சுற்றுப் புறத்தினை முற்றும் கெடுத்தது
பற்றிச் சினந்திடல் மாணடி! -மேகம்
சுற்றி முகத்திலே நெற்றி மறைத்துநீ
ஒற்றி நடப்பது வீணடி! -நிலவே
முற்றிக் குறைவது நாணடி!
கல்வி நிறைந்தவர் வெல்லும் மொழியினர்
சொல்ல மறுப்பதுன் சோகமோ? -நெஞ்சம்
கல்லென் றிருத்திநீ புல்லென் றுனக்குளே
மெல்லக் கறுவுதல் ஆகுமோ? -நிலவே
சில்லென் றிருப்பதும் போகுமோ?
நல்ல நினைப்பினர் வெல்லும் முனைப்பினர்
மெல்ல இணைந்தனர் பாரடி -தங்கள்
வெல்லத் தமிழினில் சொல்லும் வகையினில்
ஒல்கும் பகையிது தேரடி! நிலவே!
அல்கும் முகக்குறை தீரடி!
(வேறு)
எழுத்தில் உயர்ந்த வள்ளுவனை
எண்ணம் சிறந்த பலர்கூடி
வழுத்திப் பேசிக் கேட்போர்க்கு
வழிகள் காட்ட வந்தனரே!
அழுத்திப் பேசி அவர்சொன்ன
அத்தனை பேச்சும் மணியன்றோ!
தழைத்து வாழ்க இவர்முயற்சி!
தரணி பெறட்டும் பலயெழுச்சி!
(வேறு)
தென்பொதிகை இளங்காற்றைத் தேன்வழியும் மதிக்கீற்றைத்
தெம்மாங்கின் பொலிவேற்றுத் தெறித்துவிழும் அன்பூற்றை,
எம்மோர்க்குத் தமிழூட்டை, எதிர்ப்புகளின் வாய்ப்பூட்டை,
செம்மாந்த திறங்கண்டு சிறப்பூட்டும் கற்கண்டை
அம்மானை! இளங்கோவை! அடிபணிந்தே ஏத்துவனே!
< + >
No comments:
Post a Comment