Tuesday, January 24, 2012

எவர்க்குக் கவிதை எழுதுகிறேன்!



தமிழன் என்ற நினைப்புடையோர்
   தமிழின் உயர்வில் முனைப்புடையோர்
அமிழான் தமிழன் எனச்சொல்வோர்
   அழகிய தமிழில் மனமிழப்போர்
கமழும் தமிழின் கனமறிவோர்
   கருத்தில் அதனைத் தினமுடையோர்
இமிழ்நீர் உலகில் மிகப்பெரியோர்!
   இவர்க்கே கவிதை எழுதுகிறேன்!

அச்சம் தன்னை விலக்கிவிடு!
   அஞ்சாமை நெஞ்சில் விதைத்துவிடு !
துச்சம் எனத்துயர் ஒதுக்கிவிடு!
   துணிவைச் செயலில் தூக்கியெடு!
கொச்சைப் பேச்சை நீக்கிவிடு!
   குழந்தை மனத்தை ஊக்கிவிடு!
பிச்சை வாழ்க்கை வெறுத்துவிடு!
   பின்னும் அவர்க்கே உதவிவிடு!

துணிவை வாழ்வில் துணையாக்கு!
   துன்பம் தடுக்கும் அணையாக்கு!
துணிவைச் செயல்களின் உரமாக்கு!
   தொடரும் பயன்களைப் பிறர்க்காக்கு!

அன்போ தென்றல் தாலாட்டு!
    அடிக்கும் புயல்முன் துணிவேற்று!
தென்போ டிருக்க விளையாட்டு!
  திறமை விளங்க துணிவாட்டு!

No comments:

Post a Comment