Tuesday, December 6, 2011

உழைப்பவர் உயர்வு..அல்லது உழைப்பீர்! உயர்வீர்!




                வள்ளியம் எனுஞ்செ ருக்கு
    வாய்த்தவர் உழைக்கின் றோரே!
தள்ளினும் தள்ள வொண்ணா
      தகவவர் தகவே! அன்பின்
உள்ளமும் அவர்க்கே! செல்வ
      ஊற்றுமக் கைகள் தாமே!
அள்ளிநற் பூக்கள் தூவி
      அவரடி பணிவன் நானே!                                    

 சாதனைகள் எதனாலே சம்ப விக்கும்?
      சாட்சிசொல நினைப்போரே முன்னே வாரும்!
வேதனைகள் படுவதிலா? விளையாட் டாக
      வெறு[ம்]முயற்சி செய்வதிலா? விரும்பிச் செய்தோம்
ஆதலினல் என்பதிலா? அதிநூ லோர்கள்
      அறிவினிலே செயல்பட்டா? அதிட்ட தேவி
சீதனமாய்க் கொடுத்ததிலா? சிரமந் தாங்கிச்
      செய்தபெரும் உழைப்பாலே தானே யன்றோ?           

ஆண்டவர் தன்னைப் போற்ற
      ஆளிலா திருந்த நாளில்,
மாண்டதோர் ஞாலம் செய்து
      மனிதனை அதனுள் வைத்தார்!
வேண்டிய செய்து தந்து
      விளக்கினார் உழைப்பின் மாண்பை!
வேண்டுமோ விளக்க?, வித்தாய்
      விளங்குவார், உழைப்போர் சாட்சி !                     

சத்தியைப் போற்றிப் பாடும்
      சந்ததி உழைப்போர் கூட்டம்!
புத்தியைப் போற்றி நாட்டில்
      புதுமைகள் படைக்கும் கூட்டம்!
சித்தியைக் கையிற் கொண்டு
      சிறப்பவர் இவர்கள் கூட்டம்!
நத்தியே இவர்பின் செல்ல
      நமக்கினி உயர்வே கூட்டம்!                                  

                அன்பினில் கனிந்த பேர்கள்!
                    ஆண்மையில் நிறைந்த பேர்கள்!
                துன்புகண் டொதுங்கி டார்கள்!
                   தூங்கிடாக் கையி னார்கள்!
                இன்பமே கூட்டு வோர்கள்!
                   இவர்க்கிணை இல்லாப் பேர்கள்!
                முன்பு,தம் உழைப்பை வைத்து
                    மூவுல கெழுப்பும் ஆட்கள்!                                                             

               வீழ்ந்தாலும், பிறர்வீழக் காண மாட்டார்!
                  வீணருக்கும், செல்வருக்கும் அடிமை யாகார்!
               தாழ்ந்தாலும் பிறருயரத் தாங்கும் மேலர்!
                  தரமிழந்து போகாநல் லுழைப்பின் சீலர்!
               வாழ்ந்தாலும், பின்னாலும், வளமே நல்கி
                   வழிநடத்திப் போகின்ற வள்ளல், தாளர்!
                சூழ்ந்தார்முன் னாலு[ம்]முகம் சுளிக்கா அன்பர்!
                   சுற்றியுள்ள உயர்வுகளுக் கிவரே மூலர்!                                     

                 எங்கிருந்து வருமிந்த உழைப்பின் கூட்டம்?
                    எவர்கொடுப்பர் இவர்கூலி? என்போ ரேநான்
                 உங்களுக்குச் சொல்கின்றேன் ஒன்று : நேற்றை
                     உழைப்பாளி இன்றுமுத லாளி !' என்றும்
                 சங்கமிக்கும் செல்வமெலாம் உழைப்பின் முன்னே!
                    சாட்சிசொலும் சரித்திரமே! சமூகத் துள்ளே
                 உங்களுக்கும் உழைப்பொன்றே உயர்வுக் கான
                     உண்மைமிகும் அழைப்பாகும்! உழைப்பீர்! வெல்வீர்!             

No comments:

Post a Comment