Monday, October 24, 2011

(02/1968) பிரிந்தும் வாழ்வோம்..!



பாகான நம்காதல் பதத்தில் முற்றிப்
    பக்குவமும் கெட்டதடி! வாழ்க்கை யென்னும்
மாகாத வழிதனிலே நீயும் நானும்
    மனமறியா தெதிர்வந்தோம்! மயங்கி விட்டோம்!
ஆகாத செயலில்லை அதுவென் றாலும்
    அருகுள்ளோர் விரும்பவில்லை; ஆயின் உள்ளம்
நோகாது நொந்துகொண்டோம்! நொடித்தோம்! அன்பு
    நோயாக வளந்ததடி !மருந்தாய் இல்லை!


இல்லாத பொருளில்லை அன்பு நம்முள்
    இருந்துமதன் பயன்காண வரவேற் பில்லை
சொல்லாத கதையில்லை நமது நெஞ்சம்
    சொல்லுதற்கு மொழியின்றி வெளிப்பா டில்லை;
நில்லாத பொருளில்லை நினைப்பு நம்முள்
    நெருங்கியவர் தாமுமதை நொண்டி யென்பார்!
பொல்லாத வேளையெனப் பொய்யைச் சொல்லிப்
    போவதற்கும் பிரியமில்லை; புரிவா யோடி!


கண்பார்த்த போததனைக் காத்துத் தோற்றோம்!
    கால்நடந்த போததனைக் கடிந்து தோற்றோம்!
பண்பு,ஆர்த்த பொழுததற்குப் பணியத் தோற்றோம்!
    பலருரைத்த பொழுதுணர்ந்து பார்க்கத் தோற்றோம்!
மண்பார்த்த நடைபார்த்தே மறந்து போன
    வருங்காலப் பெரும்பொருளைக் கருதத் தோற்றோம்!
விண்பார்த்து வளர்ந்துள்ள கோபு ரத்தை
    வியந்தன்றி யதன்பொருளை விளங்கத் தோற்றோம்!


தோற்கின்ற வேலையினைத் தொடரத் தானோ?
    துன்புறுத்தும் செயல்களினித் துளிர்க்க லாமோ?
நூற்கின்ற நூலிடையில் நைந்தி ருக்க,
    நூலறுந்து போவதிலே வியப்பு முண்டோ?
பார்க்கின்ற கண்ணொளியிற் குன்றிப் போனால்,
    பதறாமற் குத்துவமோ? பயன்ம றந்து
வேர்க்கின்ற நிலைவிடுப்போம்; வியனி லத்தை
    விளக்கிடுமோர் செயலுக்காய்ப் பிரிந்தும் வாழ்வோம்!


                                                   †

 

அவருக்கே இயேசென்று பேர்!


   (அவளுக்கும் தமிழென்று பேர் என்ற மெட்டில் எழுதியது)


அவருக்கே இயேசென்று பேர் –இங்கே
அவரினும் சிறந்த இறையில்லை தேர்!
அவர்முன்பு தூசென்று சேர்! –உன்னை
அவர்க்களி! அதன்பின் மாசில்லை பார்!

மரியாளின் மகனானது ஏன்? –வானின்
மகத்துவம் விட்டவர் பிறந்ததும் ஏன்?
தெரியாமல் இருப்பதும் ஏன்? –உன்னுள்
தெளிவின்றி வேறு,இறை தேடுதன் வீண்!    (அவருக்கே..)

தாவீதின் வம்சத்தைப் பார்! -நம்மைத்
தாங்கிட அதில்வந்த இரட்சகர் ஆர்?
மாவீடும் உனக்களிப் பார்! –என்றும்
மரணமில் லா,ஒரு வாழ்வளிப் பார்!

யூதரின் சிங்கமிங் கார்? –அந்த
யூசுப்பின் பிள்ளையாய்ப் பிறந்தவர் ஆர்?
வேதரில் வேதரிங் கார்? –மனிதர்
வினைவிட் டெழ,என உயிர்விட்ட தார்?      (அவருக்கே)

மனிதரில் ஒளிகாட்டினார் – அவர்
மனம்மாறிப் பரமேர வழிகாட்டினார்!
கனிதர மரமேறினார்! –சிலுவை
காய்த்தது, கனியதில் வரக்காட்டினார்! (அவருக்கே)

தினமிவர் பதம்பணிவாய்! –பகைத்
திறமழிப் பாய்மனந் தெளிவுறுவாய்!
மனதினில் அமைதிகொள் வாய்! –உனை
மறக்கமாட் டாரைநீ கண்டுணர்வாய்!
                                          †

குறிந்தொகையில் பெருந்தகை..!

நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்ததே!
நீரினும் ஆழமாய் நிலைத்ததே! சாரல்
கருங்கோல்ச் சிலுவை மரித்தப்
பெருங்குணத் தேசு பெருமான் அன்பே!

நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே!
சாமம் வந்துகண் சாய்த்திடும் போதும்
தீமைகள் ஏற்றுச் சிலுவையைக்
காமுற் றணைந்த காதலர் நினைப்பே!


கண்டிலம் யாமே! கேட்டிலம் முன்பே!
ஒன்று தெளிய உரைக்கப் போமே:
விண்ணர சானவர் வெறுந்தரை யுற்றுப்
பொன்னுடல் கடாஅப் பெறீஇ
மன்பதை உய்ய மரித்ததும் மெய்யே!


நல்லோன் வீடு நமக்கும் கிட்டுமோ?
இல்லையோ? என்ற ஏக்கம் தவிர்நீ!
கன்மலைச் சிலுவை நாயகன் முன்னரே
பல்வகைத் துன்பம் பட்டதும்
நல்லோர்க் கன்றி நம்போன் றோர்க்குமே!

                                                    †


இயேசுவின் தாகம்..!

பஞ்சமும் நோயும் பாரினில் ஏனோ?
பகைமையும் போரும் பரமனுக் கழகோ?
தஞ்சமென் றடைந்தோர் கைவிடுத் தாயோ?
தந்தைபோல் நீயும் தயவிழந் தாயோ?
அஞ்சலென் றெழவே அகம்,மறுத் தாயோ?
அய்யகோ! உன்னுள் அறம்,ஒழித் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை விட்டிடப் போமோ?
வேறுனக் கென்னே தாகமும் உண்டோ?

என்றுதான் தணியுமோ இயேசுவின் தாகம்!
என்றுதான் தணியுமோ இக,சுக மோகம்!
என்றெம தாசையின் விலங்குடை படுமோ?
என்றெம திச்சைகள் தீர்ந்துபொய் யாமோ?
அன்றொரு புத்துலகு ஆகவந் தோனே!
அமைதியின் வாழ்வை ஆதரிப் பவனே!
வென்றுயாம் உய்வதும் உன்னருள் அன்றோ!
வேதனை இன்னும் தொடர்வதும் நன்றோ?

                                                †


நன்னீர்க் கிணறிது ..!


நம்ம கிணறிது நன்னீர்க் கிணறிது!
நசரேயன் கிணறிது! நம்பிக்கைக் கிணறிது!
ஊற்றாய்ச் சுரப்பது! ஊருள் நிலைத்தது!
வேற்றார் வாய்க்கும் விலக்காது இனிப்பது!
செம்மைக் கிணறிது! சேர்க்கும் கிணறிது!
உம்மைக் கர்த்தரிடம் உயர்த்தும் கிணறிது!
தம்முள் அழுக்கிலாத் தண்மைக் கிணறிது!
தவித்து வருவோன் தாகம் தணிப்பது!
உம்முள் அழுக்கை ஒழிக்கும் கிணறிது!
ஒண்டும் எவர்க்கும் உயிர்தரும் கிணறிது!
உண்டிக் கிணறிது! ஒண்டிக் கிணறிது!
ஒன்றிச் சுவைத்திடு! உயர்ந்து களித்திடு!
நன்றி உணர்ந்துஎழு! நால்வர்க்கு உரைத்திடு!
வென்றி சிறந்திடு! வேதனை விட்டிரு!
                                             







(Oct. ’09) தள்ளப்படுபவர் நாமிலை..!


மெள்ளத் தமிழினிச் சாகவோ?
    மேல்நிலை பெறவழி யாகுமே!
உள்ளத் தினில்பயம் நீக்கிடு!
    ஊமைக் கனவுகள் போக்கிடு!
தெள்ளத் தெளியநற் சொற்களில்
   தேனெனுங் கவிதைகள் பாடிடு!
உள்ளக் கவலைகள் ஒட்டிடு!
   ஓடி வருகுதோர் கூட்டமே!


மெள்ளக் கிறித்துவ இலக்கியம்
    மிகவும் பலரால் படித்துளம்
கொள்ளப் போகிற நாட்களும்
    கூடி விரைவினில் வந்திடும்!
துள்ளச் செய்திடும் கவிதைகள்,
   துடித்தே எழவரும் உரைநடை,
அள்ளிக் கொண்டுடன் போகவே
   ஆவல் மிகுபலர் வருகிறார்!

எள்ளப் படுபவர் நாமிலை!
    எழுதப் படுபவர் நாமலோ!
தள்ளப் படுபவர் நாமிலை!
   தழுவப் படுபவர் நாமலோ!
கிள்ளப் படுபவர் நாமெனின்
   கிளர்ந்தே எழுபவர் நாமலோ!
வெள்ளப் பெருக்கென வாருமே!
   வேதன் துணைநமக் குண்டுமே!

                                    †






(மார்ச்சு 67) விடைதந்தேன்..!


தம்பிக்கன்று ஓடியவன் தான்விரும்பும் பெண்மணக்கத்
தும்பிக்கை காட்டித் துணைபுரிந்து –நம்பிக்கைப்
பாதை கொடுத்தோனே பாடிடுவேன் வா!எனது
காதல் விடைக்கும்நீ காப்பு!

