Wednesday, February 1, 2012

இயற்கையுடன் கூடி இருப்போம்..!



{கும்மிடிப்பூண்டியில் ஒரு புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்க ரூ,330 கோடி அனுமதி-செய்தி}

நீர்வருமப் பாதைகளைத் தூர்வாரி,
          நிலம்பிடித்த பேதைகளை உடன்வாரிப்
பேரளவில் வீணாகும் மழைநீரைப்
          பிடிப்பதற்கு நீர்த்தேக்கம் உருவாக்கி
ஊர்பிழைக்க வழிசெய்தால் உதவிடுவீர்!
          ஒழுங்காக அதைக்காக்க முன்வருவீர்!
தேரிழுக்க வருபவர்போல் திட்டமுடன்
          தேர்நிலைக்கு வருவதற்கே உதவிடுவீர்!

சீருடன்நாம் வாழ்வதற்கு நீர்வேண்டும்;
          சீறிவரும் மழைநீர்க்கும் புகல்வேண்டும்!
தூரெடுக்கும் பணியினையே இலவசமாய்த்
          தொடங்கிடவா யாருமுமை அழைக்கிறர்கள்!
ஏரிகளைக் காப்பதற்கே எழுந்திடுவீர்!
          ஏரிகளில் வீடெடுக்க மறுத்திடுவீர்!
மாறிவருங் காலத்தை உணர்ந்திடுவீர்!
          மக்களது நலமெண்ணி மாறிடுவீர்!

                                 (வேறு)
 சாக்கடைநீர் சுத்தமாக்கப் பட்ட பின்பே
    சார்ந்துள்ள ஏரிகளில் கலக்க வேண்டும்!
ஊர்க்கடையில் இச்சுத்தம் செய்தல் வேண்டி
   ஒழுங்கான நிலையங்கள் அமை வேண்டும்!
போர்க்கொடிகொண் டேரிகளைப்  புதுக்க வேண்டும்!
   பொன்னான நீர்தேக்கிப் பொலிய வேண்டும்!
நீர்க்குறையால் அண்டைமா நிலங்கள் பக்கம்
       நின்றுகை ஏந்தாதே நிமிர வேண்டும்!

                   (வேறு)
குப்பைகொட்டும் இடமல்ல ஏரி!
          குடிவாழும் ஆதாரம் ஏரி!
கப்படிக்கும் சாக்கடையா ஏரி!
          கழிவுகளின் சேரிடமா ஏரி!
துப்புரவின் அடையாளம் ஏரி!
          தூரெடுக்க உதவுவதும் நீதி!
இப்பொழுதே இயற்கையுடன் கூடி
          இருப்பதற்குத் தொடங்கிடுவோம், நாடி!
                            <0>

No comments:

Post a Comment