Monday, November 14, 2011

02/’89 அழிவைத் தவிர்! ஆக்கமே உயிர்..!


சிக்கலெனும் பணிகளினைத் தவிர்க்க எண்ணிச்
   சிறப்பான முடிவுகளைத் தவிர்க்க வேண்டாம்!
இக்கூலிக்கு இவ்வேலை, என்றே சொல்லி
   இயல்புதிய உத்திகளை மறுக்க வேண்டாம்!
தக்ககுறிக் கோளில்லா மனிதன் போலத்
   தான்,ஏதோ பணிசெய்வோம் என்று,இ ராதே!
அக்கரையுன் மேல்வைப்போர் விமர்சிப் பார்காண்!
   அதைப்புரிந்து நடந்திடுவாய்! அடக்கு கோபம்!                 01

வக்கணைகள் பேசாதே! வகுப்பு வாதம்
   வளரக்கை கொடுக்காதே! வறுமை ஒன்றே
இக்கொடுமை களுக்கெல்லாம் மூலம் என்றே
   எடுப்பாகப் பேசிநிற்க எண்ணா தே!நீ
தக்கதெனப் படுவதுசெய்! தளர்ந்தி டாதே!
   தளர்வாரை யும்,ஊக்கித் தாங்க எண்ணு!
பக்கபல மென்றவரைப் படைசேர்க் காதே!
   பகுத்தாள நினைத்துன்னுள் பதர்,ஆ காதே!                        02

செய்கின்ற பணிசிறக்கச் சிந்த னைசெய்!
   சேர்ந்துழைக்க மறுத்ததையே சிதைத்தி டாதே!
உய்கின்ற வழியின்றிப் போகும் வாழ்வும்!
   உப்பிட்ட கைகளையே ஒடித்தி டாதே!
கைசெய்தல் கைங்கரியம்! கடனும் அஃதே!
   கைகொடுக்க வருங்கூலி பெரிதென்று எண்ணி
‘மை’செய்யும் செய்கைகளில் மயங்கி டாதே!
   ’மாலை’தனை விரைந்தழைக்க முயன்றி டாதே!              03

கண்ணுக்கு மையெழுது! அழகும் பார்நீ!
   கைகளிலே மையெழுதிப் பழகி டாதே!
புண்ணுக்கு மருந்திடுக! புண்,ம றைத்துப்
   புரையோட விடுவதற்குத் துணைபோ காதே!
கண்ணோடு கண்சேரக் காணும் காட்சி!
   கண்ணிரண்டாய் நின்றாலிங் கேது காட்சி!
மண்ணுக்குள் போவதற்குப் போட்டி வேண்டாம்!
   மரணத்தின் தேவதைக்குத்  தரகன் வேண்டாம்!                    04

                                 < 0 >

No comments:

Post a Comment