Sunday, October 30, 2011

’65. புத்தாண்டே வருக..!


புத்தாண்டே புத்தாண்டே வருக! -இன்பப்
பூமணமும் அமைதியுமே தருக!
கர்த்தாவின் ஏவலை அன்புருகத் -தந்து
கடமைதனை யாம் செய்ய வருக!


போலி,ஒளி கொண்டமது மறையப் =பூமி
போர்த்தியுள்ள இருட்போர்வை கிழிய,
நீலவொளி வானமதில் தெரிய -நேர்மை
நெஞ்செனவே சூரியனும் பொலிய..                            [புத்தாண்டே]


புன்மதியார் கூட்டம்போல் இருளில் -கூடிப்
பொய்,ஒளிசெய் விண்மீன்கள் நொடியில்
தன்னிலையும் கெட்டோடும் படியே -தோன்றும்
தன்னிகரில் ஆதவனின் வடிவில்..                                 [புத்தாண்டே]


சாதிமத பேதங்கள் கொண்டு -தம்முள்
சண்ண்டையிடும் மாக்களைநீ கண்டு
‘பேதமிலா வாழ்க்கைநெறி உண்டு,நிறை
பேரொளிபோல் நிலை’ எனும் சொற் கொண்டு       [புத்தாண்டே]


ஒருகோடி பேதங்கள் நீக்கி -உலகில்
உளகோடி மக்களைஒன் றாக்கி,
வருங்கோடி இன்பங்கள் கூட்டி -வறுமை
வலிந்தோடும் நிலைதன்னைக் காட்டி..                       [புத்தாண்டே]


வீட்டுக்கே வாழுநிலை வீழ -வயிற்றுப்
பாட்டுக்கே படிப்பதெனல் மாள
நாட்டுக்கே நாடுகை கோர்த்துப் -பல
நன்மையுடன் வாழக்கண் பார்த்து..                                [புத்தாண்டே]


‘உள்வீட்டுள் வேற்றுமையை நீக்கிப் -பின்
உள்நாட்டுள் ஒற்றுமையுண் டாக்கிப்
பன்னாட்டுள் கூட்டுறவைத் தேக்கி -நல்ல
பல,ஆண்டு நீ வாழ்’என் றூக்கிப்..                                    [புத்தாண்டே]


                                              >>> 0 <<

No comments:

Post a Comment