Saturday, October 22, 2011

தேர்தல்..! (செப்டம்பர் 2006)


01.  வாருங்கள் தோழர்காள்! வாக்குரிமை பெற்றோரே!
      போருங்கள் முன்னால்! புறப்படுவீர்! –தேருவீர்
      யோசித்தே வாக்குரிமை யுத்தக் கணைதொடுப்பீர்!
      யாசிப்போர் நாளையிங் கார்?

02. வாக்கெடுப்பாய்ப் பேசி, வளம்பலவும் காட்டி,
      தூக்கிவைப்பார் கண்டு துடிக்காதீர்! –வாக்கெடுப்பு
      வந்தகன்ற பின்னாலும் வந்துழைப்பார் யாரென்று
      சிந்தனைசெய்! பின்னோட்டுச் செய்!

03. கொடுப்பார்கை பார்த்தே குறியிடினோ, கூடிக்
      கெடுப்பார்கள் ஆட்சி!இது கேட்பாய்: -எடுப்பார்கைப்
      பிள்ளையாய் இன்னும் இருந்தால் முகமூடிக்
     கொள்ளையேன் தேர்தலும் கூறு!

04. சாதுமனம் வைத்தும், சமயமதைக் கொண்டும்,உம்
      நீதிமனங் கூறும் நியாயத்தைப் பேதலித்தே
      காட்டு மிராண்டிகளாய்க் கைநாட்டாய்ப் போடுமந்த
      ஓட்டுகே வைப்பீர் உலை!

                                                             <0>

1965. துன்பச் சுடலையில்.. ..!


01. சங்கந் தமிழ்முழங்கும், சந்நிதியில் தோல்முழங்கும்,
      எங்கும் ஒலிமிழங்கும் எப்போதும் – கங்குல்
      பகலென் றறியாது பாவைநினை வென்னுள்
      புகலில் இகல்முழங்கும் போது!

02. தென்னை தலையசைக்கும், தேன்வண்டு நாவசைக்கும்,
     பொன்னின் மகரந்தம் பூவசைக்கும்! –மின்னும்
     உடலசைக்கும், கன்னி உருவெழுந்து துன்பக்
     கடலசைக்கும் என்னுளெனுங் கால்!

03. மேகம் மலைசேரும், மின்னல் வெளிசேரும்
      வேகும் கதிர்சேரும் விந்தியமே! –போகும்
      ஒளியோ டிருள்சேரும், ஒண்டொடியாள் வாராது
      அளியோ டெனைச் சேரா அன்று !

04. கடலின் அலையும், கருவண் டிறகும்
      படகின் துடுப்பும், பழமும் – மடலும்
      தொடலைப் புதுமலரும், தூங்குமே! துன்பச்
      சுடலை தனிலென்னைச் சுட்டு!
                                           <0>