Sunday, October 30, 2011

பொங்கல் !

திங்கள்தன் முகமும் நாணித்
     தென்பட மறுத்து, மேலைக்
கங்குலுள் புகுந்து கொள்ளக்
     கறவைகள் கறங்கப் புட்கள்
அங்குமிங் காக ஓடி
    ஆர்ப்பர வங்கள் செய்யத்
தங்களில் பொங்கல் காணத்
     தடபுடல் செய்வர் பெண்டிர்!                                                        01

அஞ்ஞான இருளை நீக்கி
     அவனிமேல் தொன்று கின்ற
மெஞ்ஞான உருவே போன்று,
     மெல்லோலி புட்கள் வேதம்
செய்ஞான உருவோர் போலச்
     செய்திடும் அந்த வேளைத்
தைஞ்ஞான மகளோடு இந்தத்
     தரணிமேல் கதிரும் தோன்றும்!                                                02

மீனன அரிசி வெந்து
    மேல்வரு கின்ற தான
பால்நிற நுறைபோல் வந்து
    பரிதியும் தொன்றி நிற்பான்!
வானிடை ஓடி யாடி
    வருத்தமில் லாது புட்கள்
தானியப் பொங்கல் இட்ட
    தன்மைபோல் உள்ள தம்மா!                                                      03


அப்பொழுது


நன்கலத் தரிசி பொங்க,
     நகை,முகத் தட்டில் பொங்க,
மென்னொளி வானில் பொங்க,
     மேதினி இன்பம் பொங்க,
இன்மொழி நெஞ்சுள் பொங்க,
     இன்தமிழ் காதில் பொங்க
நன்மைகள் மலிந்து பொங்க
      நாட்டுளே பொங்கும் பொங்கல்!                                             04


அந்நியர் படைகள் பொங்க
     ஆத்திரம் நெஞ்சுள் பொங்கத்
தன்னுளே பொங்கு வார்போல்
     தணலதும் அடுப்பில் பொங்க
மின்னிடும் பானக் குள்ளே
     மேல்வரும் அரிசி பொங்கும்!
அந்நிலை அடங்கத் தானே
     அமைதியின் சுவையும் பொங்கும்!                                        05


இன்பமும் அறனும் பொங்க
     ஏதுவாம் கல்வி பொங்க
வன்பருள் அறிவு பொங்க,
     வரிப்பணம் போல இன்றி
அன்பருள் அருளும் பொங்க
     அமைதியும் வளனும் பொங்க
முன்பொரு நாளும் காணா
     முறையினில் பொங்கும் பொங்கல்!                                     06

                           [வேறு]


செந்நெல் வளம்பொங்கச் செல்வத் திரள்பொங்கக்
கன்னல் தமிழ்போல் களிபொங்க -நன்மை
எழில்பொங்க, இன்ப இசைபொங்க எங்கும்
தொழில்பொங்கப் பொங்கலே பொங்கு!                                  07


ஏறிப் பருத்தும் எழிலார்ந்தும் மேல்வந்து
சீறும் நுரையடங்கச் செய்வளைபோல் -ஊரில்
விலையேற்றம் போக்கி விளைவேற்றம் கூட்டி
நிலையேற்றப் பொங்கலே பொங்கு!                                        08


‘எம்பால் எமர்பால் இடரறுக’ என்பதுபோல்
என்பால் எழுகின்ற எண்ணங்கள் -உன்பால்
வழிவதுபோல் நீங்கி வளரட்டும் பாரில்
பழியேதும் இல்லாத பண்பு!.                                                         09


                                                †

No comments:

Post a Comment