Monday, November 14, 2011

மக்கள் வலி, அரசியலார் வலிமை..!


தணல்நெருப்பாம் லஞ்சத்தில் குளித்துத் தானே
           தகதகென மினுங்குவராம் அலுவ லர்கள்!
மணங்கமழும் சந்தணம்போல், இவரைப் பூசி
            மக்களாட்சி நடத்துகிறார் கட்சிக் காரர்!
வணங்குகிற நிலைபெற்ற தலைவர் யாரும்
          ’வாங்குபவர்’ தமைப்பிடித்துத் தடுத்த துண்டோ?
கணம்தோறும் அவர்பயந்து வாங்கி னாலும்
            கவலையிலே வாழ்நாட்கள் கழியும் தானே!                 01

வியர்த்திவர்கள் சேர்க்கின்ற விளைச்சல் தம்மை
          வேனிலைப்போல் அரசியலார் கனியச் செய்து
வயிற்றினிலே பசியடக்கப் போட்டுக் கொள்ளும்
            வாய்ப்புண்டே? கட்சிகளின் வளர்ச்சி சாட்சி!
இயல்பான தடைகளினைப் பொறுப்பார் மக்கள்!
           இருந்தாலும் இவர்போலத் திருடித் தின்னும்
’வயலெலிகள்’ அறியாத உழவர்’ இங்கே
           வாழ்கின்றார் எனமறுக்கும் பெரியோர் உண்டோ?     02

நால்வருணக் கொடுமையைப்போல் இலஞ்சம் தன்னை
        நம்மிடையே அழிக்கவொரு பெரியார் இன்னும்
‘கால்பதித்து’ வரவில்லை! கட்சிக் கென்று
        ’காசடித்து’த் தேர்தலுக்குச் செலவு செய்வோர்
தோலுரித்துப் பார்ப்பானும் தோன்ற வில்லை!
         தொண்டென்றே செய்யவந்த ‘ஆண்ட வர்கள்’
வாலிபத்தில் சிறைசென்றும் பெரியோ ராக
         வசதியுடன் வாழ்வதுதான் வரலா றாமே!                             03

வாங்குபவர் கைகளிலும் வயிறி ருக்கும்!
          வருபசியாம் இலஞ்சமிலாது உழைப்பும் இல்லை!
தாங்குபவர் இவர்களுக்கும் இல்லை என்றால்
          தன்னாலிப் பாடுகளும் தவிர்ந்தி டாதோ?
ஏங்குகிறேன், ‘மக்களாட்சி’, ‘தேர்தல் என்னும்
           ஏலத்திற்கு’ ஏன்வந்தது  என்றே! ‘லஞ்சம்’
ஈங்கிருக்கும் மக்களுக்கு வலியே! மாற்றம்
          இங்குவர மறுப்பவர்க்கு வலிமை தானே!                             04

                                           < 0 >

No comments:

Post a Comment