Thursday, October 20, 2011

நம்பிக்கை தளராதே



 
நம்பிக்கை தளராதே நன்னெஞ் சே!நீ
    நன்றிசொல்லிப் பாடிடவே மறந்தி டாதே!
நம்மீட்பர் கற்பாறை, நமது வாழ்வு!
   நம்மீது நாள்தோறும் பொழிவார் அன்பு!

காரிருளில் கண்ணீரைக் குடித்த போதும்,
   ‘காட்டிடுவாய் யாருனது கடவுள் என்று
கூரறுவாட் சொற்களுன்னைக் குத்தி னாலும்,
   கொடுமைகளை நினைத்துள்ளம் குன்றி டாதே!
யோர்தானை எர்மோனை மீசார் தன்னை
   யோசிப்பாய்! அவரன்பை எண்ணிப் பாடு!
சீர்செய்த அவருதவி சிந்தி! தேடு!
   சிதைகின்ற மனவுறுதி சேர்த்துக் கூட்டு!

நீர்தேடி அலைகின்ற கலைமான்போல
   நித்தமவர் புகழ்பாடும் நினைப்பை உன்னுள்
சேர்த்தெடுத்துக் கலங்காதே சேவி! பாடு!
   சிற்றலையைப் பேரலையும் விழுங்கு தல்போல்
நேர்த்தியுடன் அவர்வருவார் நீங்கும் துன்பம்!
   நிந்தைகளும் பிரிந்தோடும்! நேசர் சொன்ன
வார்த்தைகளை மறவாதே! வாக்கை நம்பு!
   வறண்டநிலம் செழிப்பாகும் வருகை உண்டு!   

நம்பிக்கை தளராதே நன்னெஞ் சே!நீ
   நன்றிசொல்லிப் பாடிடவே மறந்தி டாதே!
நம்மீட்பர் கற்பாறை, நமது வாழ்வு!
   நம்மீது நாள்தோறும் பொழிவார் அன்பு!


                     < 0 >

No comments:

Post a Comment