Wednesday, November 23, 2011

‘தப்பாத சாவு’.


05/1965    தப்பாத சாவு..  முன்னுரை

நாம் உயிரோடிருக்கிறோம், செயல்படுகிறோம் என்பது சக்தி நம்முள் இருப்பதைக் காட்டுகிறது. அச்சக்தி நம்மைப் பிரிந்ததும் நாம் ‘சவம்’ எனப்படுகின்றோம்; ‘நேர்தலும்’ பிரிதலுமான தொழிலைக் கொண்ட ‘சாவு’ சக்தியின் மற்றோரு பெயரே என்று சொல்ல வருகிறது               ‘தப்பாத சாவு’.


குழந்தை:

 ‘ஒளியறியா இருட்குகையில் ஒருபத்து பாதங்கள்
   ஓய்ந்தி ருந்து,
விழியுணர்வோ, மொழியுணர்வோ விளங்காத நிலையதனில்
   வெறுமே உண்டு
பழியுணர்வோ, தொழிலறிவோ பாபமெனும் செயலுணர்வோ
   படிதல் இல்லாக்
குழிச்சிரிப்புக் குழந்தையெனைக் கொள்ளான்’என்று இருந்தேனைக்
   கொண்டான் தானே!

வாலிபன்:

 ‘வளர்ந்தவரை பெற்றவரின் அடிமைகளாய் வளர்ந்தோம்,நாம்
   வாலி பத்தில்
தெளிந்துள்ளோம் இப்பொழுது தானே,இவ் வுலகத்தைத்
   தெரிந்த மட்டும்
களியுந்தும் மனத்தோடும் கலந்துணர்ந்து சுவைத்திடுவோம்,
   காலன் நம்மை
அளியுந்தப் பரிவோடும் ஆதரிப்பான் எனநினைத்தேன்’
   அடடா கெட்டேன்!

பருவ மங்கை:

 ‘ பட்டினைப்போல் பவளம்போல் பளபளக்கும் கண்ணாடிப்
   பருவ மேனிக்
கட்டழகைக் கண்டுவிடின் கூற்றுவனும் ஆண்தானே
   கவிழ்ந்து, வாழ்க்கைச்
சட்டமதன் பிடிதளர்த்திச் சாவெனக்கு வாராது
   சரணிட் டோடும்;
இட்டமுடன் இருந்திடலாம் எனநினைத்தேன்’ இறுமாப்பை
   எரித்தான் அய்யோ!

குடும்பத் தலைவன்:

பெண்மனத்தின் பொருளுணர்ந்து பேருலகின் நிலையறிந்து
   பெருமை தோன்ற
மண்வளர்த்த பெரியவர்கள் மதித்துரைத்துப் புகழ்கொடுத்த
   மனைவாழ் வைநான்
உண்மையுடன் கைக்கொள்வேன், ஒளிவில்லா நெறிகளுடன்
   உணர்ந்து வாழ்வேன்;
கண்ணொளியில் லாதவனோ கூற்றுவனும்?’ எனவிருந்தேன்
   கவர்ந்தான் தானே!


துறவி:

நான்மறையும் கற்றுணர்ந்து ஞானமுடன் தனித்திருக்கும்
   நல்லோ னாக
ஆன்மநெறி நிற்பவனாய் ஆண்டனின் அருள்வேண்டி
   அமைந்த வாழ்வால்
ஊன்வெறுத்தும் உயிர்வெறுத்தும் ஒருமையுடன் ஒன்றியுள்ள ,   
    உயர்வைக் கண்டும்
தான்வருவ னோகூற்றும்? என்பா’லென்று இருந்தேனைத்
   தவிர்த்தா னில்லை!

மன்னன்:

தேர்முரசு கொடியென்றும், திரவியங்கள், நாடென்றும்
   தேடிச் சென்று
பேரரசன், வள்ளலெனப் பேரெடுக்கப் பிறர்பொருளைப்
   பிறருக்கு ஈந்து,
போர்முகத்தில் புலியெனவே புலவர்பலர் பாட்டெழுதிப்
   புகழக் கேட்டுப்
பார்முகத்தில் எனையெதிர்க்கும் பகையுளதோ? எனவுரைத்தேன்!’
   பணிந்தேன்! உண்மை!

