Thursday, November 24, 2011

இளந்தலை வங்கியே! கிளர்ந்தெழு…!




செய்வன திருந்தச் செய்யும், சிந்தனை உளத்து வேண்டும்;
மெய்வருந் திடஉ ழைக்கும் மேன்மைநீ ஏற்க வேண்டும்!
பொய்வரும் போது கண்டு, புனைந்துரை களைய வேண்டும்!
கைவரும் செயல்கள் தேர்ந்து கடிவினை முடிக்க வேண்டும்!

அய்யநின் அடிக்கண் ஏவல், அறிந்துசெய் பவரி டத்தும்
பையவே பேச வேண்டும்; பண்புடன் உறுதி சேர்த்தே
ஐயமில் குறிப்புக் காட்டி, அவருடை நன்மை கேட்டுச்
செய்வதில் தயக்க மில்லாச் செயலினில் ஓங்க வேண்டும்!

தானையர் போல்,இல் லாத தலைவனென்று உன்னைத் தானே
ஏனையோர் கருதும் வண்ணம் ஏற்புடன் நடக்க வேண்டும்!
வானவர் தொழிலைக் கூட்டி, வந்தவர் என்றெ எண்ணி
மானமும் பரிவும் காட்டி மதிப்புடன் நடத்த வேண்டும்.

அண்டினோர் இடத்தே அன்றி, அறிவகை யில்லார், வங்கி
கண்டிலார் இடத்தும் சென்று கனிவுடன் சேமிக் கின்ற
பண்டமும் விரித்துக் கூறிப் பணமவர் கொடுக்கப் பெற்றுக்
கொண்டு,அவர் வைப்புச் சேர்க்கும் கொள்கையன் ஆதல் வேண்டும்!

உள்ளிடை ஊர்க்கண் கேட்டும், உரைமொழி தெளியத் தேர்ந்தும்,
தெள்ளிய வகுப்பால் கேட்ட தேவையை அளந்தும், பின்னர்க்
கொள்வன ஈடாய்ப் பெற்றுக் கொடுப்பன அளவில் நல்கும்
உள்ளமும் உவக்கக் காட்டி உறுதொழில் வளர்க்க வேண்டும்!

கிளர்ந்தெழு! சோர்வறு! கிளைநடத் திடு!உடன்
வளர்ந்தெழு! வாமனன் மாநிலம் அளந்தவாறு!
இளந்தலை வங்கிநாம்! இனிவரும் நாட்களில்
ஒளிர்ந்திட! உயர்ந்திட! உடன்வரும் அவனருள்!
                       < May 1983 >

No comments:

Post a Comment