Thursday, October 27, 2011

1965 – அகத்துறையில்.. ..!

தோழி வியப்பு:


       பேழ்வாய்ப் புலியும் பெருவலிச் சிம்மமும்
       தாழ்வின்றிச் செய்யும் தடையெலாம் –ஊழ்வந்தே
       ஊட்டிடத் தாண்டியோ உன்வசம் சேர்ந்தனன்
       தீட்டிய வேற்கரத் தான்!

       தலைவன்/தலைவி ஐயம் தெளிதல்:
       ‘வானின்று ஒளிசெய்யும் வெய்யோனோ? வன்தொண்டர்
       தானின் புறச்செய்யும் தண்முருகோ?’ – ‘மானினமோ?
       வெய்யயிக் கானில் விளங்கணங் காகுமோ?
       ஐயமில், மானுடமே ஆம்!

பிரிவுடற்றல்:


      ‘மஞ்சம் மலரெனினும் மன்னவரிங் கில்லாது
      நெஞ்சம் துயின்றிலதே! நற்றோழி! –பஞ்சும்
       படர்காற்றுத் தீயின்வாய்ப் பட்டாற்போ லந்தோ!
      அடர்காமத் தீயின்வாய் யான்!’


     ‘பூம்பழனத் தாமரையோ? தாமரைமேல் அல்லியோ?
     தேன்பிழியும் சந்திரனோ? தேர்கிலனே! –கூம்புபிறை
     நெற்றித் தலமுடையாள்! நேர்வந்து எதிர்நிற்கச்
     சுற்றிக் கிறுகிறுத்த நான்’!


வரைவு வேட்டல்:


     ‘உந்தும் மனத்தாசை ஓரானோ? ஊரறியச்
     சொந்தம் எனக்கையும் சேரானோ? –சாந்ததமும்
     கள்ளப் புணர்ச்சியிது கைவருமோ? ஊரறியின்
     எள்ளிப் பழிசொல்லு மே!’

பொருள்வயின் பிரிவு: [தோழி கூற்று]


     ‘வண்ணம் திரிந்ததுவே! வார்  குழலும் வாடியவே!
     எண்ணம் உறைந்தனளே! ஏங்கினளே! –கண்ணிங்கிக்
     காதல் பொருள்வயமாய்க் காதலர்நீர் தாம்பிரிந்து
     போதல் தனையுரைத்த போது!’


வரவு நோக்கல்:


     பொருளீட்ட வென்று புகன்றவர் கார்வந்து
     இருளீட்டு முன்னிங்கு இருக்க –அருள்கூட்டிப்
     போதித்த வார்த்தைகள் பொய்யாமோ? வாரா,இப்
     போதிற்கு நானோ புகல்!


பாங்கனுக்கு/ தேரோட்டிக்கு உரைத்தது:


     பூட்டிய தேரிதனைப் பார்க்கினும் பன்மடங்கு
     ஊட்டமாய் என்னுள்ளம் ஓடுமே! நாட்டிய
     வேல்விழி சோர்ந்தாங்கு வெந்நீர்க் குளமிடும்
     மால்விழி தன்னாள் மருங்கு!.

மணம்:


     சுற்றம் இசைந்துவரச் சோதிடர்செய் நன்னாளில்
     உற்றுப் பலர்கூடி ஒன்றாகப் – ‘பெற்றிடுக
     வாழ்பதி நாறு வகைநலனும்’ என்னவே
     யாழ்முரசு ஆர்க்கும் மணம்!
                                               †


No comments:

Post a Comment