Thursday, November 24, 2011

வெளிப்படும் இறைவனே! வெளிப்படும்..!


      GOD IS NOT OBVIOUS AND NOT OBLIVIOUS TOO!
    வெளிப்படும் இறைவனே! வெளிப்படும்..!

அறிவெனும் நெருப்பினில் கருகிடும் ஆவியுள்
    அன்பெனும் நீரூற்ற வாரும்!
    அருளெனும் குளிரூட்டிக் காரும்!

அகந்தையாம் புரையினால் முகங்களைக் காண்கிலேன்!
    அகற்றிடும் துயரினைத் தாரும்!
    அதன்வழி தேற்றியே காரும்!

நுண்ணிய அறிவினோய்! நுண்ணுயிர்ச் செறிவினோய்!
    நோக்கமும் ஆக்கமும் தாரும்!
    நீக்கவும், சேர்க்கவும் வாரும்!

கண்ணிலே தெரிவதைக் காட்டியேன் மறைந்துளாய்?
    கருத்திலே விருத்தியைக் காட்டும்!
    கைவரும் பலன்களைக் கூட்டும்!

வேரினில் நீரிடக் கிளைகளில் கனிவரும்
    ஏறிடும் வழியதைக் காட்டும்!
    மாறிடும் புதுமையைக் கூட்டும்!

நேரிடும் சுயநலப் பார்வையும் சோர்வுமே
    நிகழ்வதைத் தடுத்தெம்மைக் காரும்!
    இகழ்வினை விடுத்தும்முள் சேரும்!

                  <25-Nov-11>

பாரத விடியலில் பாரதி.. ..! [ஒரு கூட்டணிக்கு அழைப்பு]


மதம்என்றால்ஓருணர்வு தன்னில் ஓங்கி
     மதகின்றி வழிவதெனில் மறுப்பார் உண்டோ?
கதவென்றால் வருவோரைப் போவோர் தம்மைக்
    கட்டுக்குள் வைத்துதவும் கருவி யன்றோ!
கதவிருந்தால் அடைப்பதுவே குறியென் போரைக்
    கண்ணிருந்தும் குருடரெனச் சொல்லார் உண்டோ?
மதமிங்கு கடவுளினை மறைக்க இல்லை!
    மனவுணர்வு களைஒழுங்கு படுத்தும் வாசல்!


இதமான சிந்தனை,சொல் செயலை ஊக்கி
    ஏற்றத்தை எல்லோர்க்கும் எடுத்துச் செல்லும்
விதமாக வாழ்வதினை விளக்கி வாழ்ந்து
    வேதனைகள் கிடைத்தாலும் விரும்பி ஏற்று
முதலாவ தாயிங்கே இறந்து யிர்த்த
    முழுமுதலை இயேசுவினை முன்இ ருத்திப்
பதமான தமிழ்ப்படித்த பாவ லர்முன்
    பணிந்தவனாய்த் தொழுவான்,இக் காளி யப்பன்!


இனி : தலைப்புக் கவிதை:

வீர சுதந்திரம் வேண்டி நின்றாய் -நாங்கள்
    வேறொன்று கண்டோமோ?  -மொழி
கூறி நிற்பார் நாட்டைக் கூறிடுவார்      -அந்தக்
    கூட்டமும் தவிர்த்தோமோ?

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
    பொய்யுரை என்றாயே!             -நாங்கள்
இகழுறு செயல்களை எண்ணிடார் தம்மையே
    இருக்கையில் வைத்தோமோ?

பிறந்தவர் யாவரும் இறப்பதும் உறுதியாம்
    பெற்றியைப் பேசினாயே!    -நாங்கள்
இறந்தபின் சந்ததிக் கெண்ணிலாச் செல்வமே
    இருந்திட உழைக்கிறோமோ?

மானிடப் பிறப்புமே பெறுதற் கரிதெனும்
    மாண்பினைப் பாடினாயே!   -நாங்கள்
ஊனுடல் விற்றுமே உறவுகட் காகவே
    ரினைச் சுரண்டுவோமோ?

விண்ணிடை இரவியை விற்றுவிட் டாலினி
    விடியலுக் கென்ன செய்வோம்?     -நாங்கள்
மண்ணிதில் இருப்பதை, மக்களைச்  சுரண்டுவோம்!
    மாற்றிதற்கு உண்டுமாமோ?!

மண்ணிலின் பங்களை விரும்பியே சுதந்திர
    மாண்புகள் பேசி னோம்தான்!
கண்ணிரண் டும்விற்றுக் கஞ்சிக்கு நிற்பவர்
    கண்டுமே கூசினோமோ?

