Saturday, October 22, 2011

1965. துன்பச் சுடலையில்.. ..!


01. சங்கந் தமிழ்முழங்கும், சந்நிதியில் தோல்முழங்கும்,
      எங்கும் ஒலிமிழங்கும் எப்போதும் – கங்குல்
      பகலென் றறியாது பாவைநினை வென்னுள்
      புகலில் இகல்முழங்கும் போது!

02. தென்னை தலையசைக்கும், தேன்வண்டு நாவசைக்கும்,
     பொன்னின் மகரந்தம் பூவசைக்கும்! –மின்னும்
     உடலசைக்கும், கன்னி உருவெழுந்து துன்பக்
     கடலசைக்கும் என்னுளெனுங் கால்!

03. மேகம் மலைசேரும், மின்னல் வெளிசேரும்
      வேகும் கதிர்சேரும் விந்தியமே! –போகும்
      ஒளியோ டிருள்சேரும், ஒண்டொடியாள் வாராது
      அளியோ டெனைச் சேரா அன்று !

04. கடலின் அலையும், கருவண் டிறகும்
      படகின் துடுப்பும், பழமும் – மடலும்
      தொடலைப் புதுமலரும், தூங்குமே! துன்பச்
      சுடலை தனிலென்னைச் சுட்டு!
                                           <0>



No comments:

Post a Comment