நேசக் கரங்கள் நீட்டியவர்
நிற்கும் சிலுவை தனைநோக்கிப்
பாசக் கைகள் தமக்காணி
பரிசாய்க் கொடுத்த நினைவேந்தி
வேசக் குறிகள் விலக்கி,உளம்
வெதும்பி, வருந்தித் திருந்தி,அவர்
வாசல் நின்று குழந்தையென
வரும்நாள் எண்ணிப் பணிகின்றேன்!
பூசல் மனங்கள் மாறிடவேப்
புதிதாம் கவிகள் பாடிவரும்
ஆசைக் கவிகாள்! அனைவர்க்கும்
அன்பன் வணக்கம் செய்கின்றேன்!
வாச மலராய்க் குடும்பத்தில்
வருமாம் குழந்தை ஒவ்வொன்றும்
ஈசன் மனத்தில் எமக்காக
இருக்கும் நம்பிக் கைதானே!
அதுபோல் தோன்றி மனங்கவர
அழகு மழலை இவள்,மலருள்
மதுசேர்க் கின்ற வண்டாக
மயங்கித் தூங்கி வருகின்றாள்!
புதுமை யின்றிச் சொன்னாலும்
பொறுத்துக் கொள்வீர்! அவளழகை
மெதுவாய்ச் சொல்வேன் கேட்டிடுவீர்!
மெலிந்த குரலும் எழுப்பாதீர் ! இனித்
தங்கை அழகு..!
காற்றில் அசையும் மாந்தளிரைக்
கையால் தொட்டுப் பெறுஞ்சுகம்போல்
தோற்றம் அழகின் நின்முகத்தைத்
தொட்டுப் பெறலும் ஒருசுகமோ!
நாற்றங் காலின் நீர்மூட்டில்
நனைந்து குனிந்த நெல்முளைபோல்
தோற்றம் அழகாம் தலைமுடியின்
துவளும் அழகும் ஓரழகோ! 01
கொட்டும் இமைகள் சுருங்காமல்,
கொவ்வை இதழும் மூடாமல்
பட்டுக் கரங்கள் ஆடிடநீ
பண்ணும் அழகும் ஓரழகோ!
குட்டிக் கால்கள் மடங்கிடநீ
குதித்தே எழுந்து வருவதுபோல்
நெட்டித் துயிர்த்து நிகழ்த்துவன
நினைக்க நினைக்க ஓரழகே! 02
தாய்ப்பால் அருந்தி அதில்பெற்ற
தணியா மகிழ்வில் இமைமூடி
வாய்ப்பாம் தவங்கள் இயற்றிடுவார்
வடிவை ஒத்த அமைதியுடன்
நோய்ப்பா டில்லா உலகெண்ணி
நோற்கும் தவமோ உன்தூக்கம்?
தோய்ந்து புருவம் மேலோடித்
துலங்குங் குறிகள் எதன்தாக்கோ? 03
நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்
நிகழ்த்த வுள்ள செயல்களினைத்
தூண்டும் விதியாய்த், தொல்பொருளாய்த்
துலங்கும் இறைவன் சொல்லிடவே
வேண்டிக் கேட்கும் பாவனையோ!,
விளங்கிக் கொண்ட சொற்களினால்
மூண்ட தாமோ உன்முகத்தில்
முறுவல் நெளிவு போன்றவையே! 04
தரைமேல் பிறந்து முதற்கண்ட
தாயின் மலர்ந்த முகத்தழகோ?
வரையும் துகிலின் வசம்வந்த
வடிவம் போன்ற உருவங்கள்
நிறைந்து வந்து மனத்துள்ளே
நின்று காட்டும் மருட்கையதோ?
இறைவன் மேனி உருவழகோ?
எதற்கோ சிரிப்பாய், பயந்திடுவாய்! 05
என்ன கண்டோ இம்முறுவல்?
எதனால் இந்த நெளிவெல்லாம்!
சன்னம் போன்ற நகவிரலும்,
சண்ப கத்து மலரெழிலும்
தன்னுள் தங்க வந்தவளே!
தங்கை என்னும் தமிழுறவே!
உன்னை உயர்ந்து வாழ்கவென
உலகை எண்ணி வாழ்த்துகிறேன்! 06
†
No comments:
Post a Comment