Friday, August 26, 2011

சிலுவையில் வாழ்பவர்


 ‘சாவிகள்’ களைய வந்து
    சரித்திரம் விளக்கி  நின்று
சேவைகள் ஏற்க வன்றிச்
    செய்து,உயிர் தழைக்க வாழ்ந்து
‘பாவிகள் அழைத்துப் போகப்
    பரிவுடன் உயிரை விட்டே
ஆவியாய்த் தேற்றி நிற்பார்
    ஆவியுள் தூய ஆவி!           (1)

நோவுகள் நீங்கச் செய்து
    நொந்தவர் களிக்கப் பார்த்துக்
காவெனச் சிலுவை ஏறிக்
    காதலின் உயர்வு காட்டிப்
பாவிகள் பிழைக்கப் பாடு
    பட்டுயிர்த் தெழுந்த ஏசு
சாவினை வென்றெ ழுந்தார்!
    சரித்திரம் ஆகி வாழ்வார்!       (2)

                        (எழுசீர் விருத்தம்)
ஒருமுகம் ஓருரு ஓரிடம் இல்லா
    ஒருவனை உம்முள் தேடுவீர்!
திருமுகம் இரத்தம் வழியவே இறையடி,
                            திருடனைச் சேர்த்தவர் நாடுவீர்!
வெறும்,மொழி ஆறுதல் கொடுக்கலாம் ஆயின்
    விரைந்துத விடுங்கை மேலதாம்!
வருந்துயர் அறிந்தவ ராகவே சிலுவையில்
                            வாழ்பவர் அன்பினைப் பாடுவீர்!  (3)

No comments:

Post a Comment