நீதியின் அரசே! முன்வாரும்!
நீரே எனக்கும் அருள்தாரும்!
வேதனை நெருக்கும் நாட்களிலே
வேண்ட உதவி செய்தவரே!
சோதனை வந்து கதறிடுவேன்!
சொல்கேட் டிடுவீர்! செவிசாய்ப்பீர்!
ஆதர வின்றிக் கைவிட்டால்,
அடியேன் நீதிக் கென்செய்வேன்? 1
பாதகம் செய்யும் மானிடரே!
பலகா லம்நான் பார்த்தவனே!
சோதர ராக என்மாட்சி
சொல்லிக் காத்து நிற்காமல்
தீதுகள் செய்தே இழுக்கெனக்குத்
தேடித் தருவீர் ஏனோ?நீர்
சூதினைப் பொய்யை நாடுவதேன்!
சூனியத் தின்பின் ஓடுவதேன்! 2
என்னைத் தனக்கே அன்பனென
ஏற்றுக் கொண்டார் ஆண்டவரும்!
முன்னர் முழங்கால் இட்டவனாய்
முறையிட் டுள்ளேன் செவிசாய்ப்பார்!
தன்னுட் சினமும் கொள்ளாதீர்!
தவிர்ப்பீர்! அமைதி காத்திடுவீர்!
‘மன்னா’ கொடுத்த ஆண்டவரை
மனத்தால் நம்பித் தொழுவீரே! 3
முறையாம் பலிகள் செலுத்திடுவீர்!
முன்னோர்க்கு உதவிய நம்மிறைவன்
குறைகள் நீங்கக் கண்பார்ப்பார்!
குறையா நிம்மதி கைவருமே!
நிறைவாய்த் திராட்சை, தானியங்கள்
நீடித் திருந்த நாட்களினும்
குறைவில் லாத மகிழ்வுநமைக்
கூடும் படிக்கே செய்திடுவார்! 4
உறையும் அமைதி மனத்துள்ளே!
உறக்கம் இனியும் தினமுண்டே!
இறைவன் நீதிக் கரசரென
இருக்கின் றார்நாம் தனித்தில்லை!
முறையாய்ப் பாது காத்திடுவார்!
முன்னமர்ந் தழைப்பீர்! கலங்காதீர்!
விரைவோம் ‘அப்ச லோம்’வருமுன்;
வேதத் தலைவன் துணையுண்டே! 5
No comments:
Post a Comment