Monday, November 14, 2011

கண்ணுறங்கு மகளே! கண்ணுறங்கு..!


[முதலமைச்சர் பிறந்த நாளுக்கு ஏழைகளுக்கு 5 படி அரிசி அளிக்கப்படும்-செய்தி]

கண்ணுறங்கு மகளே!நீ
        கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கஞ்சி யின்னும் வரவில்லை
       கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

அரசாணை வரவில்லை,
       அஞ்சுகமே கண்ணுறங்கு!
அதுமெல்லப் பிரசவிக்கும்!
       அதுவரைக்கும் கண்ணுறங்கு!

பஞ்சையென் வாழ்வினிலே
       பட்டுப்போல் வந்தவளே!
பஞ்சமிது பட்டுப்போம்
       நாள்வரலை கண்ணுறங்கு!

நெஞ்சுதைத்துப் பயனில்லை!
      நேசமணி ! கண்ணுறங்கு!
நெடுநாளைக் கனவிதுவும்
      நிசமாகும் கண்ணுறங்கு!

காரிருளை மையாக்கிக்
        கண்களிலே இட்டவளே!
நீராலே தரைநனைய
       நிலமகளும் தாங்காளே!

நீராடி அப்பனுமே
      நெடுங்கிடையாய்க் கிடக்கின்றான்!
போராடி அழவேண்டாம்!
      பொய்த்தூக்கம் அவன்கலையான்!

உன்பிறந்த நாளிதிலே
       உழக்கரிசி வீட்டிலிலை!
ஏன்பிறந்தாய் எனக்கேட்க
      என்மனசு தாளவில்லை!

எட்டுப்பட்டி ஊர்த்தலைவர்
       எடுக்கின்றார் பிறந்தநாள்!
கிட்ட,இதோ நாள்வருது!
       கிடைக்குமடி அரிசியுமே!

தட்டித் தவிடெடுப்பேன்!
       தரமான பாலிடுவேன்!
கட்டித் தங்கமேநான்
       கஞ்சியுமே தந்திடுவேன்!

கட்டிவெல்லம் இட்டுத்தாரேன்!
       கற்கண்டும் அதிலிட்டுக்
கட்டாயம் நான்தாரேன்!
       கரையாதே கண்ணுறங்கு!

காவி சுவர்விட்டுக்
        கழன்று விழுகுதடி!
ஆவி போவதுபோல்
        அழுவாதே பொறுத்திடடி!

துன்பம் பழகிக்கொள்!
        தூங்கிடவும் கற்றுக்கொள்!
அன்பே! இரத்தினமே!
        ஆருயிரே! கண்ணுறங்கு!

கண்ணுறங்கு மகளேநீ
          கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கஞ்சி யிதோ வந்துவிடும்
          கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

                                < 0 >



No comments:

Post a Comment