விடைதரு கின்றேன் விடைதரு கின்றேன்!
மடமயி லேஎன் மனமகிழ் கொடையே!
அருகினில் நெருங்கா திருவரும் நாளும்
மருவிய அன்பை, மவுனத் துடனே
விளித்திட மறுத்தும், ஒளித்திட மற்ந்தும்
கழித்தோம்! உதவிக் கரங்கள் இழந்தோம்!
பொருந்தும் பழிவர இருந்தோம் அதனால்
விடைதரு கின்றேன்! விடைதரு கின்றேன்!

இடைவரை பின்னிய சடையசைந் தசைந்து
‘நடைதவிர்’ ‘துன்பப் படைதவிர்’ என்ற
உரைதெரி யான்போற் தெருவழி தொடர்ந்தேன்!
கடைவிழிப் பார்வையில் தொடைமிகு கவிதைகள்
பலவாய் எழுதி அலமரல் தவிர்த்தேன்!
அகமகிழ் வுடனே பகர்விடை கொடுப்பேன்!

எதிர்வரும் நாட்களில் எதிர்வர் வோமேல்
புதிராய் நிகழ்ந்து விதியார் கையில்
சதிராய் உழன்ற இதுநால் நினைவைப்
பறித்தொரு நெஞ்சப் படுகுழிப் புதைத்து,அதை
வெறித்தொரு பார்வையில் விளக்கா தகல்வோம்!

காதல் நினைவுகள் மோதல் தவிர்த்துப்
பாதை திரிந்தோம்! போதை தவிர்ப்போம்!
நாடி குறைந்தும், நாட்கெடு வந்தும்
ஓடி இளைத்தே ஓயும் மூச்சுடன்
உண்மையும் சீலமும் அண்மையில் நின்றழக்
கண்களைச் சொருகுமென் காதலும்
நாட்டம் இருக்குமேல் கூட்டதற் குயிரே!

                                             †

விடைபெறும் காதல்..!** (06/66 Love’s Farewell ..by Michael drayton)



Since there is no help, come let us kiss and part,-
Nay, I have done you, get no more of me;
And Iam glad, yea glad, with all mu heart,
That, thus so cleanly, I mayself can free!
Shake hands for ever, cancel all our vows;
And when we meet at any time again
Be it not seen, in either of our brows,
That, we one jot of former love retain..

ஏதொரு மாந்தரும் இணைந்துநீ என்னுடன்
     இருப்பதற் குதவினார் இல்லையால்..
தீ, தருங் காதலி! திரும்பிடா இவ்விடை
    தெரிந்துதான் தருகிறேன் கொள்கிலாய்!
ஏதுநீ பெற்றனை? எதையுனக் காற்றினேன்?
    எதையும்நான் இனியுனக் காற்றுவேன்?
பேதயேன் இவ்விடை புகலுமுன் நெஞ்சினுள்
    பெருக்கிடும் உணர்வினைப் புகலவோ?

வந்துநில் காதலை மறைத்துநில்! கண்ணினீர்

    வழித்தெறிந் துதறிநீ வல்லையே!
சிந்திநில் அஃதொடும் சிதறிநில் உன்னுளெம்
    சிறப்புகள் உறுதிகள் யாவுமே!
முந்திநில் லாதெனுள் முயங்கிநில் காதலை
    முறித்ததன் சிறுகுறிப் பேதுமே
உந்திநில் உன்னுளத் தொறுத்துநில் ஊர்ப்புறத்
    தொருவழி இருவரும் காணுமேல்!

Now at the last gasp of love’s latest breath
When his pulse fails, passion speechless lies,
When faith is kneeling by his bed of death,
And innocence is closing up his eyes,
-Now If thou would’st , when all have given him up,
From death to life, thou might’st him yet decover.!

காதலும் தானதன் கடைசியாம் மூச்சினைக்
    கருதிவாய் திறந்தது வாயிடும்!
வேதனை யாம்மன எழுச்சியும் பேச்சறும்
    விரைந்துடன் அடங்கிடும் நாடியும்!
சாதனை நோக்கிய சதுரநம் பிக்கையும்
    சரணெனும் அவன்கடைப் பயினில்!
தீதினை எண்ணிலன் திறனுடைத் தான்குணம்
    திருவிழி அழவென முடுமே!
ஆக,இவ் வாறெலாம் அவரவர் கைவிட
     அறிந்திலள் எனமனஞ் சாற்றியோ?
போக,இப் பாவி,இப் புவிமறந் தேகியப்
    புகழுல குக்கெனப் போற்றியோ?
வேகமே எவ்வொரு வினையும்நீ செய்திலாய்!
    விதிவசம் எனநினைத் தாற்றியோ?
ஆகுமேல்! வந்துநீ அனைவருங் கைவிடும்
    அவனுயிர் திருப்பிடல் தேற்றியே
                                               †