Monday, November 14, 2011

குறும்பாக்கள்

         சாந்தி உறங்குமிடம்..!


வன்முறை பெருகி வளருது நாட்டில்!
புதிய சக்திகள்! புதுப்புது உத்திகள்!
நிதம்நிதம் தேவை நெருக்கடி நிலைமை!
இதந்தரும் செய்தியோ இன்றும்
காந்தி சமாதியில் சாந்தி உறங்குது!
                               < 0 >

          ஒருதாரக் கணவன்..!

உன்னை விரும்பியபின்
உறக்கத்தை, மரணத்தை
எப்படித் தழுவுவேன்
இன்றும் நான்உன்
ஒருதாரக் கணவனே..!
                 < 0 >

          ஈசல்கள் பெண்கள்..!

கலியாண மழையில் பிறந்து
வரதட்சணைக்
கனலில் மடியும்
மலிவான ஈசல்கள்..!
                  < 0 >
          (10-11-11)  ஏனோ..?

உயிருள் ளவனாய் இருக்கும் போதும்
           உணர்வின் றிருக்கிறேன்!    -ஏதோ
           உலவித் திரிகின்றேன்!
தயிரின் உள்ளே தங்கிய நெய்யாய்த்
           தனித்து நிற்கிறேன்!   - ஏனோ
           தவித்தே வாழ்கிறேன்!
வயிற்றின் உள்ளே உணவாய் வந்தாய்
           வளத்தைப் பெறலில்லேன்!   - இன்னும்
           வாய்திறந் திருக்கின்றேன்!
பயிரிட் டவனே ஏனோ நீயும்
           பார்த்தே நிற்கிறாய்?    -தண்ணீர்
           பாய்ச்சா திருக்கிறாய்!
                                < 0 >

          ( 08/’2009)   தமிழர் இரத்தம்..

நீலத் திரைக்கடல் ஓரம் நின்றே
நித்தம் தவம்செய் குமரிப் பெண்ணே!
காலைத் தழுவுதே தமிழர் இரத்தம்
கண்கள் திறக்க மறுப்ப தும்,ஏன்?
                                 < 0 >

No comments:

Post a Comment