Sunday, October 9, 2011

அர்த்தமுன் வாழ்க்கையில் நிறைந்திட...!

பொறுமையும் சகிப்பும் வளர்த்திடல் வேண்டும்!
      போலியாய் வாழ்தல் மறுத்திடல் வேண்டும்!
பெருமையும் சுரண்டலும் தவிர்த்திடல் வேண்டும்!
     பிறர்துயர் நினைத்துக் களைந்திடல் வேண்டும்!
உரிமையும் உழைப்பும் உனதெனல் வேண்டும்!
     உண்மையும் பொறுப்பும் உளம்வரல் வேண்டும்!
சரிநிகர் சமானம் தழைத்திடல் வேண்டும்!
     சாந்தியில் உயிர்கள் திளைத்திடல் வேண்டும்!



எதிர்ப்புகள் கண்டெதிர் கொண்டிடல் வேண்டும்!
    எளிமையும் அன்புமுன் வாழ்வெனல் வேண்டும்!
மது,புகை வழக்குகள் அழிந்திடல் வேண்டும்!
    மயக்கமும் சோர்வும் ஒழிந்திடல் வேண்டும்!
புதுப்புது வழிகளில் போய்வர வேண்டும்!
    பொய்மையை விடுத்துநீ புறப்படல் வேண்டும்!
இதைத்தினம் நினைத்துநீ எழுந்திடல் வேண்டும்!
    இனிவரும் யாவையும் வசந்தமாய் வேண்டும்!


கர்த்தரின் நினைப்புடன் எழுந்திட வேண்டும்!
       காலைகள் தந்திடும் சுகந்தினம் வேண்டும்!
கர்த்தருன் செயல்களுக்கு உதவிட வேண்டும்!
       காரியம் யாவிலும் ஜெயந்தினம் வேண்டும்!
அர்த்தமுன் வாழ்க்கையில் நிறைந்திட வேண்டும்!
       அன்பினில் தினமது வளர்ந்திட வேண்டும்!

No comments:

Post a Comment