Thursday, October 27, 2011

03/64 அம்மா ! அம்மா ..!


கனிகொண்ட விதையைப்போல் உன்னுள் என்னைக்
கனிவோடும் பஞ்சுடலால் மூடிக் காத்தாய்!
நினைவுள்ளே மாதத்தை எண்ணி எண்ணி
நிறைமேகம் கொடுமிடியுள் துளிர்த்தார் போல
இனைத்தென்று சொலவொண்ணாத் துயரில் பெற்றாய்!
எழுகதிர்முன் தாமரைபோல் இன்பங் கொண்டாய்!
சினந்தென்னைக் கடிகில்லாய்! சீரும் செய்வாய்!
சிறப்பான மகனென்றும் சொல்லிக் கொள்வாய்!

பெற்றெடுத்த குறையென்றும் எண்ண மாட்டாய்!
பேணியெனைப் பலவாறாய்ப் புகழ்ந்து கொள்வாய்!
நற்றவத்தின் மகனென்றும் சொல்லிக் கொள்வாய்!
நாட்டமெலாம் என்மேலாய்த் தூக்கம் விட்டாய்!
கற்றறிந்த புலவனுமே கருத்தைக் கூட்டிக்
காவியத்தை முடிக்குமுனர் படும்பா டெல்லாம்
உற்றவளாய் மனஞ்சலியாது எனைவ ளர்த்தாய்!
உலகில்யான் உயிர்வாழ ஓடாய்த் தேய்வாய்!

உன்னுளமும் யார்க்குவரும்! உன்போன் றோர்கள்
உள்ளதனா லன்றொஇம் மனிதர் வாழ்வும்!
தன்னுடலைப் பேணுதலைத் தானேன் விட்டாய்?
தன்னுயிரும் என்னுள்ளே ஒலிக்கக் கேட்டோ?
என்னுடலை நோய்பற்ற இருப்புங் கொள்ளாய்!
ஏதுக்கோ அறிகில்லேல் மருந்தும் உண்பாய்!
இன்னவையோ தாயேநீ எனக்காய்ச் செய்தாய்!
எங்கினியோ நான்காணல் இவைபோல் எல்லாம்!

பிறப்பாலும் துன்பத்தைத் தந்தேன்! அந்தப்
பிறப்பாலே இன்பத்தைக் கண்டாய்! எந்தன்
மறப்பாலும் மனத்தாலும் தந்தேன் துன்பம்!
மழலை,படு சுட்டியென மகிழ்ந்தாய் உன்னுள்!
சிறப்பாலும் பலவிட்டுத் தாய்மை கொண்டாய்!
சிந்திக்காப் பொறுமையிலோ நிலத்தை வென்றாய்!
இறப்பில்லாப் பெருங்குலமும் உனதே அம்மா!
இறப்பில்லாப் பெருமையெலாம் உனக்கே அம்மா!

                                                    †

No comments:

Post a Comment