Tuesday, January 24, 2012

தூங்கும் புலி..!


வெட்டிப் பேச்சு வீணருக் குள்ளே
    வீரம் இல்லை வெறுமையடி!
தட்டிக் கேட்கும் கைகள் உள்ளே
    தாய்மை காட்டும், தடங்களடி!
விட்டுக் கொடுக்கும் மனத்துக் குள்ளே
    வீரம் இருந்து வலிமறைக்கும்!
தொட்டுப் பார்க்க அதனுள் தானே
    தூங்கும் அகிம்சைப் புலிமுறைக்கும் !

தூங்கும் போது காண்பது கனவா?
    தூக்க மின்றிக் காண்பது கனவு!
ஏங்கு கின்ற ஏக்கமா கனவு?
    ஏற்ற செயலை முடிப்பது கனவு!
           


எவர்க்குக் கவிதை எழுதுகிறேன்!



தமிழன் என்ற நினைப்புடையோர்
   தமிழின் உயர்வில் முனைப்புடையோர்
அமிழான் தமிழன் எனச்சொல்வோர்
   அழகிய தமிழில் மனமிழப்போர்
கமழும் தமிழின் கனமறிவோர்
   கருத்தில் அதனைத் தினமுடையோர்
இமிழ்நீர் உலகில் மிகப்பெரியோர்!
   இவர்க்கே கவிதை எழுதுகிறேன்!

அச்சம் தன்னை விலக்கிவிடு!
   அஞ்சாமை நெஞ்சில் விதைத்துவிடு !
துச்சம் எனத்துயர் ஒதுக்கிவிடு!
   துணிவைச் செயலில் தூக்கியெடு!
கொச்சைப் பேச்சை நீக்கிவிடு!
   குழந்தை மனத்தை ஊக்கிவிடு!
பிச்சை வாழ்க்கை வெறுத்துவிடு!
   பின்னும் அவர்க்கே உதவிவிடு!

துணிவை வாழ்வில் துணையாக்கு!
   துன்பம் தடுக்கும் அணையாக்கு!
துணிவைச் செயல்களின் உரமாக்கு!
   தொடரும் பயன்களைப் பிறர்க்காக்கு!

அன்போ தென்றல் தாலாட்டு!
    அடிக்கும் புயல்முன் துணிவேற்று!
தென்போ டிருக்க விளையாட்டு!
  திறமை விளங்க துணிவாட்டு!

பயில்கின்றேன்



தொடுவானம் போலிருக்கும் சிலரின் நெஞ்சம்!
தொட்டுவிடப் போனாலோ தொலைவே மிஞ்சும்
எடுப்பான இவ்வரிகள் எவர்கைத் தஞ்சம்?
எழுதியவர் அய்யாறு வாசு தேவன்!
மிடுக்காக இதையெடுத்து வேழ வேந்தர்
மேற்கோளாய்ச் சொல்லிடுவார்! மீண்டும் மீண்டும்
படிக்காதார் யாருண்டு? படித்துத் தானே
பயில்கின்றேன் தொடுவானக் கவிதை இங்கு!

அவையடக்கம்!


தரிசு நிலத்தை உழுதுழுதே
தவிக்கும் ஏழை விவசாயி!
பரிசுப் பொருள்கள் பாராதே
பாடிக் களிக்கும் பாட்டாளீ!
முரசுக் கைகள் கேளாதே
மூடி சுமக்கும் எழுத்தாணி!
சிரசில் நிற்க முடியாமல்
சிந்தி வீழும் ஒருதூசி!

தரிச னங்கள் கிட்டாதே
தரைமேல் ஆடும் பூசாரி!
கரிச னங்கள் இல்லார்க்கும்
கைப்பூண் மாட்டும் ஆசாரி!
அரச ராகக் கவியோச்சும்
அனைவ ருக்கும் அனுசாரி!
பரிச லாலே தமிழ்க்கடலைப்
பாடிக் கடக்கும் ஒருகாரி!

Tuesday, January 3, 2012

ஒரு குடிமகனின் தீர்மானம்..!




