


ஒளியின் முகங்கள்..!


குழந்தை முகத்தில் சிற்றிதழில்
   குலவும் நகையின் ஒளிதானோ
கொழுந்துச் சுடரோன் கீழ்த்திசையில்


   குழைத்துத் தீட்டும் நிழலொளிதான்?

மழலைச் சிறுவர் இளமுகத்தில்
    மண்டும் குறும்பின் ஒளிதனோ
மழையைச் சிதறும் கருமேகம்
    மலரச் செய்யும் மின்னொளிதான்?


ஆர வாரம் கொள்ளிளைஞர்
    அடக்கா நகையின் ஒளியோசொல்
பேர லைகள் புரண்டுவரப்
    பெரிதாய் எழும்பும் நுரையொளிதான்!


உச்சி வெயிலோன் ஊனுருக்க
    உருக்கும் வெள்ளி ஒளியோசொல்
நச்சுக் கண்டன் திரிபுரத்தை
    நசிக்க நகைத்த பேரொளிதான்!


கருத்தைக் கவர்வான் முன்வெட்கம்
    கவிழ்த்த முறுவல் ஒளியோடா
பருத்த மேகத் திரையுள்ளே
    பதுங்கும் நிலவின் இளவொளிதான் !


நின்றாள் வெட்கம் நினைத்தவனின்
    நீர்த்த இதழின் ஒளியோடா
அன்றப் பொழுதே அலரும்,மலர்
    அழகு,ஏறு இதழின் புத்தொளியும்!


காதல் இருவர்க்கு அலர்கூட்டிக்
    கண்கள் சிமிட்டும் ஒளியோடா
கூதிர்ப் பருவ விண்மீன்கள்
    கூடிச் செய்யும் கூரொளிதான்!

                             < 0 >

03/’89 குழந்தைக் கவிஞர் நினைவில்..


பாவாணர் வானத்துப் பிள்ளைநிலா கண்தூங்கிப்
போவானேன்? எம்மைப் பிரிவானேன்?-கூவியழும்
பிள்ளைக் குரல்களுக்குத் தாலாட்டாய்ப் பாடியவாய்
கொள்ளை யடித்ததார் கொல்!                                                                        01


பிஞ்சுக் கரங்களுடன் பேனா உறவாடக்
கொஞ்சும் மொழிகளிலே கொள்கைநலம் – விஞ்ச
உரைத்தார் இவரினும் உண்டோ? தமிழும்
நரைத்தே அறிந்திலன் நான்!                                                                         02


சொல்லெளிதாம் தண்டமிழில் சோர்வின்றித் தான்கண்ட
நல்லன,எல் லாமே நவின்றார்;அச் – செல்வமதை
வானோர் குழந்தைகட்கும் வாரிக் கொடுத்திடவோ
தானேறிப் போனாரவ் வான்!                                                                          03


                                                      < 0 >

பாரதத்தை எழுப்ப வாரீர் !


பட்டப் படிப்பு மாணவரே!
    பள்ளி முடித்த தோழர்களே!
நட்டப் படுமிந் நாட்டினரின்
    நலிவைப் போக்க எழுவீரே!
பட்டுச் சிறகு மனங்களையே
   பலவண் ணத்துக் கொடிமீது
கட்டு விரித்துச் சாய்த்திடுவீர்!
    கைகள் கொடுத்துத் தூக்கிடுவீர்!           01


நட்டப் பட்டோம் ஒற்றுமையில்
   நாட்டம் இல்லா திருந்ததனால்;
கட்டப் பட்டோம் அந்நியரால்
   கலந்து வாழத் தவறியதால்!
ஒட்டப் பெற்றொம் பின்பவரால்;
   உணர்ந்தோ மில்லை அன்றும்நாம்!
வெட்டிப் பிரித்தார் இருநாடாய்
   விட்டுப் பிரியும் முன்னாலே!                 02

