தமிழின்று புகழுற்றதே -அஃது
தமிழரின் எண்ணம்போல் திகழ்வுற்றதே!
அமிழ்திங்கு நிலமுற்றதே! -சுற்றும்
அகிலத்து மொழியெலாம் பலமற்றதே! (தமிழின்று..)
தமிழின்று நிலைபெற்றதே! -இன்று
தமிழ்முன்னே மற்றவை நிலைகெட்டதே!
தமிழின்று பழிகெட்டதே! -அதைத்
தாழ்த்திய நாவுகள் மொழியற்றதே! (தமிழின்று..)
எழுகதிர் தமிழொத்ததே -இனி
இரவில்லை! குறைவில்லை! விதிசெத்ததே!
பழுதென்னும் சொல்விட்டதே! -இதன்
பலனிங்கு பலர்நாவில் தேன்சொட்டுதே! (தமிழின்று..)
தமிழின்று கடலுண்டதே! இனித்
தவிக்காது தமிழின்று அடல்கொண்டதே!
தமிழ்ப்பாதம் தழுவுற்றுமே -கடல்
தவற்றினுக் கழுதுதன் கரைநிற்குமே! (தமிழின்று..)
நிலவினைத் தமிழ்தொட்டதே! -வேற்று
நிலமென்ன கிரகங்கள் கைநீட்டுதே!
*அலமங்கள் தாம்விட்டுமே -மக்கள்
அகமகிழ் வார்ஒன்றி மேம்பட்டுமே! (தமிழின்று..)
*அலமங்கள்-துயரங்கள்
புத்தாண்டு நிலம்பார்க்குமே! தமிழ்
பொதுமொழி எனப்பூமி வலம்பார்க்குமே!
புத்தாண்டு வான்பார்க்குமே! -தமிழ்
பொய்க்காது நன்மைகள் தான்சேர்க்குமே! (தமிழின்று..)
< 0>
No comments:
Post a Comment