Friday, November 23, 2012

பேசுவேன் பேசிக்கொண்டே இருப்பேன்!

[ இது கவிஞர் திரு ரவுத்திரன் அவர்களின் 'என்செய்வீர் என்னை ' என்ற கவிதையைப் படித்த பொழுது மனதில் தோன்றியது -கருத்தாகப் பதிவும் செய்யப்பட்டது.] 



வாசத்தை அனுப்பி 
வாகை சூடும் 
வண்ண மலரே! 
உன் வண்டு நான் பேசுகிறேன்! 
உன் வண்ணத்தின் 
மெருகுநான் பேசுகிறேன்! 

உனது 
வண்ணமுகம் கிடைக்காததால்தான் 
மண்ணில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்! 

நிமிர்ந்த உன் நெஞ்சின் 
கர்வப் புடைப்பைப் 
புடவைஎன்ன, 
எந்தத் துணி போர்த்தினாலும் 
அது 
என் கண்களைக் கவர்வதைத் 
தடுக்க முடியாது! 

அதன் உயரத்திலேயே 
மயங்கிக் கிடக்கும் நான் 
உனது உருவத்தை 
-
விசுவ ரூபத்தை- 
எங்கே பார்க்கப் போகிறேன்? 

உனது தமிழ்க் கற்பைத் 
தட்டிப் பறிக்க அல்ல 
தொட்டுத் தழுவத்தான் 
ஆசை! தவறா? 

உன்னை யாரடி! 
பணியச் சொன்னது? 
பணிய விரும்பாத நீதான் 
எனக்காக உனது பாதத்திலேயே 
பணிவை வைத்துள்ளாயே! 
அதற்கு நன்றி! அதுபோதும் எனக்கு! 

புத்தனைப் போல் 
நீ இருந்துவிட்டுப் போ! 
நான் புத்தன் அல்லவே! 

மமதையில் ஆடவில்லை நான்! 
உன் மகா போதையில் ஆடுகிறேன்! 

உன் கண்களின் நாணேற்று ! 
கைகளையே அம்புகளாக்கு! 
உன் அன்பின் வேகத்தை அதிகப்படுத்து! 

சமுத்திரமாகவே வா! 
புழுதி நான் 
ஏன் மிஞ்சவேண்டும்? 
உன்னுள் கரையக் 
காத்திருக்கிறேன்! 

மலையை 
மயிரால் கட்டி இழுக்கும் 
மடையனாகவே 
இருந்துவிட்டுப் போகிறேன்! 

கன்னித்தமிழ்க் கவிஞன் நான்! 
உன் கால்கள் 
காலங்கள் என்ன 
யுகங்களையும் தாண்டி நடக்கட்டும்! 
என் கவிதையைத் தாண்டி 
நடந்துவிடுவாயா? 
கடந்துவிடுவாயா? 

நான் பேசுவேன்! 
பேசிக்கொண்டே இருப்பேன்! 
என் சப்தங்கள் 
வெறும் சருகுகள் அல்ல! 
உன் மெருகுகள்! 
!!!!!!!!^349^!!!!!!!!!

No comments:

Post a Comment