Thursday, November 24, 2011

பாரத விடியலில் பாரதி.. ..! [ஒரு கூட்டணிக்கு அழைப்பு]


மதம்என்றால்ஓருணர்வு தன்னில் ஓங்கி
     மதகின்றி வழிவதெனில் மறுப்பார் உண்டோ?
கதவென்றால் வருவோரைப் போவோர் தம்மைக்
    கட்டுக்குள் வைத்துதவும் கருவி யன்றோ!
கதவிருந்தால் அடைப்பதுவே குறியென் போரைக்
    கண்ணிருந்தும் குருடரெனச் சொல்லார் உண்டோ?
மதமிங்கு கடவுளினை மறைக்க இல்லை!
    மனவுணர்வு களைஒழுங்கு படுத்தும் வாசல்!


இதமான சிந்தனை,சொல் செயலை ஊக்கி
    ஏற்றத்தை எல்லோர்க்கும் எடுத்துச் செல்லும்
விதமாக வாழ்வதினை விளக்கி வாழ்ந்து
    வேதனைகள் கிடைத்தாலும் விரும்பி ஏற்று
முதலாவ தாயிங்கே இறந்து யிர்த்த
    முழுமுதலை இயேசுவினை முன்இ ருத்திப்
பதமான தமிழ்ப்படித்த பாவ லர்முன்
    பணிந்தவனாய்த் தொழுவான்,இக் காளி யப்பன்!


இனி : தலைப்புக் கவிதை:

வீர சுதந்திரம் வேண்டி நின்றாய் -நாங்கள்
    வேறொன்று கண்டோமோ?  -மொழி
கூறி நிற்பார் நாட்டைக் கூறிடுவார்      -அந்தக்
    கூட்டமும் தவிர்த்தோமோ?

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
    பொய்யுரை என்றாயே!             -நாங்கள்
இகழுறு செயல்களை எண்ணிடார் தம்மையே
    இருக்கையில் வைத்தோமோ?

பிறந்தவர் யாவரும் இறப்பதும் உறுதியாம்
    பெற்றியைப் பேசினாயே!    -நாங்கள்
இறந்தபின் சந்ததிக் கெண்ணிலாச் செல்வமே
    இருந்திட உழைக்கிறோமோ?

மானிடப் பிறப்புமே பெறுதற் கரிதெனும்
    மாண்பினைப் பாடினாயே!   -நாங்கள்
ஊனுடல் விற்றுமே உறவுகட் காகவே
    ரினைச் சுரண்டுவோமோ?

விண்ணிடை இரவியை விற்றுவிட் டாலினி
    விடியலுக் கென்ன செய்வோம்?     -நாங்கள்
மண்ணிதில் இருப்பதை, மக்களைச்  சுரண்டுவோம்!
    மாற்றிதற்கு உண்டுமாமோ?!

மண்ணிலின் பங்களை விரும்பியே சுதந்திர
    மாண்புகள் பேசி னோம்தான்!
கண்ணிரண் டும்விற்றுக் கஞ்சிக்கு நிற்பவர்
    கண்டுமே கூசினோமோ?

 ‘வந்தே மாற்றுவோம்என்றுதான் கூவினோம்!
    வாய்ப்புகள் தேடிநின்றோம்!
தந்தார் மக்களும்! தன்னிறை வுக்கெனத்
    தவிக்கிறோம்! உழைக்கிறோமே!

வந்திடு பாரதி! வாக்குகள் கேட்டிடு!
    வாய்ப்புகள் கிட்டலாமே!
 ‘இந்தவோர் பாரத விடியலை’ப் பாரதி!
    ஏற்று,வந்து ஒட்டலாமே!
                  < 24-11-2011 >

No comments:

Post a Comment