சிந்தனைவாதி:

மனிதமனங் கல்லானால் மற்றெனது சிந்தனையே
   உளியாம்; நானோ
கனிச்சுவையும் செந்நெருப்பும் கலந்தெடுத்து வீசிவரும்
   காற்றாய்ப் பேசித்
தனித்தவழி நம்மதுவே, தள்ளாத சொர்க்கத்தின்
   திறவு கோல்,என்று
இனித்தமொழிச் சுவையுணர்வால் இயமனையும் இழுத்திடவே
   இருந்தேன்’ ஏய்த்தான்!

கவிஞன்:

ஞாலமெனது எழிற்கோட்டம்; நானிலமென் பூஞ்சோலை;
   நல்லது எல்லாம்!
சாலவும்,எல் லாமினிதே! சாவினிலும் அமைதி,அதைச்
   சார்ந்த இன்பம்!
கோலமயில் பெண்ணெனினும் குளிர்மதியின் உருவெனினும்
   குவல யத்தே,
நாலுமெனக்கு அழகேதான்! அளவில்லா நளினத்தால்
   நாட்டும் இன்பம்!

என்றெல்லாம் பித்தேறி, எழுத்தென்னும் மாயக்க்கைக்
   கோலால் பல்லாம்
நன்றென்றும் தீதென்றும் நாடாத நடைகொண்டு
   நகரைக் கூட்டி
என்றென்றும் வாழ்வேன்நான், இறவேன்,என் எழுத்துக்கள்
   இறவா மைபோல்
என்றெல்லாம் வரிகூட்டும் எழுத்தாளர் களும்,என்போல்
   ஏமாந் தோரே!’

சாவு:

பழுத்தகிழ உருவத்தான்! பாரினுக்கும் உனக்குமொரு
   பற்று நானே!
முழுத்துறவு பூண்டவர்க்கும், முத்தியடை கின்றவர்க்கும்
   முன்பு நானே!
உளுத்தமரம் எனவுதிர்ந்து, வயிரமிழந்து ஒழிந்துவிடும்
   மனிதா! உன்னுள்
அழுத்தமெனும் சக்தி,கடல் அறியாத வாறு,அதனுள்
   அமைந்த தைப்போல்

புகுந்திருந்து, சக்தியெனும் புதுமையென வாழ்க்கையினைப்
   புரட்டிக் காட்டித்
தொகுத்தவைகள் நீயறியத் துணையாகும் அறிவென்றும்
   துலங்கி நின்று
வகுத்து,உனது மனமென்ற வாய்க்காலாய் உன்னுடலில்
   வடிந்து, மாயப்
பகுத்தறிவாய்த் தோன்றிநின்று பறந்துவிடும் நான்,நீ,தப்
   பாத சாவே!

மீனினங்கள் உயிர்வாழத் தண்ணீரிற் கலந்துதவும்
   காற்றாய் நிற்பேன்!
தேனிருக்கும் அடைநிரப்பத் தேவையதை விருத்திசெயும்
   திரட்டாய்ப் பூவில்
நானிருப்பேன்! அரசாட்சி நடத்திடுவேன்! புரியாமல்
   நான்,நான் என்று
மானிடனே! வீணாய்,ஏன் வாய்வீச்சு? நான்நீ,தப்
   பாத சாவே!

                                  < 0 >

இதயம் ஒரு கடிகாரம்..!


 [ மார்ச்சு.1967  ]     

காலத்தை அளப்பதற்கே கருவி வேண்டிக்
   கதிரவனின் பெயர்ச்சிதனைக் கண்ட மக்கள்
வாலொளிதன் தோற்றமுடன் மறைவும் சேர்த்து
   வாய்ப்பதனை நாளென்று வகுத்தார்; அந்த
மேலொளியின் பெயர்ச்சியதோ போலித் தோற்றம்!
   மேதினி,தன் அச்சினிலேசுழலத் தோன்றும்!
ஞாலமெலாம் ஒப்பிடினும், இந்தக் காலம்
    ‘நாடி’மணி நின்றோர்க்கோ இறந்த காலம்!

ஒவ்வொருவர் நெஞ்சுள்ளும் ஓடும்! ஆனால்
   உணர்ந்தும்,ஒலி கேட்பதிலை, உடையோர் காதும்!
எவ்வொருவர் முயற்சிக்கும் இதனைப் போன்றே
   இன்னொன்றைப் படைப்பதெனல் இயலா தாகும்!
அவ்வவரே முயன்றிடினும் அடங்காது ஆனால்
   அடங்கியபின் ஆயிரம்தான் செய்தும் ஒடா(து)!
இவ்வரிய கடிகாரம் இதயம் ஒன்றே!
   இதுநிற்கக் காலமவர்க்கு இறக்கும் தானே!

                                      < 0 >