Wednesday, November 23, 2011

இதயம் ஒரு கடிகாரம்..!


 [ மார்ச்சு.1967  ]     

காலத்தை அளப்பதற்கே கருவி வேண்டிக்
   கதிரவனின் பெயர்ச்சிதனைக் கண்ட மக்கள்
வாலொளிதன் தோற்றமுடன் மறைவும் சேர்த்து
   வாய்ப்பதனை நாளென்று வகுத்தார்; அந்த
மேலொளியின் பெயர்ச்சியதோ போலித் தோற்றம்!
   மேதினி,தன் அச்சினிலேசுழலத் தோன்றும்!
ஞாலமெலாம் ஒப்பிடினும், இந்தக் காலம்
    ‘நாடி’மணி நின்றோர்க்கோ இறந்த காலம்!

ஒவ்வொருவர் நெஞ்சுள்ளும் ஓடும்! ஆனால்
   உணர்ந்தும்,ஒலி கேட்பதிலை, உடையோர் காதும்!
எவ்வொருவர் முயற்சிக்கும் இதனைப் போன்றே
   இன்னொன்றைப் படைப்பதெனல் இயலா தாகும்!
அவ்வவரே முயன்றிடினும் அடங்காது ஆனால்
   அடங்கியபின் ஆயிரம்தான் செய்தும் ஒடா(து)!
இவ்வரிய கடிகாரம் இதயம் ஒன்றே!
   இதுநிற்கக் காலமவர்க்கு இறக்கும் தானே!

                                      < 0 >

No comments:

Post a Comment