Tuesday, November 22, 2011

மன்றம்..!

மன்றம் என்பது நன்றாய்ந் திடுமிடம்!
ஓதும் பொருளிற் பேத மிருப்பினும்
வாதிற் கதனை ஏதாக் கொளலின்
தீதிற் குதவும் சாத கம்,என
எண்ணார் குழுமி, இயற்றும் பொருள்சேர்
நண்ணற் கினிய நடைபயில் மொழிகொடு,
பண்ணும் குரலும், பாடல் ஒழுக்கும்,
பரதமும், அபிநயப் பண்பும் குணனும்
உரைநடை வளமும், உளநூல் முறையும்,
மறையும், பொருளும், மத, உயிர் வாழ்க்கை,
நெறிமுறை தானும் நெடுவிண் தொட்ட
மான அறிவின் வான இயலும்,
தத்துவ சாரமும் வித்தக ராம்நிலப்
புத்திரர் வாழ்வும் பூமி இயலும்
வரலா றென்ற வகைதொகை நலனும்
திறனாய் வுடனே தெரிந்து சுவைத்து,
தேவை நினைத்து நோவை யகற்றி
அலகில் அறிவின் அகலமும் ஆழமும்
உலவிக் காட்டி உவப்புடன் கூட்டித்
தவப்பய னாம்,உயிர் அவமே பொழுதை
அழிக்காது உயர ஒளியைக் காட்டிப்
பதறாப் பண்பும், பயன்சால் உழைப்பும்
கூடிட நாட்டிற் சோடைகள் நீக்கும்
எண்ணம் உளத்தில் எடுக்கும்
திண்ணியோர் கூட்டில் திறன்விளை களமே!

                                    < 0 >

No comments:

Post a Comment