Thursday, November 24, 2011

வெளிப்படும் இறைவனே! வெளிப்படும்..!


      GOD IS NOT OBVIOUS AND NOT OBLIVIOUS TOO!
    வெளிப்படும் இறைவனே! வெளிப்படும்..!

அறிவெனும் நெருப்பினில் கருகிடும் ஆவியுள்
    அன்பெனும் நீரூற்ற வாரும்!
    அருளெனும் குளிரூட்டிக் காரும்!

அகந்தையாம் புரையினால் முகங்களைக் காண்கிலேன்!
    அகற்றிடும் துயரினைத் தாரும்!
    அதன்வழி தேற்றியே காரும்!

நுண்ணிய அறிவினோய்! நுண்ணுயிர்ச் செறிவினோய்!
    நோக்கமும் ஆக்கமும் தாரும்!
    நீக்கவும், சேர்க்கவும் வாரும்!

கண்ணிலே தெரிவதைக் காட்டியேன் மறைந்துளாய்?
    கருத்திலே விருத்தியைக் காட்டும்!
    கைவரும் பலன்களைக் கூட்டும்!

வேரினில் நீரிடக் கிளைகளில் கனிவரும்
    ஏறிடும் வழியதைக் காட்டும்!
    மாறிடும் புதுமையைக் கூட்டும்!

நேரிடும் சுயநலப் பார்வையும் சோர்வுமே
    நிகழ்வதைத் தடுத்தெம்மைக் காரும்!
    இகழ்வினை விடுத்தும்முள் சேரும்!

                  <25-Nov-11>

No comments:

Post a Comment