Monday, October 24, 2011

(மார்ச்சு 67) விடைதந்தேன்..!


தம்பிக்கன்று ஓடியவன் தான்விரும்பும் பெண்மணக்கத்
தும்பிக்கை காட்டித் துணைபுரிந்து –நம்பிக்கைப்
பாதை கொடுத்தோனே பாடிடுவேன் வா!எனது
காதல் விடைக்கும்நீ காப்பு!

விடைதரு கின்றேன் விடைதரு கின்றேன்!
மடமயி லேஎன் மனமகிழ் கொடையே!
அருகினில் நெருங்கா திருவரும் நாளும்
மருவிய அன்பை, மவுனத் துடனே
விளித்திட மறுத்தும், ஒளித்திட மற்ந்தும்
கழித்தோம்! உதவிக் கரங்கள் இழந்தோம்!
பொருந்தும் பழிவர இருந்தோம் அதனால்
விடைதரு கின்றேன்! விடைதரு கின்றேன்!

இடைவரை பின்னிய சடையசைந் தசைந்து
‘நடைதவிர்’ ‘துன்பப் படைதவிர்’ என்ற
உரைதெரி யான்போற் தெருவழி தொடர்ந்தேன்!
கடைவிழிப் பார்வையில் தொடைமிகு கவிதைகள்
பலவாய் எழுதி அலமரல் தவிர்த்தேன்!
அகமகிழ் வுடனே பகர்விடை கொடுப்பேன்!

எதிர்வரும் நாட்களில் எதிர்வர் வோமேல்
புதிராய் நிகழ்ந்து விதியார் கையில்
சதிராய் உழன்ற இதுநால் நினைவைப்
பறித்தொரு நெஞ்சப் படுகுழிப் புதைத்து,அதை
வெறித்தொரு பார்வையில் விளக்கா தகல்வோம்!

காதல் நினைவுகள் மோதல் தவிர்த்துப்
பாதை திரிந்தோம்! போதை தவிர்ப்போம்!
நாடி குறைந்தும், நாட்கெடு வந்தும்
ஓடி இளைத்தே ஓயும் மூச்சுடன்
உண்மையும் சீலமும் அண்மையில் நின்றழக்
கண்களைச் சொருகுமென் காதலும்
நாட்டம் இருக்குமேல் கூட்டதற் குயிரே!

                                             †

No comments:

Post a Comment