 ‘வந்தே மாற்றுவோம்என்றுதான் கூவினோம்!
    வாய்ப்புகள் தேடிநின்றோம்!
தந்தார் மக்களும்! தன்னிறை வுக்கெனத்
    தவிக்கிறோம்! உழைக்கிறோமே!

வந்திடு பாரதி! வாக்குகள் கேட்டிடு!
    வாய்ப்புகள் கிட்டலாமே!
 ‘இந்தவோர் பாரத விடியலை’ப் பாரதி!
    ஏற்று,வந்து ஒட்டலாமே!
                  < 24-11-2011 >

சுயதொழில் செய்!



கற்க, கசடறக் கற்றபின், தன்தொழிலில்
நிற்க, சிறப்பின் நிமிர்ந்து!                                                                    01

கற்றதனால் ஆய பயனென்கொல்? கைகட்டி
நிற்கின் பிறர்முன்பு நீ.                                                                          02

கற்றானின் நாணுடைத்தக் கல்வி, குடியோம்பக்
குற்றேவல் ஒன்றோ குறி!                                                                   03

கற்றாரைக் கற்றாரே காமுறுவர், கைத்தொழில்
மிக்காரை ஏத்தும் உலகு!                                                                    04

கல்லானென் றாலும் உலகேத்தும் கைத்தொழிலில்
வெல்வானைப் பார்த்து வியந்து!                                                      05

காதல் சுயதொழிலாய்க் காதலி! அஃதூட்டும்
ஊதியத்தோடு ஆன்ற உயர்வு!                                                           06

ஆய்ந்தறிந்து செய்யாத் தொழிலானும், வட்டாடிச்
சாய்ந்தழிவான் தானும் சமம்!                                                           07

சென்ற இடத்தால் செலவிடாது நன்றாய்ந்து
போட்டமுதல், ஈட்டும் புகழ்!                                                             08

கொள்ளற்க வேண்டாக் கடனை! கொடுக்கற்க
கள்ளற்கே என்றும் கடன்!                                                                  09

ஈதல் இசைபட வாழ்தல் இவைகூட்டும்
நீதொழில் செய்ய நினை!                                                                  10

                        < Nov.88>

இளந்தலை வங்கியே! கிளர்ந்தெழு…!




செய்வன திருந்தச் செய்யும், சிந்தனை உளத்து வேண்டும்;
மெய்வருந் திடஉ ழைக்கும் மேன்மைநீ ஏற்க வேண்டும்!
பொய்வரும் போது கண்டு, புனைந்துரை களைய வேண்டும்!
கைவரும் செயல்கள் தேர்ந்து கடிவினை முடிக்க வேண்டும்!

அய்யநின் அடிக்கண் ஏவல், அறிந்துசெய் பவரி டத்தும்
பையவே பேச வேண்டும்; பண்புடன் உறுதி சேர்த்தே
ஐயமில் குறிப்புக் காட்டி, அவருடை நன்மை கேட்டுச்
செய்வதில் தயக்க மில்லாச் செயலினில் ஓங்க வேண்டும்!

தானையர் போல்,இல் லாத தலைவனென்று உன்னைத் தானே
ஏனையோர் கருதும் வண்ணம் ஏற்புடன் நடக்க வேண்டும்!
வானவர் தொழிலைக் கூட்டி, வந்தவர் என்றெ எண்ணி
மானமும் பரிவும் காட்டி மதிப்புடன் நடத்த வேண்டும்.

அண்டினோர் இடத்தே அன்றி, அறிவகை யில்லார், வங்கி
கண்டிலார் இடத்தும் சென்று கனிவுடன் சேமிக் கின்ற
பண்டமும் விரித்துக் கூறிப் பணமவர் கொடுக்கப் பெற்றுக்
கொண்டு,அவர் வைப்புச் சேர்க்கும் கொள்கையன் ஆதல் வேண்டும்!

உள்ளிடை ஊர்க்கண் கேட்டும், உரைமொழி தெளியத் தேர்ந்தும்,
தெள்ளிய வகுப்பால் கேட்ட தேவையை அளந்தும், பின்னர்க்
கொள்வன ஈடாய்ப் பெற்றுக் கொடுப்பன அளவில் நல்கும்
உள்ளமும் உவக்கக் காட்டி உறுதொழில் வளர்க்க வேண்டும்!

கிளர்ந்தெழு! சோர்வறு! கிளைநடத் திடு!உடன்
வளர்ந்தெழு! வாமனன் மாநிலம் அளந்தவாறு!
இளந்தலை வங்கிநாம்! இனிவரும் நாட்களில்
ஒளிர்ந்திட! உயர்ந்திட! உடன்வரும் அவனருள்!
                       < May 1983 >