செத்துச் செத்து வாழ்வதைநான் விட்டுவிட்டேன்    -இனிச்
சீவனுடன் வாழ்வதற்குக் கற்றுவிட்டேன்!
புத்திகெட்ட செயல்களையும் விட்டு விட்டேன்!`-இனிப்
புதுவாழ்வு வாழ்வதெனத் துணிந்து விட்டேன்!

முத்து முத்துக் குழந்தைகளின் முகம்நினைத்தேன்   -அவர்
முகம்தொலைத்த சிரிப்புகளுக்கு இனியுழைப்பேன்!
சக்திகெட்டு வாழ்வதுவும் வாழ்க்கையில்லை        -பலர்
சக்திபெற நானுழைப்பேன்! தாழ்வுமில்லை!

ஆசையெனும் மயக்கினிலே அமிழ்ந்துவிடேன்! -வெட்டி
அரசியலில் குரல்கொடுத்துத் தவழ்ந்துகெடேன்!
கூசியினி இலவயங்கள் மறுத்திடுவேன்! -நாட்டைக்
கூறுகட்டி விற்பவரை வெறுத்திடுவேன்!

மொழிசாதி மதம்,இனத்தை மறுத்திடுவேன்!   -தேச
முன்னேற்றம் தடுப்பவரை அறுத்திடுவேன்!
விழிமூடிப் பலபொறுத்த நிலைவிடுத்தேன்!    -எந்த
வேலையிலும் ஊழலறத் தலையெடுத்தேன்!

மத்தளம்போல் அடிவாங்கி அழுதவொலி      -இனி
மாறிவிடும்! புதுராகம் எழுந்ததடி!
வாழ்ந்தநடை மாற்றியிதோ எழுந்துவிட்டேன்!       -பூமி
வாழ்த்துமொலிப் பட்டாசாய் முழங்குதடி!

                              < 0 >

Monday, January 2, 2012

புத்தாண்டின் வாழ்த்துக்கள்…





உறக்கத்தை விட்டெழுவோம் ஊக்கம்  தூக்கி உறவைக் கூட்டி,
துறக்கத்தைப் பூமியிலே சமைப்போம் ஒன்றாய்! வந்தே வாழ்ந்து
இறக்கத்தான் வாழ்வென்றால் இங்கி ருக்கும் மரங்கள் கூட
கரங்கொட்டி நகையாவோ? கைகள் சேரும் பூமி காப்போம்!

மணலில் எழுதும் எழுத்தல்ல!
மறைந்து கிடக்கும் நினைவல்ல!
கனவில் கிடைத்த பொருளல்ல!
கதிரால் மறையும் பனியல்ல!
உணவில் கிடைக்கும் சுவையல்ல!
உண்டே உறங்கல் வாழ்வல்ல!
மணத்தைப்  பின்வைத்து ஒருநாளில்
மறையும் பூக்கள் போலல்ல!
குணத்தில் இயேசு போல்வாழ்வீர்!
குறைகள் அவரே தீர்ப்பாரே!

எல்லா நலனும் எல்லா வளனும்
எல்லா ருக்கும் கிடைக்க என்றும்
எல்லாப் மகிழ்வும் எல்லாப் புகழும்
எல்லை யின்றிப் பெருவீர் வாழ்க!

புதிய விடியல், புதுநம் பிக்கை
புதிய வளத்தின் மகிழ்ச்சியிது!
புதிய எண்ணம் புதிய சொற்கள்
புதிய செயல்களின் தொடக்கமிது!
புதிய சக்தி புதிய பலமிது
புதிய சிந்தனை நாளுமிது!
புதிய வானம் புதிய பூமி
புதிதாய்த் தொடங்கும் வேளையிது
புதிய நட்பு புதிய அன்பு
புதிதாய்ச் சேர்க்கும் பிரார்த்தனையின்
புதிய கூட்டின் புதிய வாழ்விது!
பொங்கும் நன்மைகள் பூக்கவிடு!
புதிய ஆண்டில் புதிதாய் வாழ்ந்து
புதிய உலகம் படைத்து எழு!