Tuesday, November 22, 2011

தொல்லைகள் மறப்போம்..!

அகிலம் முழுதும் ஒன்றாய் வாழ
    ஆவன செய்வோமே!  - அதற்காம்
    ஆவணம் செய்வோமே!  -நல்
முகிலும் வானும் போலே இணையும்
     முயற்சிகள் செய்வோமே!  - நமது
     முயற்சியில் உய்வோமே!

பகையும் வறுமைப் பிணியும் தீரப்
     பணிகள் எடுப்போமே!   -இன்னும்
     பணிகள் கொடுப்போமே!  -நல்ல
நகையும் நட்பும் அன்பும் நெஞ்சில்
      நட்டதை வளர்ப்போமே!   -நிலையாய்
      நட்டதில் வளர்வோமே!

சொல்லும் செயலும் சிந்தனை அழகும்
     சோம்பிடப் பண்ணோமே!  -நாமதை
     ஓம்பிடக் கண்ணாமே!  -தருமம்
வெல்லும் வெல்லும் வெல்லும் என்பது
     விளங்கிடும் பண்ணாமே!  -ஞாலம்
     விளங்கிடும் ஒண்ணாமே!

கல்லும் முள்ளும் கிடக்கும் நிலத்தில்
     கழனிகள் காண்போமே!  -எதிலும்
     விழலினிக் காணோமே!
புல்லும் பூண்டும் பாரதப் புகழைப்
     பேசிடக் காண்போமே!  -இனிப்
     பேசிடக் காண்போமே!

நல்லோர் வாயில் நல்லன கேட்டு
     நன்மைகள் பெறுவோமே!  -பலவாம்
     நன்மைகள் பெறுவோமே!  -ஒன்றாய்ப்
பல்லோர் கூடிப் பகுத்துணும் நிலையே
     பண்பெனத் தருவோமே!  -உலகில்
     பண்பெனத் தருவோமே!   

எல்லா நாட்டின் மக்களும் இங்கே
     எம்முடன் பிறந்தோரே! -இங்கே
     எம்முடன் பிறந்தோரே - நம்
 எல்லாக் கைகளும் சேர்ந்தே செயல்பட
      எல்லைக டந்தோமே! - இன்ப
      எல்லைக டப்போமே!

                              < 0 >

No comments:

Post a Comment