Thursday, October 27, 2011

12/64 விடைதந்தேன் ஆண்டே..!

காலத்தில் ஏவலைநீ தாங்கி வந்தாய்!
கண்ணாடி போலுன்னைக் காட்டி நின்றாய்!
ஞாலத்தின் சுழற்சியிலே நடனம் செய்தாய்!
நானிலமும் வாழ்ந்திட,உன் பாடு பட்டாய்!
மூலத்தின் கட்டளையை முடித்து விட்டாய்!
முன்னோர்க்கும் பின்னோர்க்கும் தொடர்பாய் நின்றாய்!
கோலத்தை அழகுசெய்யும் மாந்தர் இன்று
கூறாத விடைதருவேன் செல்வாய் ஆண்டே!

புத்தாண்டின் வரவெண்ணிப் பாடு வார்கள்!
புதிதான வாழ்க்கைதனை நாடு வார்கள்!
மத்தாப்பின் ஒளிபோல வானில் உள்ள
மங்காத மீன்களென எங்கள் வாழ்வில்
எத்தனையோ இன்பநிலை எல்லாம் தந்தாய்!
இருளதுவும் தோற்றாத நிலையில் வந்தாய்!
சத்தான நிகழ்வுகளே எம்முள் தங்கும்!
சற்றுமுளம் வருந்தாது செல்வாய் ஆண்டே!

                                           †



No comments:

Post a Comment