Wednesday, October 5, 2011

பாம்பணையை விட்டெழுந்து வாரும்..!

நித்தநித்தம் இலவயங்கள் நேர்வருமோ என்றேங்கிப்
புத்துணர்ச்சி நீர்குடித்துப் புரள்எங்கள்  துயர்களையச்
சொத்துபல ஒளித்துவைத்துச் சுகமாகத் தூங்குகின்ற
பத்மனாபச் சாமிகளே! பாம்பணையை விட்டேழுமே!              01

கல்வியாம் ஞானக்  கண்ணடைக்கும் பள்ளிகளே!
கொல்விடப் போதைக் குடிதிறக்கும் குடியரசே!
நில்எனாது ஏறி நிலவிருக்கும் விலைபொருளே!
சொல்லொணாச் செல்வச் சொத்தெதற்கோ சுரர்,அரசே!        02

முத்துரத்னப் பவளநகை மூட்டைகளைப் பின்மறைத்துப்
பத்தெதுவும் அற்றவன்போல்ப்   படுத்துறக்கம் கொள்பவரே!
சொத்தழித்துச் சுரர்களுக்குச் சுடர்க்கல்வி தரவென்று
நித்தநித்தம் அலைகின்ற நிலைக்கிரங்கி உதவிடுமே!            03

அடுக்கியபல் லாயிரத்தில் அலங்கார நகைபலவும்
மடக்கியுமது அங்கணத்துள் மறைத்துறக்கம் செய்பவரே!
உடுக்கையிழந்து ஓலமிட்டே ஓங்காரம் பயில்விக்க
நடுத்தெருநா ரணனானோம் நலிவெமது தீருமையா!             04

பாத்தாயி ரங்கோடி பலலட்சம் என்றெல்லாம்
சொத்துநீர் மறைத்துள்ள  சொற்கேட்டேம் அரசியலார்
பித்தாட்டம் விடப்போமோ?  பிறகுஎங்ஙன் துயர்களைவோம்?
பத்திவிட்டுப் போவோமோ? பயங்களைய எழுமைய்யா !      05

                                                          <0> 

No comments:

Post a Comment