கெட்டுப் போக நினைப்போர்க்கும்
    கிடைக்கும் வழிகள் ஆயிரமே!
ஒட்டுப் போட்டச் சட்டைபோல்
    உடனே நாட்டை மொழிவாரித்
திட்டுக் கள்போல் பிரித்தோமே!
   திரும்பப் பிரிவிற் குள்போக!
எட்டி நடக்க முடியாமல்
      இழுக்கும் கால்கள் கொண்டோமே! 03

கொட்டிக் கிடக்கும் வழிகளினைக்
     கொள்ளை யடிக்க நினைப்போர்முன்
பட்டி ஆடாய்ச் செல்லாமல்
     பலதே சத்துப் பூமியிதில்
முட்டி மோதி முன்னேறும்  
     முயற்சி தூக்கும் ஒருநாடாய்
இட்டம் வைத்துச் சிதறாமல்
     எழுந்து நடக்க முன்வாரும்!                04

மொழிகள் நதிகள் போன்றவையே!
    முடக்கி வைக்க நினையாதீர்!
வழிகள் கூட்டி நமக்கவைகள்
    வாய்க்கா லாக இருக்கட்டும்!
பழிகள் சேர்த்து நமை,மீண்டும்
    பழங்குடி மக்கள் ஆக்காமல்
இழிவை நீக்கித் தெளிவுடனே
    எழுந்து நடக்க உதவட்டும்!                   05

கொழித்துக் கிடக்கும் நலங்களெலாம்
     கூட்டுச் சொத்தாம்; இவைகளினை,
வழித்துக் கொண்டு சுயநலத்தை
     வளர்க்க எண்ணி வருவோரின்
ஒளித்து மறைத்த உணர்வுகளை
     ஓர்ந்து தெரிந்து தடுத்தெழுவே
விழிப்புக் கூட்டிப் படியுங்கள்!
    வெறுப்பு நீங்கப் படியுங்கள்!                 06

நாட்டு வளங்கள் நமக்காக!
     நாமெல் லோரும் ஒன்றாகக்
கூட்டுப் பொறுப்பில் அவைகாப்போம்!
     கொள்ளை யடித்து வெளிநாட்டில்
போட்டு வைப்பார் சொல்கேட்டுப்
     பொதுநல மற்ற பிரிவினைக்குள்
மாட்டி யழிந்து போகாதீர்!
     மகிழ்பா ரத்தை எழுப்பிடுவீர்!             07

                               < 0 >

 

கவிதைகொண் டினியும் வெல்வேன்!


கடைவிழி காட்டும் செய்தி
        கருத்தினில் இன்பம் சேர்க்கும்
இடைவெளி காட்டும் செய்கை
        எதுவுமே இனிமை கூட்டும்;
தொடைநயம் காட்டும் பாக்கள்
        தூக்கலாய்த் தோன்றும்; உங்கள்
நடைநயம் அறிந்த பேர்க்கு
        நட்பு,மெய் இன்பம் தோய்க்கும்!                      01


எழுதிநான் அனுப்பும் எல்லாம்
       எங்குதான் போகு மாமோ?
முழுதுமே ஒதுக்கி வைக்க
       முடிவதும் எங்ஙன் ஆமோ?
தொழுதுமே வேண்டத் தானோ?
        துவண்டுமே வீழத் தானோ?
வழுவிடுத்து உதவி யாக
       வார்த்தைகள் சொல்ல இன்றோ?                    02


நம்பிக்கை தளர மாட்டேன்!
       நல்லநாள் வரத்தான் செய்யும்!
வெம்பிக்,கை சோர மாட்டேன்!
       வேண்டுதல் நிறுத்த மாட்டேன்!
தும்பிக்கை ஒன்றைக் கொண்டே
       தூசினை, உணவைக் காற்றைக்
கம்பமா தேடிக் கொள்ளும்!
       கவிதைகொண் டினியும் வெல்வேன்!          03


                             < 0 >