Monday, November 14, 2011

நிலவைத் தொட்டது தமிழின்று..!



தமிழின்று புகழுற்றதே -அஃது
   தமிழரின் எண்ணம்போல் திகழ்வுற்றதே!
அமிழ்திங்கு நிலமுற்றதே! -சுற்றும்
    அகிலத்து மொழியெலாம் பலமற்றதே! (தமிழின்று..)

தமிழின்று நிலைபெற்றதே! -இன்று
   தமிழ்முன்னே மற்றவை நிலைகெட்டதே!
தமிழின்று பழிகெட்டதே! -அதைத்
   தாழ்த்திய நாவுகள் மொழியற்றதே!                       (தமிழின்று..)

எழுகதிர் தமிழொத்ததே -இனி
   இரவில்லை! குறைவில்லை! விதிசெத்ததே!
பழுதென்னும் சொல்விட்டதே! -இதன்
   பலனிங்கு பலர்நாவில் தேன்சொட்டுதே!             (தமிழின்று..)

தமிழின்று கடலுண்டதே! இனித்
   தவிக்காது தமிழின்று அடல்கொண்டதே!
தமிழ்ப்பாதம் தழுவுற்றுமே -கடல்
   தவற்றினுக் கழுதுதன் கரைநிற்குமே!                   (தமிழின்று..)

நிலவினைத் தமிழ்தொட்டதே! -வேற்று
   நிலமென்ன கிரகங்கள் கைநீட்டுதே!
*அலமங்கள் தாம்விட்டுமே -மக்கள்
   அகமகிழ் வார்ஒன்றி மேம்பட்டுமே!                      (தமிழின்று..)
                             *அலமங்கள்-துயரங்கள்
புத்தாண்டு நிலம்பார்க்குமே! தமிழ்
   பொதுமொழி எனப்பூமி வலம்பார்க்குமே!
புத்தாண்டு வான்பார்க்குமே! -தமிழ்
   பொய்க்காது நன்மைகள் தான்சேர்க்குமே!           (தமிழின்று..)

                                         < 0>

No comments:

Post a Comment