Monday, November 14, 2011

சிரிப்பிலே எழுந்த கவிதை..!

வானம் சிரிக்கக் கண்டேன் -மழைநீர்
                  வந்தே விழுந்தது!
மேகம் சிரித்து நின்றது -கண்ணில்
               மின்னல் தெறித்தது!


நிலவு சிரித்து மறைந்தது -வின்மீன்கள்
               வானை நிறைத்தன!
கடலும் சிரித்துக் குதித்தது  -மீன்கள்
                கரையில் துள்ளின!
அலைகள் சிரித்து நகர்ந்தது -கரையில்
                அலவன் ஒளிந்தது!
மரங்கள் சிரித்து நின்றன -கிளையில்
                 மலர்கள் மணந்தன!


களவு சிரித்துக் கலந்தது -ஊருள்
             அலர்கள் பரந்தது!
உழைப்புச் சிரித்துக் களைத்தது -உடலில்
             வேர்வை பூத்தது!
குழந்தை சிரித்த போதோ -எதிரில்
              கடவுள் தெரிந்தது!


என்னவள் சிரித்து நகர்ந்தாள் -நெஞ்சில்
              ஏக்கம் பிறந்தது!
எட்டி நடந்து மறைந்தாள் -என்முன்
              பிரிவு சிரித்தது!
கவிஞன் சிரித்து நின்றான் -உமக்குக்
             கவிதை கிடைத்தது!
                                    < 0 >

No comments:

Post a Comment