01. அந்தி சாயும் நேரம் -எந்தன்
ஆவி போகும் தூரம்!
வந்து நின்று நீயும் -காதல்
வார்த்தை சொல்லப் போமோ?
02. கூடி வாழ்ந்த நாட்கள்; -அன்பைக்
கொடுத்து மகிழ்ந்த நாட்கள்;
வாடி நின்ற நாட்கள் -தேவை
வளர்ந்து நின்ற நாட்கள்
ஓடிச் சென்ற போதும் -அந்நாள்
உணர்வி ழந்த நாட்கள்;
தேடி வந்து நீயும் -இன்றுத்
திரும்பக் கூட்டு வாயோ?
03. இளமை தந்த மோகம் -புதிய
இணக்கம் தந்த வேகம்
கழியும் போது கூடக் -கண்கள்
காண மறுத்த நாட்கள்
அழகுப் பிள்ளை ராகம் -பின்னர்
அதுந டந்த வேகம்
பழகிக் கண்ட இன்பம் -மீண்டும்
படித்துக் காட்டு வாயோ?
04. பள்ளி சென்ற பிள்ளை -வந்து
படித்த வற்றைச் சொல்லி
அள்ளி அள்ளித் தந்த -கேள்வி
அணைக டந்தும் ஓட
எள்ளி, வியர்த்துத் தள்ளி -மீண்டும்
இரவில் நமக்குள் பேசித்
துள்ளி மகிழ்ந்த நாட்கள் -இன்னும்
தொடரச் சொல்லு வாயோ?
05. துள்ளி வளர்ந்த பிள்ளை -தன்னுள்
துடுக்கும் அடங்கி நின்றாள்;
தள்ளி ஒதுங்கிச் செல்வாள்; -வானைத்
தரையைப் பார்த்துப் பாடி
உள்ளுக் குள்ளே மகிழ -நாமும்
ஒளிந்து மறைந்து கண்டோம்!
புள்ளி வைத்த நிலையில் -இன்று
புறத்தில் கிடக்கின் றேனே!
அந்தி சாயும் நேரம் -எந்தன்
ஆவி போகும் தூரம்!
வந்து நின்று நீயும் -காதல்
வார்த்தை சொல்லப் போமோ?
†
No comments:
Post a Comment